தமிழ் சினிமாவின் இளம் இயக்குநர்கள் பிரமிக்க வைக்கின்றனர்: கமல்
தமிழ் சினிமாவில் இன்றைக்கு அறிமுகமாகும் இளம் இயக்குநர்கள் என்னை பிரமிக்க வைக்கின்றனர் என்று கூறி இளம் இயக்குநர்களை உற்சாகப்படுத்தியுள்ளார் உலக நாயகன் கமல்ஹாசன்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி உலக நாயகனாக உயர்ந்துள்ள நடிகர் கமல்ஹாசன் தமிழ் புத்தாண்டு தினத்தன்று தந்தி டிவியில் 'தமிழ் சினிமாவின் விஸ்வரூபம் பற்றி பேசினார்.
சினிமாவில் தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்ட கமல், விஸ்வரூபம் படத்தின் பிரமிப்பான அனுபவங்களையும் அது பெற்ற மெகா வெற்றியை பற்றியும் நேயர்களுக்குத் தெரிவித்தார்.

ஹீரோக்கள் ராஜ்ஜியம்
தியாகராஜ பாகவதர், சிவாஜி காலத்தில் இருந்து இன்றைய ஹீரோக்கள் வரை பலரை பற்றிய தன் யதார்த்தமான கருத்துக்களை அறிவுபூர்வமாக பகிர்ந்து கொண்டார் உலக நாயகன் கமல்ஹாசன்.

இளம் இயக்குநர்களுக்கு பாராட்டு
இன்றைய இளம் இயக்குனர்களான பிட்சா கார்த்திக் சுப்புராஜ், காதலில் சொதப்புவது எப்படி பாலாஜி மோகன், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பாலாஜி தரணிதரன் போன்ற முன்னணி இயக்குனர்கள் சினிமா பற்றிய தங்களின் புரிதலையும், கமலின் அற்புதமான அனுபவங்களையும் கேட்டு தெரிந்து கொண்டனர்.

புதிய இயக்குநர்கள் பட்டாளம்
நான் எந்த ஒரு விசயத்தைப் பார்க்கிறேனோ அதுவாகவே மாறிவிடுகிறேன். எனவே இப்போதைய இளம் இயக்குநர்கள் எடுத்த எந்த ஒரு திரைப்படத்தையும் பார்ப்பதில்லை. ஆனால் பிரமிக்கத்தக்க ஒரு இளம் இயக்குநர் படை ஒன்று தமிழ் சினிமாவில் உருவாகியுள்ளது என்று மட்டும் தெரியும் என்றார் கமல்.

கமலின் அடுத்த பக்கம்
இந்த நிகழ்ச்சியில் சின்ன கலைவாணர் விவேக், சீனியர் இயக்குனர்களான சேரன், வசந்த் மற்றும் நடிகர் ரமேஷ்கண்ணா ஆகியோரும் கலந்து கொண்டு கமலுடன் இதுவரை வெளிவராத பல விஷயங்களைப் பேசினர். தன்னுடைய அனுபவம் பற்றி வசந்துடன் பகிர்ந்து கொண்ட கமல், பம்மல் கே சம்பந்தத்தில் கமலுடன் நடித்த படுஜாலியான அனுபவம் பற்றி ரமேஷ் கண்ணாவுடன் பேசினார்.

ஆதரவு கொடுத்தவர்களுக்கு நன்றி
விஸ்வரூபம் படத்தின் மூலம் தனக்கு பிரச்சினைகள் ஏற்பட்ட போது ஏராளமான இஸ்லாமிய நண்பர்கள் ஆதரவு கொடுத்தது, தனக்காக பிரார்த்தனை செய்தது போன்ற விஷயங்களை உருக்கமாக சொல்லும் கண் கலங்கினார் கமல். மிகப் பெரிய புகழ் வரும் போது கூடவே அவமானமும் வரும் என்று சொன்ன கமல் அதைப் பற்றி நெகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

மரணதண்டனைக்கு எதிர்ப்பு
மரண தண்டனைக்கு எதிராக விருமாண்டி படம் எடுத்த கமல், இன்றைக்கு மரணதண்டனைப் பற்றி பல்வேறு கருத்துக்கள் நிலவுவதாக கூறினார். தன்னுடைய கருத்துக்களை ஆணித்தரமாக முன்வைத்தார். அதேபோல் கீழ்வெண்மணி சம்பவத்தை நினைவு கூறும்போது தன்னுடைய சீற்றத்தை வெளிப்படுத்தினார்.
தமிழ் புத்தாண்டு தினத்தன்று ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி கமல் பற்றிய பல்வேறு உண்மைகளை ரசிகர்களுக்கு புரியவைத்தது என்றே கூறலாம்.


Click it and Unblock the Notifications











