மதன் பாப் பாட்டு தர்பார்: இந்த வார விஐபி பா. விஜய்

ஞாயிறு தோறும் காலை 10 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகும் புதிய இசை நிகழ்ச்சி, பாட்டு தர்பார். நடிகர் மதன்பாப் தயாரித்து வழங்கும் இந்த நிகழ்ச்சி மூன்று பகுதிகளைக் கொண்டது.
காலத்தை வென்ற பாடல்கள் பலமுறை நம்மனதை மகிழ்வித்திருக்கும். ஆனால் அந்த பாட்டுக்கான பின்புலம் தெரிய வந்தால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். உங்கள் விருப்பத்துக்குரிய பாடல்களை அந்த பாடல்களுக்குப் பின்னணியில் உள்ள சுவாரஸ்ய சம்பவங்களை சொல்லி தற்போதுள்ள பின்னணி பாடகர்கள் அந்தப்பாடலை பாடுவார்கள். இந்த பகுதிக்கு பாட்டோட கதை கேளு' என்று பெயர்.
இரண்டாவது பகுதி சிரிப்பு மழை'. நகைச்சுவைக் கலைஞர்கள் பங்கு பெற்று தங்கள் அதிரடி நகைச்சுவையாலும், மிமிக்ரி செய்தும் ரசிகர்களை சிரிக்க வைக்கின்றனர்.
மூன்றாவது பகுதியில் என் கேள்விக்கென்ன பதில்' நிகழ்ச்சி இடம் பெறுகிறது. இதில் பிரபலமான வி.ஐ.பி.களிடம் நடிகர் மதன்பாப் அதுவரை யாரும் கேட்டிராத அனல் பறக்கும் கேள்விகளைக் கேட்டு பதில் பெறுகிறார். இந்த வார விஐபி கவிஞர் பா. விஜய் பங்கேற்று தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.
கிரியேட்டிவ் கோம்ப் தயாரிக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் மதன்பாப்பின் மகன் அர்ச்சித், மகள் ஜனனி இருவரும் பாடுகிறார்கள். இருவரும் சினிமா பின்னணி பாடகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சி நடைபெறும் அரங்கம் குறித்து பேசிய மதன்பாப், ஒரு காப்பி ஷாப்பில் நடப்பது மாதிரியான நிகழ்ச்சி. அதனால் பிரமாண்ட செட் போட்டு படமாக்கி வருகிறோம் என்றார். நீங்களும் பாருங்களேன் ஞாயிறு கொண்டாட்டத்தில் சுவாரஸ்யமான நிகழ்ச்சியை பார்த்த திருப்தி கிடைக்கும்.


Click it and Unblock the Notifications











