Neeya Naana: 18 வருடங்கள் நீயா நானா வெற்றிகரமாக ஓடக் காரணம் என்ன? உடைத்து பேசிய கோபிநாத்.. புல்லரிக்குது!
சென்னை: தமிழ் தொலைக்காட்சிகளில் அதிக டி.ஆர்.பி கொண்ட டாப் 3 தொலைக்காட்சிகளில் விஜய் தொலைக்காட்சியும் ஒன்று. இந்த சேனலில் ஒளிப்பரப்பாகும் பல நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, வெற்றி பெற்ற நிகழ்ச்சிகளாக மாறியுள்ளது. இந்த சேனலில் அறிமுகப்படுத்தப்படும் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்ற சேனல்களில் கூடுதலாக சில விஷயங்களை சேர்த்து நிகழ்ச்சிகள் உருவாக்குகிறார்கள். அப்படியான ஒரு நிகழ்ச்சிதான் நீயா நானா.
நீயா நானா நிகழ்ச்சி கடந்த 18 ஆண்டுகளுக்கு மேலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சேனலின் ஓனர்கள் மாறிக்கொண்டே இருந்தாலும் இந்த நிகழ்ச்சியை மட்டும் யாரும் மாற்றவில்லை. தமிழ் தொலைக்காட்சி வரலாற்றிலேயே இந்த நிகழ்ச்சி ஒரு பெருமைமிக்க அடையாளம் என சுட்டிக்காட்டும் அளவுக்கு நீயா நானா உள்ளது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கோபிநாத், நிகழ்ச்சியை நெறிப்படுத்தும் விதமும், அவர் சில இடங்களில் முன் வைக்கும் வாதமுமே நிகழ்ச்சியின் வெற்றிக்கு ஒரு காரணமாக கூறலாம். நீயா நானா நிகழ்ச்சியைப் போல ஜீ தமிழ் சேனலில் பேசு தமிழா பேசு, கலைஞர் தொலைக்காட்சியில் வா தமிழா வா போன்ற நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன, அவையும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

நீயா நானா நிகழ்ச்சியைப் பார்ப்பது என்பது ஒரு புத்தகத்தின் மையக்கருத்தினை நுகர்வதற்கு சமம் என்று கூறலாம். அந்த அளவிற்கு தமிழ் தொலைக்காட்சி சூழலில் நீயா நானா ஒரு மைல்கல். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு என்ன காரணம் என்பதை அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வரும் கோபிநாத் நிகழ்ச்சி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
நீயா நானா: அவர் பேசுகையில், " தமிழ் மொழி ஜீனில் நாம் வந்ததாலேயே, இயல்பாகவே எல்லாவற்றையும் புரிந்து கொள்வதற்கான அறிவும் புத்திசாலித்தனமும் இந்த மொழிக்கு உள்ளது. உதாரணத்திற்கு நீயா நானா நிகழ்ச்சியைக் கூட சொல்லலாம். 18 ஆண்டுகளாக நீயா நானா நிகழ்ச்சி நடைபெறுகிறது. வட இந்தியாவில் இருந்து கூட பலரும் இது தொடர்பாக கேட்டுள்ளார்கள். பிரபலங்கள் வருவதில்லை, சினிமாவைச் சேர்ந்தவர்கள் வருவதில்லை. சாதாரணமாக நம்மைப் போல் இருக்கும் பொதுமக்கள்தான் வருகிறார்கள். ஆனால் 18 ஆண்டுகளாக அது ஓடிக்கொண்டு உள்ளது.

வெற்றிக்கு காரணம்: அதற்கு காரணம், நமது தமிழ் மொழிக்கே விவாதிக்கும் திறமை உள்ளது. நம்மாட்கள் அந்த அளவிற்கு பேசுகிறார்கள். என்ன தலைப்பு கொடுத்தாலும் சிறப்பாக பேசுகிறார்கள். இதை வேறு வேறு மொழிகளில் எல்லாம் முயற்சி செய்து பார்த்துவிட்டார்கள். ஆனால் அங்கு அவை சரியாக போகவில்லை. காரணம் நமது மொழிக்கு அந்த தன்மை உள்ளது. இரண்டாவது நமது கலாச்சாரம், யார் என்ன சொன்னாலும் அதை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல், சரியோ தவறோ என் கருத்தைக் கேள் என்று சொல்வோம். இந்த ஜனநாயகத் தன்மை நமது வாழ்வியலில், நமது இலக்கியங்கள், அரசியல், சமூக அமைப்பு, பெற்றோர்கள், மொழி என இவை அனைத்தும் சேர்ந்த கலவையாகத்தான் நீயா நானாவாக பிரதிபலிக்கிறது" என்று பேசியுள்ளார். அவரது இந்த பேச்சு தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் இந்த வீடியோவிற்கு பாசிடிவான கமெண்ட்டுகள் குவிந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











