சீரியல் அபத்தங்கள் – 2 : சித்தி 2...ராதிகாவால் டிராக் மாறும் கதை
சென்னை : சன் டிவி.,யில் மெகா சீரியல்களை பிரபலமாக்கியதில் ராதிகாவின் பங்கு குறிப்பிடத்தக்கது. சித்தி, அண்ணாமலை, செல்வி, வாணி ராணி என வரிசையாக அவர் நடித்த சீரியல்கள் மிக பிரபலம். இதில் டாப்பில் இருப்பது சித்தி தான். ராதிகாவின் சீரியல் வருகை, டைட்டில் பாடல் ஆகியன சித்தி சீரியலை மிக பிரபலமாக்கின.
எத்தனை சீரியல்கள் வந்தாலும் ராதிகாவின் சீரியல் மற்றும் திருமுருகன் சீரியல்களுக்கு எப்போதும் தனி மவுசு தான். பிரைம் டைமை கைப்பற்றவும், டிஆர்பி.,யில் முதலிடம் பிடிக்கவும் இவர்கள் இருவரின் சீரியல்களுக்கும் எப்போதும் போட்டா போட்டி தான்.
2020 ஜனவரி மாதம் துவங்கப்பட்ட சித்தி 2 சீரியல், வழக்கம் போல் ராதிகாவை மையப்படுத்திய கதையாக ஆரம்பிக்கப்பட்டது. எளிமையான நடுத்தர குடும்ப தலைவியாக, பள்ளி ஆசிரியையாக தோன்றி அனைவரின் மனதையும் கவர்ந்தார் ராதிகா. அழகான குடும்பம், அதில் வில்லியாக வரும் சின்ன மருமகள், மருமகளின் இடையூறுகளை சமாளிக்கும் மாமியாராக ராதிகா என கதை சென்றது.

ராதிகாவை முன்னிலைப்படுத்திய கதை
பிறகு ராதிகாவின் வீரதீர செயல்களை முன்னிலைப்படுத்தி மல்லிகா தேவி என்ற பணக்கார பெண்ணாக மீரா கிருஷ்ணாவின் கேரக்டர் கொண்டுவரப்பட்டது. கல்வி குழுமத்தில் மல்லிகா செய்யும் முறைகேடுகளை, தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ய வைத்ததை சாரதாவாக வரும் ராதிகா கண்டுபிடித்து, சட்டப்படி நிரூபிக்க போராடுவதாக கதையை கொண்டு சென்றனர். சாரதாவிற்கு எதிராக வேலை பார்க்கும் சின்ன மருமகள் நந்தினி, அவருக்கு உதவி செய்யும் சாரதாவின் நாத்தனார் குடும்பம் என்று காட்டினார்கள்.

வெளியேறிய ராதிகா
சித்தி 2 சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், சினிமா மற்றும் அரசியலில் பிஸியானதால் சீரியலில் இருந்து பாதியிலேயே விலகுவதாக அறிவித்தார். இதனால் அவர் கணவருடன் சிங்கப்பூர் சென்று விட்டதாக கதையை மாற்றினார்கள். இதனால் சித்தி 2 சீரியலின் மொத்த கதையும் டிராக் மாறி, வெண்பாவை மையமாக வைத்து கதை போக துவங்கியது.

திடீரென பொங்கிய மல்லிகா
கவின் - வெண்பா திருமணத்தை மல்லிகா ஏற்றுக் கொண்டதாக நடித்து பழிவாங்குவதாக எப்படி எப்படியோ கதை போகிறது. ஆனால் கவின் - வெண்பா திருமணம் நடந்து பல மாதங்கள் ஆன பிறகு தற்போது திடீரென அதை காரணமாக கூறி மல்லிகா, அவர்களை வீட்டை விட்டு அனுப்புவதும், தான் வளர்த்ததற்காக ஒரு வருடத்திற்குள் ஒரு கோடியை சம்பாதித்து தர வேண்டும் என மகனிடம் சொல்வது அபத்தத்தின் உச்சம்.

காணாமல் போன கேரக்டர்கள்
செல்ல மகள் என கொண்டாடிய வெண்பாவின் வாழ்க்கையில் இத்தனை அமளிதுமளி நடக்கும் போது, தொடர்பு கொள்ள முடியாதபடி வேற்று கிரகத்திற்கே சென்றது போல் சித்தி குடும்ப உறுப்பினர்களை மையமாக்கியது நம்ப முடியாமல் உள்ளது. அதே போல் சித்தி குடும்பத்தை நம்பி மட்டுமே இருப்பதாக காட்டிய கோமதி நாயகத்தின் குடும்பத்தையும் காணவில்லை.

முழு நேர வில்லியான மல்லிகா
ராதிகா இருக்கும் வரை இருந்த பல கேரக்டர்கள், ராதிகா சீரியலில் இருந்து வெளியேறிய பிறகு காணாமல் போயின. ராதிகா இருக்கும் வரை மிகப் பெரிய தொழிலதிபர் என பிஸியானவராக இருந்த மல்லிகா, ராதிகா வெளியேறிய பிறகு முழு நேர வில்லியாக மாற்றப்பட்டு, மருமகளை கொடுமைபடுத்துவதையே வேலையாக வைத்திருப்பதாக காட்டப்படுகிறது.

5 பேரை வைத்து தான் கதையா
மல்லிகாவின் வீட்டிலேயே சுய நினைவை இழந்தவராக இருக்கும் தர்மா, கவின் பிஏ.,வாக வரும் ரவி என படிப்படியாக கேரக்டர்கள் குறைக்கப்பட்டு வருகின்றன. தற்போது மல்லிகா, கவின், வெண்பா, யாழினி, யாழியின் அம்மாவாக வரும் உமா ஆகியோரை வைத்து மட்டுமே கதை மெதுவாக நகர்த்தப்படுகிறது.

இதெல்லாம் ரொம்ப ஓவர்
கவின் - வெண்பாவை பழிவாங்குவதற்காக அவர்கள் வேலை தேடிச் செல்லும் கம்பெனிகளை எல்லாம் மல்லிகா விலைக்கு வாங்குவதாக காட்டுவது, வெண்பா வேலை தேடி செல்லும் போது பெரிய நிறுவனத்திற்கே சிஇஓ.,வாக இருந்ததாக கூறப்படும் கவின், உணவு டெலிவரி வேலை செய்ய யோசிப்பதாக காட்டுவது கொஞ்சமும் பொருந்தாமல் ரொம்ப ஓவராக உள்ளது.


Click it and Unblock the Notifications











