புதிய சேனல் ஆரம்பிக்கிறார் சக்சேனா... பொங்கலன்று ஒளிபரப்பு தொடக்கம்!

சன் டிவியை பெரும் மீடியா சக்தியாக உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர் சக்சேனா.
ஆனால் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, சன் பிக்சர்ஸ் தொடர்பாக எழுந்த பல்வேறு குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டார் சக்சேனா. அவரது ஆதரவாளர்களும் சிறைக்குப் போனார்கள்.
பல மாத சிறைவாசத்துக்குப் பிறகு வெளியில் வந்த சக்ஸேனா மற்றும் அவரது ஆதரவாளர்களை, சன் டிவி வெளியில் அனுப்பிவிட்டது.
வெளியில் வந்த சக்சேனா, அய்யப்பன் உள்ளிட்டோர் இணைந்து சாக்ஸ் பிக்சர்ஸ் எனும் நிறுவனத்தை ஆரம்பித்து, படங்களைத் தயாரிக்க ஆரம்பித்துள்ளனர்.
இந்த பேனரில் வரும் முதல் படம் சாருலதா. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சத்யம் திரையரங்கில் நடந்தது.
விழாவில் பேசிய சக்ஸேனா, சன் டிவி தனக்கு செய்த துரோகம் குறித்து முதல் முறையாகப் பேசினார்
தான் எவ்வளவோ விசுவாசமாக இருந்ததாகவும், சன் டிவி வளர்ச்சிக்காக பெரும்பாடு பட்டதாகவும், ஆனால் சிறையில் மாட்டிக் கொண்டு தவித்த நேரத்தில் தனக்கு எதுவும் செய்ய சன் டிவி நிர்வாகம் முன்வரவில்லை என்றும் அவர் கூறினார்.
"என்னைக் காப்பாற்ற எதுவும் செய்யாதது மட்டுமல்ல, நான் ஜாமீனில் வந்ததும் முதல்வேலையாக என்னை வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். இதை தாங்க முடியவில்லை," என்றார் சக்சேனா.
மேலும் அவர் கூறுகையில், "வரும் ஜனவரி 15, பொங்கல் அன்று புதிய தமிழ் தொலைக்காட்சியை ஆரம்பிக்கவிருக்கிறோம். இது முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும்," என்றார்.


Click it and Unblock the Notifications











