'என் தேசம் என் மக்கள்': இஞ்சினியரிங் கல்வி தகுதியானதுதானா?...
தமிழ்நாட்டில் தடுக்கி விழுந்த இடமெல்லாம் பொறியியல் கல்லூரிகள் முளைத்திருக்கின்றன. அனைத்து பாடங்களிலும் பாஸ் ஆனாலே போதும் எதையாவது விற்று இஞ்சினியரிங் படிக்க வைத்து விடவேண்டும் என்று தவிக்கின்றனர் பெற்றோர்கள்.
தங்களுடைய குழந்தைக்கு அந்த படிப்பை படிக்க தகுதியிருக்கிறதா? படித்து முடித்து வெளியே வரும் போது அவன் அதற்குரிய முதிர்ச்சியுடன் வெளியே வந்து வேலை செய்வானா? என்பதைப் பற்றி எல்லாம் கவலையில்லை.
நம் மகன் இஞ்சினியர் என்று பெருமையாக சொல்லிக் கொள்வதற்காகவாவது அந்தப் படிப்பில் சேர்த்து விட்டு கடைசியில் மகன் அரியர் வைத்திருக்கிறானே என்று அங்கலாய்ப்பார்கள். ப்ளஸ் டூ படித்துவிட்டு மேல் படிப்பிற்காக காத்திருப்பவர்களுக்காகவே மே தினத்தில் சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பான என் தேசம் என் மக்கள் நிகழ்ச்சியில் பொறியியல் படிப்பின் இன்றைய நிலை பற்றி விவாதிக்கப்பட்டது.

ரூ 5 ஆயிரம்
லட்சக்கணக்கில் செலவு செய்து படித்துவிட்டு 5000 ரூபாய் சம்பளம் வாங்கும் இளைஞர் தன்னுடைய நிலையை பகிர்ந்து கொண்டார். தாயின் தாலிச் சங்கிலியை அடகு வைத்து படித்து, நிலத்தை விற்று வாங்கிய இஞ்சினியரிங் சர்டிபிகேட் கடைசியில் வாழ்க்கைக்கு உதவவில்லை என்று ஆதங்கப்பட்டார் அந்த மாணவர்

சென்னையே நரகம்
ஆசை ஆசையாய் இஞ்சினியரிங் படித்துவிட்டு வேலை தேடி சென்னை வந்த தனக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது என்றார் கிராமத்தில் இருந்து வேலை தேடி சென்னை வந்த இளம் பெண் ஒருவர்.

பணம் வாங்கிட்டாங்க
நல்ல வேலை தருவதாக கூறி கல்லூரிக்கே வந்து கேம்பஸ் இன்டர்வியூ செய்தவர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு வேலை தராமல் இழுத்தடிப்பதாக கூறினார் ஒரு மாணவர்.

சில இடங்களில் நடக்கிறது.
இந்த புகார் பற்றி மனித வள மேலாண்மைப் பிரிவில் வேலை பார்ப்பவர்களிடம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கோபிநாத் கேட்டதற்கு ஒரு சில ஹெச் ஆர் இது போல செய்கின்றனர் என்று ஒத்துக் கொண்டார்.

பல லட்சம் செலவு
இன்றைக்கு இஞ்சினியரிங் படிப்பு என்பது கவுரவத்திற்காக படிக்கின்றனர். நம்மால் இது முடியுமா? என்று யோசிப்பதில்லை. கடந்த ஆண்டுகளில் மட்டும் அதிக அளவில் மதிப்பெண்கள் எடுத்து அண்ணா யுனிவர்சிட்டியில் படிக்க வாய்ப்பு கிடைத்த மாணவர்கள் கூட தற்கொலை செய்து கொண்ட நடைபெற்றது.

நான்கில் ஒருவர்
தமிழக பொறியியல் கல்லூரிகளில் படித்து வெளியே வரும் மாணவர்களில் நான்கில் ஒருவர்தான் அதற்குரிய தகுதியுடன் இருக்கிறார் என்று சமீபத்திய சர்வே ஒன்றில் தெரியவந்துள்ளது.

என்ன கண்டுபிடிக்கின்றனர்
பாடத்தை மனப்பாடம் செய்து அதில் மதிப்பெண்கள் எடுப்பவர்களுக்கு எந்த மதிப்பும் இருப்பதில்லை. வேலைக்கு எடுப்பவர்கள் அந்த மாணவனுக்கு டெக்னிக்கலாக என்ன தகுதி இருக்கிறது என்பதைத்தான் பார்க்கின்றன என்பது ஹெச் ஆர் தரப்பினர் வாதம். அவர்கள் செய்யும் புராஜெக்ட் பற்றியும், என்ன கண்டுபிடிக்கின்றனர் என்பது பற்றியும் பேசப்பட்டது.

100 சதவிகித வேலை வாய்ப்பு
இன்றைய கல்லூரிகள் விளம்பரம் செய்யும் போதே 100 சதவிகித வேலை வாய்ப்பு என்றுதான் விளம்பரம் செய்கின்றனர். ஆனால் மாணவர்கள் என்ன கண்டுபிடித்திருக்கின்றனர் என்பதைப் பற்றி சொல்வதில்லை. அது அவசியம் என்றனர்.

பியூஸ் போடத் தெரியலை
வீட்டில் எலக்ட்ரிகல் இஞ்சினியர் படித்த மாணவர் இருந்தாலும் பியூஸ் போட எலக்ட்ரியசனை நாட வேண்டிய நிலையில் இருக்கிறது இன்றைய கல்வியின் தரம். வேலையை நோக்கி ஓடுகிற சமுதாயமாகிவிட்டது என்றார் நிகழ்ச்சியில் பங்கேற்ற நிபுணர்.

அனுபவத்தை வளருங்கள்
இஞ்சினியரிங் படித்தவர்கள் அதற்கேற்ப அனுபவத்தை வளர்த்துக் கொள்ள சிறிய கம்பெனியில் வேலை கிடைத்தாலும் பார்ப்பது அவசியம் என்றனர். இன்றையக்கு பொறியியல் கல்வி பெரும் வியாபாரமாகிவிட்டது. பணம் கொடுத்தால் யார் வேண்டுமானாலும் பொறியியல் படிப்பு படிக்கலாம் என்றாகிவிட்டது. எனவே படிப்போடு அதற்கேற்ப அனுபவத்தை வளர்த்துக் கொள்வது அவசியம் என்றனர்.

சமூகத்திற்காக படியுங்கள்
இன்றைக்கு எல்லோருமே பணத் தேவைக்காக மட்டுமே படிக்கின்றனர். நம்முடைய படிப்பு இந்த சமூகத்தின் தேவையை நிறைவு செய்கிறதா என்று கேள்வி எழுப்பினார் கோபிநாத். இன்றைய சமூகத்திற்கு நிறைய தேவை இருக்கிறது இளைஞர்கள் அதை சிந்திக்க வேண்டும் என்றார்.
பொறியியல் கல்லூரிக்கு விண்ணப்பம் வழங்க உள்ள நிலையில் இந்த நிகழ்ச்சி பெற்றோர்களை கொஞ்சம் யோசிக்க வைத்திருக்கும் என்பதே உண்மை.


Click it and Unblock the Notifications











