விஜய் டிவி கலக்கப்போவது யாரு... வின்னர் குரைஷி... ரன்னரான அறந்தாங்கி நிஷா
சென்னை: விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக முகமது குரைசியும், ரன்னராக அறந்தாங்கி நிஷாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர் சிவகார்த்திக்கேயன் பரிசளித்தார்.
விஜய் டிவியில் கடந்த ஒரு வருட காலமாக ஒளிபரப்பாகி வரும் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி திருச்சியில் உள்ள கேர் காலேஜில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

அறந்தாங்கி நிஷா, முல்லை, கோதண்டம், நவீன், சதீஷ், தீனா மற்றும் முகமது குரைஷி ஆகிய போட்டியாளர்கள் இறுதிப் போட்டியில் பங்கேற்று தங்களின் திறமையை வெளிப்படுத்தினர்.
இந்த சீசனில் நடுவர்களாக நகைச்சுவை நடிகர் பாலாஜி, மிமிக்ரி சேது, தொகுப்பாளர் மகேஷ் அவர்களுடன் தொகுப்பாளினி பிரியங்கா, மற்றும் மைனா என்கிற நந்தினி நடுவர்களாக பங்கேற்றனர். ரக்ஷன் மற்றும் ஜாக்குலின் தொகுப்பாளர்ககளாக மட்டும் அல்லாமல் போட்டியாளர்களுடன் இணைந்து காமெடி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராய் அறிமுகமாகி டைட்டில் வென்று, விஜய் டிவியின் வேறு பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பங்கேற்று , திரையுலகில் இன்று வெற்றிகரமான நடிகராக வலம் வரும் நடிகர் சிவ கார்த்திகேயனின் சொந்த மண் திருச்சி. அங்கு நடைபெற்ற கலக்க போவது யாரு 5 மாபெரும் இறுதிப் போட்டியில் சிவகார்த்திக்கேயன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இதனால் ரசிகர்கள் கூட்டம் நிகழ்ச்சியில் அலைமோதியது.
இரண்டு சுற்றுகளாக நடைபெற்ற போட்டியின் இறுதியில் டைட்டில் வின்னராக முகமது குரைசியும், ரன்னராக அறந்தாங்கி நிஷாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு சிவகார்த்திக்கேயன் பரிசளித்தார்.


Click it and Unblock the Notifications