குருட்டு விஸ்வாசம் வேலைக்கு ஆகாது.. பாரதிராஜா நினைவு நீயா நானாவில் ஒரே போடாக போட்ட இளவரசு
சென்னை: ஒரு நடிகராக மட்டுமல்ல, சமூகத்தையும் அரசியலையும் தனது படங்கள் மூலம் பேச வைத்த இயக்குநர்களில் முக்கியமானவர் பாரதிராஜா. அவரது மறைவுக்குப் பிறகு, விஜய் டிவி சார்பில் நடத்தப்பட்ட சிறப்பு 'பாரதிராஜா நினைவு நீயா நானா' நிகழ்ச்சி தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக, பாரதிராஜாவின் சிஷ்யர்களில் ஒருவரான நடிகர் இளவரசு பேசிய சில கருத்துகள் இணையத்தில் கவனம் பெற்று வருகின்றன.
நிகழ்ச்சியில், "பாரதிராஜா இயக்கிய படங்களில் இன்றைய தலைமுறை கட்டாயம் பார்க்க வேண்டிய இரண்டு படங்கள் எவை?" என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. பலரும் பல படங்களை குறிப்பிட்ட நிலையில், இளவரசு மட்டும் 'என்னுயிர் தோழன்' மற்றும் 'நிழல்கள்' ஆகிய இரண்டு படங்களை தேர்வு செய்தார்.
'என்னுயிர் தோழன்' படம் குறித்து பேசிய அவர், "எந்தவிதமான தத்துவமும் இல்லாமல், அடிப்படை இல்லாமல், கருத்தியல் இல்லாமல் இருக்கும் அரசியல் நீண்ட காலம் வெற்றி பெறாது. கண்மூடித்தனமான விசுவாசம் வேலைக்கு ஆகாது. உங்களுடைய விசுவாசத்தைக் கொண்டு மற்றவர்கள் வெற்றியைப் பெறலாம். ஆனால் அது சமூகத்திற்கு நல்லது ஆகாது. இந்த கருத்தை மிகவும் வலுவாகச் சொன்ன படம் தான் 'என்னுயிர் தோழன்'. அது எல்லாக் காலத்திற்கும் பொருந்தும் படம்" என்று கூறினார்.

அரசியல்: அதேபோல் 'நிழல்கள்' படம் குறித்தும் அவர் சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்தார். அந்தப் படத்தின் அடிப்படை திரைக்கதையை மணிவண்ணன் மிகவும் தீவிரமான அரசியல் பின்னணியில் எழுதியிருந்ததாகவும், ஆயுதப் போராட்டம், இளைஞர்களின் அரசியல் ஈடுபாடு, அதன் விளைவுகள் போன்ற விஷயங்கள் இன்னும் ஆழமாக இடம்பெற்றிருந்ததாகவும் தெரிவித்தார். பின்னர் திரைக்கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டதால், காதல் உள்ளிட்ட அம்சங்களும் படத்தில் இணைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
குருட்டு விஸ்வாசம்: இளவரசு பேசிய இந்த இரண்டு படங்களின் அரசியல் மற்றும் சமூகப் பார்வை தற்போது இணையத்தில் விவாதமாக மாறியுள்ளது. குறிப்பாக, "கொள்கையைப் புரிந்து அரசியலை அணுக வேண்டும்; குருட்டு விசுவாசம் எதற்கும் தீர்வாகாது" என்ற அவரது கருத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

சமகால அரசியல்: அதேநேரம், இந்தக் கருத்தை தற்போதைய அரசியல் சூழலோடு தொடர்புபடுத்தியும் சமூக வலைதளங்களில் விவாதம் நடைபெற்று வருகிறது. இளவரசு யாரையும் நேரடியாக குறிப்பிடவில்லை. இருந்தாலும், அவர் பேசிய வார்த்தைகள் இன்றைய அரசியல் சூழலுக்கும் பொருந்துவதாக சில நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். "பாரதிராஜா படங்களை மீண்டும் பார்க்க வேண்டிய அவசியத்தை இளவரசு ஒரே பேச்சில் நினைவூட்டிவிட்டார்", "அரசியலை கொள்கை அடிப்படையில் புரிந்துகொள்ள வேண்டும் என்ற செய்திதான் அந்த இரண்டு படங்களின் உயிர்" என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். பாரதிராஜாவின் படங்கள் வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமல்ல, சமூகத்தையும் அரசியலையும் சிந்திக்க வைக்கும் படைப்புகள் என்பதை இளவரசு தனது பேச்சின் மூலம் மீண்டும் நினைவூட்டியிருப்பதாகவும் சினிமா ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications