அழகு தொகுப்பாளினி ரம்யாவுக்கு வந்த காதல் கடிதங்கள்!

உலகத்திலேயே சென்னைதான் எனக்கு பிடித்த ஊர். ஏனென்றால் நான் பிறந்த இடமாயிற்றே. எல்லோர் மாதிரியும் என்னையும் என்ஜினீயர், டாக்டர் ஆக்கி அழகு பார்க்க நினைத்தது என் குடும்பம். அதில் எல்லாம் மனது ஒட்டவே இல்லை. ஏதாவது வித்தியாசமாகச் சாதிக்க வேண்டும் என தோன்றியது. அதனால்தான் இந்த துறைக்கு வந்தேன்.
வைஷ்ணவா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேசன் முடித்த பிறகு மாடலிங் செய்து வந்தேன். அப்போதுதான் காம்பியரிங்கில் ஆர்வம் வந்தது. இன்றைக்கு காம்பியரிங் ஆசையில் தினமும் புதியதாக நிறைய பேர் வருகிறார்கள். காம்பியரிங் ஒன்றும் சுலபமான வேலை அல்ல. எவ்வளவு பெரிய ஆட்கள் வந்தாலும் எங்களைத்தான் எல்லோரும் கவனிப்பார்கள். காம்பியரிங் செய்யும்போது தமிழில் பேசுவதையே விரும்புகிறேன்.
எதையுமே வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என நினைப்பவள் நான். இதற்காக நிறைய இழந்திருக்கிறேன். திரைப்பட இயக்குனர் ஆக வேண்டும் என்பதுதான் என் கனவு, ஆசை, லட்சியம் எல்லாமே. கல்லூரி காலத்தில் இரண்டு குறும்படங்களை இயக்கிய அனுபவம் எனக்கு உண்டு.
காம்பியரிங் மூலமாக நிறைய சினிமா உலக நட்பு கிடைத்தது. அவர்களும் உதவி இயக்குனராக பணிபுரிய அழைக்கிறார்கள். காம்பியரிங்கில் சிக்கிக்கொண்டதால் என்னால் அங்கு எளிதாகப் போக முடியவில்லை. என்றைக்கு இந்த துறை போதும் என்ற எண்ணம் வருகிறதோ, அன்றைக்கு ஒடிப்போய் சினிமாவில் சாதித்து விடுவேன். கமர்ஷியல் சினிமாக்கள்தான் இன்றைய சினிமா உலகத்தை ஆட்சி செய்கின்றன. எப்போதாவது வருகின்ற ஒன்றிரண்டு பெண் இயக்குனர்கள் கூட உணர்வுப்பூர்வமான கதைகளுக்குதான் முக்கியத்துவம் தருகிறார்கள். அந்த நிலையை நான் மாற்றுவேன்.
சினிமாவில் நடிப்பதற்கு தினமும் அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் அதில் எனக்கு ஆர்வம் சுத்தமாக இல்லை. சினிமாதான் வாழ்க்கையென்று கிளம்பியிருந்தால் இதுவரை நிறைய படங்களில் என்னையும் சராசரி நடிகையாக இந்த உலகம் பார்த்திருக்கும்.
இதுவரைக்கும் நிறைய பேர் காதலை சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அவர்களில் யாரும் என்னை பாதிக்கவில்லை. இதுவரை எனக்கு வந்த காதல் கடிதங்களையெல்லாம் பத்திரமாக வைத்திருக்கிறேன். நாளை எனக்கு வரும் கணவரிடம் அவற்றைக் காண்பிப்பதற்காகத்தான் என்று கூறிவிட்டு சிரித்தார் அழகு ரம்யா.


Click it and Unblock the Notifications











