இது சீரியலா.. மெகா பட்ஜெட் சினிமாவா... பிரமிக்க வைக்கும் நந்தினி!
சுந்தர் சி கதை, தயாரிப்பில் உருவாகி, சன் டிவியில் இந்த வாரம் ஒளிப்பரப்பாக ஆரம்பித்துள்ள நந்தினி, சீரியலா, மெகா சினிமாவா என்ற பிரமிப்பைத் தந்துள்ளது சீரியல் அன்பர்களுக்கு.
சன் டிவியில் பெரும் வரவேற்புடன் ஓடிக் கொண்டிருந்தது நாகினி சீரியல். இத்தனைக்கும் அது டப்பிங் சீரியல்தான். ஆனால் வாயில் கொசு போனால் கூடத் தெரியாத அளவுக்கு ஒன்றிப் போய்ப் பார்த்தார்கள் குடும்பத்து உறுப்பினர்கள் அத்தனைப் பேரும்.

கடந்த வாரமே நாகினிக்கு என்ட் கார்ட் போட்டுவிட்டார்கள். நாகினி தினமும் 10 மணிக்கு ஒளிபரப்பப்பட்டது. ஆனால் நந்தினியை 9 மணிக்கு ஒளிபரப்புகிறது சன் டிவி. காரணம், இந்த சீரியலுக்குக் கிடைத்துள்ள வரவேற்பு.
இந்த சீரியலுக்கான முழுக் கதையையும் எழுதியுள்ளார் இயக்குநர் சுந்தர்.சி. கிரியேட்டிவ் ஹெட்டும் இவர்தான். சன் டிவிக்காக சுந்தர்.சியின் ‛அவ்னி சினிமேக்ஸ்' நிறுவனம், முதல் பிரதி அடிப்படையில் தயாரித்தும் கொடுக்கிறது.
'விஜயகுமார் செய்த தவறினால் பாதிக்கப்படும் பாம்பு, விஜயகுமாரின் குடும்பத்தையே பழிவாங்க காத்திருக்கிறது. பழிவாங்க காத்திருக்கும் நந்தினிக்கு வாய்ப்பு கிடைத்ததா? அதன் பிறகு என்னவானது' என்ற நீயா பாணி கதைதான் இதுவும்.
தமிழ், தெலுங்கு கன்னடம் மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளிலும் சன் குழும சேனல்களே ஒளிபரப்புகின்றன. தமிழில் வெளியான மற்ற சீரியல்களை விட அதிகமான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருவதும், ஒரு திரைப்படம் பார்க்கும் உணர்வைத் தருவதும்தான் இந்த நந்தினியின் சிறப்பு.


Click it and Unblock the Notifications











