மிரட்டலான மந்திர புன்னகை தொடரின் இரண்டாவது ப்ரமோ.. ஆகஸ்ட் 1 முதல் ஒளிபரப்பு!
சென்னை : வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் மந்திர புன்னகை என்ற புதிய நெடுந்தொடர் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாக உள்ளது.
த்ரில்லர் தொடராக வெளியாகவுள்ள இந்தத் தொடர் அதிக எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சீரியலின் முதல் ப்ரமோ வெளியான நிலையில், தற்போது இரண்டாவது ப்ரமோ வெளியாகியுள்ளது.

அதிகரித்துள்ள சேனல்கள்
சேனல்கள் பெருகியுள்ள நிலையில் அடுத்தடுத்த சீரியல்கள், ப்ரமோக்கள் என ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்து வருகின்றன. எதை பார்ப்பது எதை விடுவது மனநிலையை ரசிகர்கள் பெற்றுள்ளனர். அவர்களும் சாய்ஸ் அதிகமாக உள்ள நிலையில் தேர்ந்தெடுத்த தொடர்களை பார்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

மந்திர புன்னகை நெடுந்தொடர்
அந்த வகையில் அடுத்தடுத்த சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது கலர்ஸ் சேனல். இந்த சேனலில் அடுத்ததாக மந்திர புன்னகை என்ற நெடுந்தொடர் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. தினந்தோறும் இரவு 9.30 மணிக்கு இந்தத் தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
இந்த தொடரின் முதல் ப்ரமோ கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. தனித்துவமான காட்சி அமைப்புகள் தொடருக்கான எதிர்பார்ப்பையும் அதிகரித்தது. இதையடுத்து ரசிகர்கள் இந்தத் தொடரை மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கியுள்ளனர்.

3 முக்கிய கேரக்டர்கள்
இந்தத் தொடரில் காயத்ரி, கதிர் மற்றும் குரு விக்ரம் என்ற மூன்று முக்கிய கேரக்டர்களை சுற்றியே கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கேரக்டர்களில் மெரிஷீனா நீனு, ஹுசைன் அகமது கான் மற்றும் நியாஸ் கான் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்கள் மூவரும் ஒரு கட்டத்தில் சந்திக்க நேரும்போது நடக்கும் நிகழ்வுகள் இந்தத் தொடரில் முக்கியமாக எடுக்கப்பட்டுள்ளது.

பயங்கரமாக மாறும் ஆனந்தமான நாள்
ஒருவரின் வாழ்க்கையில் ஆனந்தமான ஒருநாள் பயங்கரங்களை கொண்டுவந்தால் என்ன ஆகும் என்பதை இந்தத் தொடர் சொல்கிறது. ஒரு கனவு போன்ற திருமண சடங்குகளின் தொகுப்பை தற்போது வெளியாகியுள்ள ப்ரமோ காட்டுகிறது. திருமணத்தின்போது கதிர் தாலி கட்டுவதற்காக காத்திருக்கும் காயத்ரி, கழுத்தில் குரு விக்ரம் தாலி கட்டுவதாக அவளுக்கு கனவு வருகிறது.

சுக்குநூறாகும் அழகான கனவு
இதனால் அவரது அழகான கனவு சுக்குநூறாக உடைகிறது. எதனால் கதிர் அவரை கைவிடும் சூழல் ஏற்படுகிறது, அல்லது இது கற்பனையா என்பதாக கதை நகர்கிறது. நிச்சயமாக இந்தக் கதை யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்களுடன் நகரும் என்று இயக்குநர் தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











