டேய்... ஆயிரம் ரூபாய் நோட்டு.... இப்ப சீரியல் வசனம் எல்லாம் இப்படி வருதேப்பா?
டிவி சீரியல்களில் வரும் வசனங்கள் எல்லாம் பல நேரங்களில் எரிச்சலை ஏற்படுத்தினாலும் சில நேரங்களில் அட போட வைக்கிறது.
சென்னை: இன்றைக்கு டிவி சீரியல் பார்க்கவே கூடாது ஏதாவது ஆன்மீக சேனல், இல்லை என்றால் டிஸ்கவரி சேனல் பக்கம் ரிமோட்டை மாற்றலாம் என்று நினைத்துக்கொண்டே நம்பரை போட்டால் கூட அனிச்சையாய் கை அந்த சீரியல் ஒளிபரப்பும் டிவியின் எண்களைத்தான் டச் செய்கிறது.
வேறு வழியின்றி மதியம் சாப்பிடும் நேரத்தில் சில சீன்களை பார்க்க நேர்ந்தது. சீரியலின் பேர் என்னவோ நன்றாகத்தான் இருக்கிறது. 'கல்யாண பரிசு' ஆனால் ஆரம்பத்தில் இருந்தே கதைக்களம் கடுப்பேற்றும் ரகமாகத்தான் இருக்கிறது.
ஒரே கல்லூரியில் படிக்கும் மூன்று தோழிகள் படித்து முடித்த பின்னர் என்னவாகிறார்கள் என்றுதான் கல்யாண பரிசு சீரியல் தொடங்கியது. இப்போதோ கதையின் போக்கு தோழிகள் காயத்ரியும், சுப்புவும் கவுதமை திருமணம் செய்து கொண்டு எப்படி இருக்கிறார்கள் என்று போகிறது. பிரபல படத்தின் பெயரை சீரியலுக்கு வைத்து இப்போது சீரியலை கொலை செய்து விட்டனர் என்று புலம்புகின்றனர் ரசிகர்கள்.

கண்ணீர் காயத்ரி
சீரியல் ஆரம்பத்தில் இருந்த நாயகி காயத்ரி கண்ணீர்தான் வசனமாகிவிட்டது. தோழி சுப்பு இரண்டாவது மனைவியான பின்னர், முதல் மனைவியின் கருவை கலைப்பது முதல் கொலை செய்ய திட்டம் போடுவதுவரை அண்ணனுடன் சேர்ந்து செய்யும் வில்லத்தனங்கள் நினைத்து பார்க்க முடியாதவை.

புது வில்லி ரிந்தியா
இப்போது சாமியாடி குடும்பம் என்று ஒரு குடும்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். கணவனின் குடும்பத்தினரை ஜெயிலுக்கு அனுப்ப செய்யும் தகிடுதத்தங்கள் அப்பப்பா. நாத்தனாரை திருமணத்தை நிறுத்த செய்த திட்டங்கள் தவிடு பொடியாக, நாத்தனாரின் கணவருக்கு இன்னொரு பெண்ணை திருமணம் செய்து வைக்க திட்டம் போடுவதும் முறியடிக்கப்படுகிறது.

ஜெயில்ல தள்ளு
நாத்தனார், அவளது கணவன், மாமியார் என அனைவரையும் சிறைக்கு அனுப்பிய பின்னர், அடுத்து செய்யப் போவதை மாமனாரிடம் சொல்லி சவால் விடும் காட்சியின் எபிசோடுதான் நேற்று ஒளிபரப்பானது. கொலையாளியை எப்படியாவது தன் மச்சான் கண்டு பிடிப்பார் என்று நாத்தனாரின் கணவர் கூற அதற்கு வில்லி பேசும் வசனம் அப்பப்பா...

ஆயிரம் ரூபா நோட்டு
டேய்... ஆயிரம் ரூபா நோட்டு... அதாண்டா செல்லா காசு... என் புருஷன், அதான் உன் மச்சான் அந்த கொலைகாரனை கண்டு பிடிப்பதற்கு முன்னாடி அவனோட அம்மாவை அடையாளம் தெரியாம செஞ்சிருவேன்... அப்புறம் அந்த கொலையை கண்டு பிடிக்கிறதுக்கு முன்னாடி ஜெயில்ல இருக்கிற என் மாமனார் சாமியாடிக்கு சங்கு ஊதிருவேன். இந்த கொலையை செஞ்சது யாருன்னு கண்டு பிடிக்க கிளம்பினா.... அவரோட பாசமலர்... அதான் அவரோ தங்கச்சிக்கு பால் ஊற்றி பரலோகம் அனுப்பிடுவேன் என்று நீண்ட வசனம் பேசுகிறாள் வில்லி.

நான் துர்காடா...
இப்ப எல்லாம் வில்லிகள் நீண்ட வசனம் பேசிவிட்டு தன் பேரை சொல்கின்றனர். யாரு... துர்காடா... என்று கூறி தலையை ஒரு சிலுப்பு சிலுப்புகிறாள் அந்த வில்லி. அடப்பாவிகளா? எல்லாரும் இப்படி கிளம்பிட்டா இனி பையனை பெற்றவங்க பாடு படு மோசமா போயிரும் போல இருக்கேப்பா... டிவி சீரியல் எடுக்கறவங்க கொஞ்சம் நல்ல கதையா எடுங்கப்பு என்கின்றனர் சீரியல் ரசிகர்கள்.
ஆயிரம், ஐநூறு ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மோடி அறிவித்த பின்னர் அதை வைத்து இப்போது வசனம் எல்லாம் போட ஆரம்பித்து விட்டனர்.


Click it and Unblock the Notifications