எனை நோக்கி பாயும் தோட்டா முதல் குயின் வரை -கவுதம் வாசுதேவ மேனனுக்கு தொடரும் சிக்கல்
Recommended Video
சென்னை: எங்கள் குடும்பத்தினரின் அனுமதி இன்றி எந்த ஒரு படமோ அல்லது தொடரோ ஜெயலலிதாவை மையமாக வைத்து எடுக்கப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகனான தீபக் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் கவுதம் வாசுதேவ மேனனுக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கவுதம் வாசுதேவ் மேனனுக்கு நேரம் சரியில்லை போல இருக்கு. படம் எடுப்பதில் பல சிக்கல்களை சந்தித்து வருகிறார். எனை நோக்கி பாயும் தோட்டா என எப்போது அந்த திரைப்படத்திற்கு பெயர் வைத்தாரோ தெரியவில்லை. அந்தப் படத்தை ஆரம்பித்ததில் இருந்தே ஏதாவது ஒரு ரூபத்தில் பிரச்சனை வந்து கவுதம் வாசுதேவ மேனனை மண்டை காய வைக்துக்கொண்டு தான் உள்ளது.

தற்சமயம் அந்தப் படத்தோடு சேர்த்து அவர் இயக்கும் குயின் வெப் சீரிஸுக்கும் பிரச்சனை வர ஆரம்பித்து விட்டது. பிரச்சனை செல்வி ஜெயலலிதாவின் அண்ணன் மகனான தீபக் மூலமாக வரத் தொடங்கியுள்ளது. குயின் வெப் சீரிஸை எங்கள் அனுமதி இல்லாமல் எடுக்கக் கூடாது என்று தீபக் கடுமையாக எச்சரித்துள்ளார்
தமிழ் சினமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கவுதம் வாசுதேவ மேனன் பல பிரச்சனைகளில் சிக்கி தவிக்கிறார். தனுஷ் நடிப்பில் அவர் இயக்கிய எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் பல சிக்கல்களுக்கு பிறகு செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அன்றும் வெளியாகாமல் போனது.
இப்படம் 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் பணப் பிரச்சனை என்று நிறுத்திவைக்கப்பட்டது. பிறகு கவுதம் வாசுதேவ மேனன், விக்ரமை வைத்து துருவநட்சத்திரம் படத்தின் வேளைகளில் பிஸியானதால் எனை நோக்கி பாயும் தோட்டா படம் பாதியில் நின்றது.
எப்படியோ அனைத்து சிக்கல்களையும் தாண்டி படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு முடிந்து செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாக வேண்டிய நிலையில் பைனான்சியர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்ததால் அன்றும் படம் வெளியாகாமல் முடங்கிப்போனது. துருவநட்சத்திரம் படமும் எப்போது வெளியாகும் என்பது குறித்து எந்த ஒரு தகவலும் இல்லை.

இப்படி இரண்டு படங்களின் நிலைமையும் இவ்வாறு இருக்கையில் கவுதம் வாசுதேவ மேனன், தமிழக முன்னாள் முதல் அமைச்சர் செல்வி.ஜெயலலிதாவின் வாழ்கை வரலாற்றினை மையமாக வைத்து குயின் என்ற இணைய தொடரை உருவாக்கி வருகிறார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார்.
ஏற்கனவே, இரு படங்களின் பிரச்சனை பூதாகரமாக உருவெடுத்துள்ள நிலையில், இப்போது இந்த இணைய தொடரும் பிரச்சனைக்குள்ளாகியுள்ளது. பிரச்சனையை கிளப்பியுள்ளவர் ஜெயலலிதாவின் அண்ணன் மகனான தீபக் தான்.
தீபக், எங்கள் குடும்பத்தினரின் அனுமதி இன்றி எந்த ஒரு படமோ அல்லது தொடரோ ஜெயலலிதா அவர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் குயின் வெப் சீரீஸுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஜான் ஏறினால் முழம் சறுக்குகிறது கவுதம் வாசுதேவ மேனனின் திரைவாழ்க்கை. பாவம் இதில் இருந்து எப்படி அவர் மீண்டு வருவார் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. நல்ல ஒரு திறமையான இயக்குனர் மற்றும் அவரை சார்ந்து இருக்கும் பல தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரின் உழைப்பும் வீணாகாமல் இருக்கவேண்டி கடவுளை பிராத்திப்போம்.


Click it and Unblock the Notifications











