twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆடம்பர செலவுக்காக குற்றவாளிகளாக மாறும் இளையசமுதாயம்!: நீயா நானாவில் அதிர்ச்சி

    By Mayura Akilan
    |

    Neeya Naana
    அப்பா நாலணா குடுப்பா....

    நாலணாவுக்கு என்ன செலவு இருக்கு? பத்துபைசா தர்றேன்... பாட்டி கடையில மிட்டாய் வாங்கிட்டு பள்ளிக்கூடம் போ கண்ணு...

    இது 80களில் பள்ளிக்கு சென்றவர்களின் வீடுகளில் நடந்த உரையாடல். 90களில் கல்லூரி சென்று படிக்கும் போது கூட 20 ரூபாய் செலவிற்கு வாங்குவது கூட அதிகம்தான். ஆனால் இன்றைக்கோ எல்.கே.ஜி செல்லும்போதே தினசரி 30 ரூபாய் அல்லது 50 ரூபாய் சாக்லேட், ஸ்நாக்ஸ் வாங்கித்தர வேண்டிய நிலைக்கு பெற்றோர்கள் தள்ளப்பட்டுவிட்டனர்.

    இதுவே வளர்ந்து கல்லூரி செல்லும்போது 500 லிருந்து 1000 ரூபாய் வரை கூட பாக்கெட் மணி கொடுக்கவேண்டியிருக்கிறது. தன்னுடன் படிக்கும் மாணவர்கள் ஆடம்பரமாக செலவு செய்கின்றனரே தானும் அதே போல செலவு செய்யவேண்டும் என்ற எண்ணம்தான் பெற்றோர்களிடம் பாக்கெட் மணி அதிகம் கேட்டு செலவு செய்யத் தூண்டுகிறது.

    இந்தவாரம் நீயா நானா நிகழ்ச்சியில் 'பாக்கெட் மணி' பற்றி பெற்றோர்களும், பிள்ளைகளும் விவாதித்தனர். தங்களுடைய பிள்ளைகளுக்கு பணத்தின் அருமை தெரியவில்லை என்று பெற்றோரும், அப்பா, அம்மா கொடுக்கும் பணம் போதவில்லை என்று குழந்தைகளும் மாறி மாறி புகார் தெரிவித்தனர்.

    பெற்றோர் தரும் பணம் போதவில்லை அதற்காக வீட்டில் வைத்திருக்கும் பணத்தை திருடுகிறோம் என்று நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து இளைய தலைமுறையினரும் தெரிவித்தனர். இது மட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சிக்காக எடுத்த கணக்கெடுப்பு ஒன்றில் 70 சதவிகித கல்லூரி மாணவிகள் பெற்றோர் கொடுக்கும் பாக்கெட் மணியை தவிர்த்து வீட்டில் பணம் திருடுகிறோம் என்று ஒப்புக்கொண்டுள்ளனர்.

    இளைய சமுதாயத்தினரின் இந்த பணம் திருட்டு ஆபத்தானது என்று தெரிவித்தார் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இளங்கோ. உலகம் முழுவதும் உள்ள இளைய தலைமுறையினர் ஆடம்பர செலவிற்காக பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தெரிவித்தார். இளைஞர்கள் ஆட்களை கடத்துவதும், திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் நடக்கிறது. இது பெண் பிள்ளைகள் என்றால் விபச்சாரம் செய்வதற்குக்கூட தயங்குவதில்லை என்றும் அவர் எச்சரித்தார்.

    இதற்குக் காரணம் பிள்ளைகள் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்து அவர்களுக்கு செல்லம் கொடுத்து கெடுத்தது பெற்றோர்கள்தான். எனவே திடீரென்று அவர்களுக்கு பணம் கொடுப்பதை நிறுத்தினால் அவர்களின் எண்ணம் வேறு விதமாக வடிவெடுக்கிறது. எனவே ஆடம்பரமோகத்தை குறைத்து பணத்தின் அருமையை உணர்ந்து செலவு செய்யவேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினர்.

    இதேபோல் நிகழ்ச்சியில் பேசிய மற்றொரு சிறப்பு விருந்தினர் நாகப்பன் புகழேந்தி பணத்தின் அருமையை குழந்தைகள் உணரவேண்டுமானால் அவர்களின் கையில் பணத்தை கொடுத்து கணக்கு கேட்கலாம். அதனால் எதற்க்கு எவ்வளவு பணம் செலவு செய்யவேண்டும் என்பது அவர்களுக்கு தெரியவரும் என்றார்.

    பணத்தின் அருமையை உணர்தும் புத்தகம் ஒன்றை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக வழங்கப்போவதாகவும் நாகப்பன் தெரிவித்தது சிறப்பு அம்சம்.

    இன்றைய கால கட்டத்தில் நுகர்வு கலாச்சாரம் அதிகமாகிவிட்டது இதன்காரணமாகவே பெற்றோர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு பணம் சம்பாதிக்கிறார்கள் என்பதை உணராமலேயே ஆடம்பரச் செலவு செய்கின்றனர் இளைய தலைமுறையினர். இந்த சூழ்நிலையில் நடத்தப்பட்ட 'நீயா, நானா' விவாதம் பயனுள்ளதாகவே இருந்தது என்கின்றனர் ரசிகர்கள்.

    English summary
    Neeya Naana a talk show which brings two polarized sections of society to a single platform and encourages them to iron out their difference.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X