எதிர்கால இயக்குநர்களை உருவாக்கும் நாளைய இயக்குநர்!

சமீபத்தில் நாளைய இயக்குநர் சீசன் -3யின் நிறைவு விழா நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் கமல், நக்கீரன் ஆசிரியர் நக்கீரன்கோபால், இயக்குநர்கள் கே.பாலசந்தர், வெற்றிமாறன்,பிரபுசாலமன் உட்பட பலர் பங்கேற்று சிறந்த திரைப்படங்களை இயக்கிய இயக்குநர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார்கள்.
நடிகர் கமல் பேசும்போது, ''நாளைய இயக்குநர்களுக்கு இது பெரிய ப்ளாட்பார்ம். இது மாதிரி எங்களுக்கு கிடைக்கல. அதனால கொஞ்சம் வருத்தம் கூட இருக்கு. இப்போ இருக்குறவங்களுக்கு இப்படி ஒரு ப்ளாட் பார்ம் கிடைச்சிருக்கிறது சந்தோசமா இருக்கு'' என்றார்.
இயக்குநர் பிரபுசாலமன் பேசும்போது, ''எங்களுக்கு இப்படி ஒரு ப்ளாட் கிடைச்சிருந்தா 12 வருசங்கள் கஷ்டப்பட்டிருக்க மாட்டோம்'' என்றார். இந்த நிகழ்ச்சியின் மூலம் நிறைய இயக்குநர்கள் உருவாகி வருகிறார்கள் என்றார்.
சீசன் -3ல் நித்திலன் - பாக்யராஜ் ஆகியோர் முதல் பரிசு பெற்றனர். அவர்களுக்கு பரிசுத்தொகை இரண்டரை லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசு பெற்ற பாரதிபாலா விற்கு ஒன்றரை லட்சம் ரூபாயும், மூன்றாம் பரிசு பெற்ற குகன் ஒரு லட்சம் ரூபாய் பரிசு பெற்றார்.
சீசன் -1ல் வெற்றி பெற்ற பாலாஜி மோகன், 'காதலில் சொதப்புவது எப்படி'என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராகிவிட்டார். சீசன் - 2ல் வெற்றி பெற்ற கார்த்திக், 'பீசா' என்ற திரைப்படத்தை இயக்கிவருகிறார். நாளைய இயக்குநர் போட்டியில் சிறப்பான படங்களைத்தந்த அஸ்வினுக்கு இயக்குநர் பிரபுசாலமன் தனது தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பை தந்திருக்கிறார்.
நாளைய இயக்குநர் நிகழ்ச்சியை 'ஜேவி மீடியா ட்ரீம்ஸ்'ஜெயவேல் தயாரித்து, இயக்கிவருகிறார். சிவகணேசன் இந்த நிகழ்ச்சியின் ஷோ டைரக்டராக உள்ளார். இதுவரை மூன்று சீசன்களிலும் இயக்குநர் பிரதாப்போத்தன், மதன், பாக்யராஜ், சுந்தர் -சி, வெற்றிமாறன், விக்ரமன், பிரபுசாலமன் ஆகியோர் நடுவர்களாக இருந்தார்கள். நாளைய இயக்குநர் சீசன் -4ல் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் நடுவராக வரப்போகிறார் என்று இந்நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் ஜெயவேல் தெரிவித்துள்ளார்.
இந்த சீசனுக்கு வரவேற்பு அதிகமாக இருக்கிறது. பல ஆயிரக்கணக்கான குறும்படங்களுடன் போட்டியாளர்கள் குவிந்து வருகிறார்கள். நாளைய தமிழ்சினிமாவில் நாங்கள் உருவாக்கிய நாளை இயக்குநர்கள் அதிகம் இருப்பார்கள்'' என்று ஜெயவேல் மேலும் தெரிவித்துள்ளார்.
பிரபலங்கள் பங்கேற்ற பரிசளிப்பு விழா நிகழ்ச்சி வரும் ஞாயிறு காலை 10.30 மணிக்கு கலைஞர் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications











