சின்னத்திரையில் மீண்டும் களமிறங்கும் குஷ்பூ.. எந்த சேனல்? எந்த நாடகம் தெரியுமா?
சென்னை: குஷ்பூ கோலிவுட்டில் மிகப்பெரிய நடிகையாக வலம் வந்தவர். ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் தொடர்ந்து நடித்துவந்த அவர்; இயக்குநரும், நடிகருமான சுந்தர்.சியை கடந்த 2000ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். நடிகையாக மட்டுமின்றி அரசியலிலும் இருக்கும் குஷ்பூ இப்போது பாஜகவில் ஐக்கியமாகியிருக்கிறார். இந்தச் சூழலில் அவர் மீண்டும் சின்னத்திரை சீரியலில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
மும்பையை பூர்வீகமாகக் கொண்டவர் குஷ்பூ. முதலில் ஹிந்தி படங்களில் நடித்த அவர் பிறகு தெலுங்கில் சின்ன சின்ன படங்களில் நடித்தார். அதற்கு பிறகு தமிழில் அறிமுகமானார். அப்படி அவர் நடித்த தமிழ படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. இதனால் தான் அறிமுகமான சில படங்களிலேயே தன்னிடம் அழகு மட்டும் இல்லை திறமையும் இருக்கிறது என்பதை ஆணித்தரமாக கோலிவுட்டுக்கு உணர்த்தினார். இதன் காரணமாக அவரை தொடர்ந்து பல படங்களுக்கு புக் செய்தார்கள் தயாரிப்பாளர்கள்.

டாப் ஹீரோயின்: அறிமுகமான கொஞ்ச காலத்திலேயே குஷ்பூ படு பிஸியான நடிகையாக மாறினார். ரஜினிகாந்த், கமல் ஹாசன், சத்யராஜ் அப்போதைய முன்னணி ஹீரோக்கள் பலருடனும் நடித்தார். தமிழ் மட்டுமின்றி வேறு மொழிகளிலும் நடித்தார் அவர். முக்கியமாக தமிழ் அவருக்கு ஆரம்பத்தில் தெரியாவிட்டாலும் முறைப்படி தமிழை கற்றுக்கொண்டு தானே டப்பிங் பேசவும் செய்தார். அது அப்போதைக்கு பலரிடமும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
குஷ்பூ பெயரில் இட்லி: குஷ்பூவுக்கு தமிழ்நாட்டில் உச்சக்கட்ட கிரேஸ் இருந்தது. குறிப்பாக குஷ்பூ இட்லி என்றே ஒரு இட்லி வகை செய்யப்பட்டது. இதுபோன்று அதுவரை தமிழ் சினிமாவில் எந்த நடிகைக்கும் நடந்ததில்லை. ஒருகட்டத்தில் சினிமாவில் அவருக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. அதேசமயம் சின்னத்திரையிலும் தோன்றிய அவர்; நாடகங்களில் நடித்தும், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் தன்னை எப்போதும் பிஸியாக வைத்துக்கொண்டார்.
திருமணம்: இதற்கிடையே சுந்தர்.சி இயக்கத்தில் முறைமாமன் படத்தில் நடித்தபோது சுந்தருடன் குஷ்பூவுக்கு காதல் தோன்றியது. சில வருடங்கள் காதலித்த அவர்கள் கடந்த 2000ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். அந்தத் தம்பதிக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் தக் லைஃப் படத்தில் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக வேலை செய்துகொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னொரு மகளுக்கு நடிப்பதற்கு ஆர்வம் இருக்கிறது. எனவே குஷ்பூவின் வாரிசுகளை விரைவில் சினிமாவில் பார்க்கலாம்.
மீண்டும் குஷ்பூ: மேலும் அரசியலிலும் தனது தடத்தை பதித்திருக்கும் அவர் பெரிய திரையிலோ, சின்னத்திரையிலோ கடந்த சில வருடங்களாக தோன்றாமல் இருக்கிறார். இந்நிலையில் அவர் மீண்டும் சீரியலில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. டிடி தமிழ் சேனலில் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கும் சரோஜினி என்கிற சீரியலில் லீட் ரோலில் குஷ்பூ நடிக்கவிருப்பதாக தகவல்கள் வட்டமடிக்க ஆரம்பித்திருக்கின்றன. நீண்ட காலம் கழித்து குஷ்பூவை சின்னத்திரையில் காணவிருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











