ஆங்கிலத்திற்கு அதிக முக்கியத்துவம் தேவையா? 'நீயா நானா'வில் விவாதம்

ஆங்கிலம் என்பது ஒரு மொழிதான். அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டியதில்லை என்கின்றனர் ஒரு தரப்பினர். ஆங்கிலம் சரளமாக பேசத்தெரிந்துவிட்டலே அலட்டலும், அகம்பாவமும், போலித்தனங்களும் அதிகரித்துவிட்டதாக தெரிவிக்கின்றனர் ஒரு சாரார்.
ஆனால் ஆங்கிலம் பேசுவதன் மூலம் எனக்கு தன்னம்பிக்கை தருகிறது என்கின்றனர் ஒருசாரார். வெளிநாடு கூட தனியாக சென்று ஜெயிக்க முடியும் என்கின்றனர் அவர்கள். நிறைய விசயங்களை தெரிந்து கொள்ள முடியும். மற்றவர்களை விட தனித்துவம் கிடைக்கிறது என்கின்றனர். முன்னேற்றம் ஏற்படுகிறது என்கின்றனர் ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று கூறுகின்றனர். தன்னை மிகப்பெரிய போராளியாக மாற்றியிருக்கிறது ஆங்கிலம் என்றார் ஒருவர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற நாவல் எழுத்தாளர் திரு பி.ஏ. கிருஷ்ணன் மற்றும் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகப் பேராசிரியர் நிர்மல் செல்வமணி ஆகிய இருவரும் தமிழ்நாட்டில் ஆங்கிலத்திற்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்று தெரிவித்தனர். இது தேவையில்லை என்றும் கூறினார்.
தமிழ்நாட்டில் ஆங்கிலம் அதிகமாக பயன்படுத்தப்படுவது ஒரு வியாதி என்று கூறினார் திரு கிருஷ்ணன். சிறு வயது முதலேஆங்கில வழிக் கல்வியை பயிற்றுவிப்பதன் மூலம் குழந்தைகளின் மனதில் ஒரு துன்புறுத்தல் ஏற்படுகிறது என்கிறார். நம் குழந்தைகளை 8ம் வகுப்பு வரையாவது தாய்மொழியில் படிக்க அனுப்பவேண்டும். அதன்பின்னர் அவர்களை ஆங்கிலம் கற்றுக்கொள்ளச் செய்யலாம். இதன் மூலம் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவது குறைக்கப்படும் என்றும் அறிவுறுத்தினார். சைனாவிலோ, ஜப்பானிலோ ஆங்கிலம் படிப்பவர்கள் குறைவு. அவர்கள் தாய்மொழிக்கு முன்னுரிமை கொடுக்கின்றனர். நம்முடைய மொழியை வளர்க்க நாம்தான் முயற்சி செய்யவேண்டும் என்று கூறினார்.
ஆங்கிலத்தைக் காட்டிலும் நம்முடைய சொந்த மொழியில் எதையும் சிறப்பாக செய்யமுடியும் என்றார் திரு நிர்மல் செல்வமணி. நம் தாய்மொழியின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர்ந்து கொண்டால் ஆங்கிலவழிக் கல்விக்கு இந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கமாட்டார்கள் என்றும் கூறினார் அவர்.
இன்றைக்கு ஏழ்மையான சூழலில் வாழ்க்கை நடத்தும் மக்கள் முதல் பணக்கார வாழ்க்கை வாழும் மக்கள் வரை அனைவரும் ஆங்கில மோகத்தில் அலைக்கழிக்கப்படுகின்றனர். இதன் காரணமாகவே எவ்வளவு பணம் செலவழித்தாவது தங்கள் மகனை எல்.கே.ஜியில் தொடங்கி உயர்கல்வி வரை ஆங்கில வழிக்கல்வி பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சேர்த்துவிடுகின்றனர். இந்த சூழ்நிலையில் இதுபோன்ற விவாத நிகழ்ச்சி ஆங்கில மொழியின் மீதான மோகத்தை சற்றே குறைக்க உதவும் என்கின்றனர் தாய்மொழியை போற்றுபவர்கள்.


Click it and Unblock the Notifications











