ஜீ தமிழ் டிவியில் காதலுக்கு சலாம்!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இன்று முதல் 'காதலுக்கு சலாம்' என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகவிருக்கிறது. இதுவும் ஒரு இந்தி டப்பிங் தொடர்தான்.
ஜீ தமிழ் டி.வியில் டப்பிங் சீரியல்களுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு. காரணம் தமிழ் சீரியல்களை விட இந்தி டப்பிங் சீரியல்கள் பிரமாண்டமாக தயாரிக்கப்படுவதுதான்.
மேலும் தமிழ் சீரியல்களின் அதீத வன்மம், குடும்பத்தை கெடுப்பது போன்ற கதைகள் இந்தி சீரியலில் இடம் பெறுவதில்லை. இந்தி நடிகைகளின் உடைகள், நகைகள் தமிழக பெண் ரசிகைகளை அதிகம் கவர்வதும் இதுபோன்ற சீரியல்கள் அதிக அளவில் ஒளிபரப்பாகிறது.
இந்த வரிசையில் வருகிறது காதலுக்கு சலாம் என்ற சீரியல். வருகிற திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

அமெரிக்க இந்திய பெண்மணி
ஜோயா பரூக்கி அமெரிக்காவில் குடிபெயர்ந்த இந்திய பெண்மணி. நீண்ட காலத்திற்குப் பிறகு ஜோயா தன் தந்தையை தேடி இந்தியாவிற்கு திரும்புகிறாள்.

கொண்டாடும் உறவுகள்
போபாலில் வசிக்கும் தன் அக்கா ஜீனத் மற்றும் அவளின் கணவன் அன்வர் ஆகியோரின் உதவியுடன் தன் தந்தையை தேடும் முயற்சியில் ஈடுபடுகிறாள். வந்த இடத்தில் அவரது உறவினர்கள், சகோதரிகளை சந்திக்கிறார். அவர்களின் செல்லப் பிள்ளையாகிறார். நீண்டநாட்கள் குடும்பத்தை பிரிந்த உறவுகள் ஜோயாவை தலைமேல் வைத்து கொண்டாடுகிறார்கள்.

ஜோயாவுக்கு திருமணம்
இதற்கிடையில் ஜோயாவை கேட்காமலேயே அவளுக்கு வரன் தேடி அதை முடிவும் செய்து விடுகிறாள் ஜீனத். அவளுக்கு திருமணம் செய்து வைத்து அவள் வாழ்வதை கண்குளிர காண வேண்டும் என்று நினைக்கிறார்கள் உறவினர்கள். இதை சற்றும் எதிர்பாராத ஜோயா தனக்கு விருப்பம் இல்லாத இந்த திருமணத்திற்கு மறுப்புச் சொல்ல முடியாமல் தவிக்கிறாள்.

தந்தையை காண
ஆனால் ஜோயாவுக்கோ தன் தந்தையை கண்டுபிடிக்க வேண்டும் என்பதே லட்சியம். அதே சமயம் திருமணத்திற்கு மறுப்புக் கூறும் பட்சத்தில் தன் அக்காவின் குடும்பத்திற்கு ஏற்படப் போகும் அவமானத்தை நினைத்து வருந்துகிறாள்.

காதல் கதை
இறுதியில் ஜோயா திருமணம் செய்து கொண்டாடாளா, தன் தந்தையை கண்டுபிடித்தாளா என்கிற கதை தான் காதலுக்கு சலாம். மனதை வருடும் காதல் காட்சிகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் கூடிய இந்த தொடரை, திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகிறது.


Click it and Unblock the Notifications











