ஜெயா டிவியில் தீபாவளிக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் 'இசைப் பட்டாசு'!
தீபாவளி என்றாலே பட்டாசும் பலகாரமும் பரபரப்பாய் இருக்க தொலைக்காட்சிச் சேனல்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் களை கட்டும். ஜெயா டிவியில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் இசைப் பட்டாசு கொளுத்தப் போகிறார்கள். பட்டாசு வெடிக்கப் போகிறவர் பின்னணிப் பாடகி சின்மயி.

ரோஜா முதல் ராக் ஸ்டார் வரை
ரோஜாவில் சின்னச் சின்ன ஆசையில் தொடங்கிய ரஹ்மானின் பயணம் ராக் ஸ்டார் வரை அடிதடி அதகளம்தான். வரப்போகும் கோச்சடையான், கடல், மரியான் என எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.

இசை ரசிகர்களுக்கு விருந்து…
பொதுவாக இசை அமைப்பாளர்கள் அதிகம் பேசமாட்டார்கள். அதிலும் ஏ.ஆர்.ரஹ்மான் கேட்கவே வேண்டாம். ஆஸ்கர் விருது வாங்கிய போதும் கூட எல்லாப் புகழும் இறைவனுக்கே என்றுதான் கூறினார். அவர் தீபாவளியன்று காலையில் பேசுவதைக் கேட்க இசை ரசிகர்களுக்கு விருந்தாக அமையாதா என்ன?

சின்மயி கொளுத்தும் பட்டாசு
நேற்று இல்லாத மாற்றம்... இது புதிய முகம் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்த பாடல் இதையே நிகழ்ச்சிக்கு தலைப்பாக வைத்திருக்கின்றனர். பிரபல பின்னணிப் பாடகி சின்மயி தன்னுடைய இனிய குரலால் ஏ.ஆர்.ரஹ்மானை பேட்டி காண்கிறார். தீபாவளியன்று காலை 11 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

சிம்ரனின் சிறப்பு ஜாக்பாட்
ஞாயிறன்று ஒளிபரப்பாகும் ஜாக்பாட் நிகழ்ச்சி தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகிறது. இதில் பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். நடிகைகள் அஞ்சலி, தன்சிகா, ஓவியா, சந்தியா ஒரு குழுவாகவும், பாடகிகள் சின்மயி, சாருலதா மணி, மதுமிதா, மற்றும் ரம்யா ஆகியோர் ஒரு குழுவாகவும் இதில் பங்கேற்கின்றனர். சிம்ரன் மட்டுமே பட்டையை கிளப்பிய நிகழ்ச்சி தீபாவளியன்று ஜகஜோதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











