உமையாள் அத்தையிடம் அசிங்கப்பட்டு இருப்பீங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் செம சீரியஸா போகுதே!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் செந்தில், பாண்டியனை "நீங்க நல்ல அப்பாவே இல்ல" என்று அசிங்கப்படுத்தியதோடு, மீனாவால் குடும்பத்தில் ஏற்பட்ட விரிசல் குறித்தும் இன்றைய எபிசோடில் விவாதிக்கப்பட்டது. ஜூலை 11, 2025 அன்று விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் எபிசோடில் நடந்த முக்கிய நிகழ்வுகளை இங்கு காணலாம்.
காலை வங்கிக்குச் சென்ற கதிரும், ராஜியும் கடன் (loan) பற்றி பேசிக் கொண்டிருந்தனர். அப்போது வங்கி மேலாளர், ஜாமீன் இருந்தால் உடனடியாக கடன் தயார் செய்து தருவதாகக் கூறினார். ராஜி, கதிரிடம் நமக்கு ஜாமீன் இல்லாவிட்டாலும் நகை இருக்கிறதே எனக் கூறுகிறார். அதற்கு கதிர், நகையை யார் திருடியதாக நினைக்கிறார்கள் என்று கேட்க, நீதான் என்று ராஜி சொல்கிறார். உடனே கதிர் அந்த நகையை மாமாவிடம் கொடுத்து வீட்டில் ஒப்படைக்கச் சொல்கிறார்.
வீட்டில் அனைவரும் சாப்பிட உட்கார்ந்திருக்கும்போது, பாண்டியன் செந்திலிடம் பேசாமல் இருப்பதை மீனா சுட்டிக்காட்டுகிறார். அதற்குப் பாண்டியன், “நீங்க பெரிய ஆளு, உங்க பேச்சை கேட்காமல் இருக்க முடியுமா?” என்று குத்தலாகப் பேசுகிறார். கதிர் குறுக்கிட்டு அண்ணி சரியாகத்தான் பேசுகிறார் என்கிறார். ஆனால் பாண்டியன் கதிரையும் அசிங்கப்படுத்துகிறார். தங்கமயில் தம்பியை மாமாவுடன் சண்டையிட வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார். முன்பு மீனாவைப் பாராட்டிய பாண்டியன், இப்போது மீனாவின் நேர்மையற்ற செயலுக்காக அவளைக் குற்றம் சாட்டுகிறார்.
பாண்டியன், “என் பிள்ளைக்கு நான் எதுவும் செய்ய மாட்டேன்னு நினைச்சியா?” என்று கேட்கிறார். இதனால் ஆத்திரமடைந்த செந்தில், “நீங்க பெத்த பிள்ளைக்கு நினைச்சாலும் நினைக்காட்டியும் அதுதானே உண்மை” என்று பதிலளிக்கிறார். கோமதி செந்திலைத் திட்டுகிறார், மற்றவர்களும் அவரை அமைதியாக இருக்கச் சொல்கிறார்கள்.
செந்தில் ஆதங்கத்துடன், “எனக்காக பணம் கொடுக்க யார் இருக்கா? இதே மாதிரி ஒரு விஷயம் வேற வீட்டில் நடந்திருந்தால் அப்பாகிட்ட போய் கேப்பாங்க. ஆனா இவரிடம் கேட்க முடியுமா? கதிர் காசு கொடுத்தா வேலை கிடைக்கும் என்று சொன்னான். ஒரு லட்சம் தான் சொன்னான் அதுக்கே இவர் என்ன பேசினார் தெரியுமா?” என்கிறார்.
உமையாள் அத்தையிடம் அசிங்கப்பட்டு இருப்பீங்க
மேலும் ஒரு பெரிய விஷயம் இருப்பதாக செந்தில் சொல்ல, கோமதி என்னவென்று கேட்கிறார். அதற்கு செந்தில், அப்பா லோன் விஷயம் தெரிந்து அசிங்கப்பட்டு இருப்பீங்க என்று சொன்னீர்களே, அது லோன் போட்டு தராவிட்டாலும் உமையாள் அத்தையிடம் அசிங்கப்பட்டு இருப்பீங்க என்கிறார். உடனே கோமதி என்ன சொல்கிறாய் என்று கேட்க, மீனா செந்திலை தடுக்கப் பார்க்கிறார். ஆனாலும் செந்தில் தான் கொடுத்த பணத்தை வங்கியில் போடவில்லை என்று சொல்கிறார்.
செந்தில் தொடர்கையில், அரசிக்கு கார் வாங்க கொடுத்த பணத்தை தான் திருடிவிட்டதாகவும், மீனா அப்பாவிடம் அந்த பணத்தை கொடுத்ததாக சொல்லிக் கொடுத்ததாகவும் கூறுகிறார். பிறகுதான் மீனாவுக்கே இது தெரிய வந்து தன்னைத் திட்டியதாகவும், மூன்றாவது நாள் உமையாள் அத்தை பணத்திற்காக வந்தபோது மீனா தான் பணத்துடன் வந்து மானத்தை காப்பாற்றியதாகவும் செந்தில் சொல்கிறார். “உங்களுக்கு போக இருந்த மானத்தை காப்பாத்துனது மீனாதான். அவளை நீங்க இப்படி பேசிட்டு இருக்கீங்க” என்று செந்தில் கோபப்படுகிறார்.
கோமதி செந்திலை அடிக்கிறார், அதற்கு பாண்டியன் நீ செய்தது தப்பில்லையா என்று கேட்கிறார். “நாங்களும் கஷ்டப்பட்டு தான் உழைக்கிறோம் ஆனாலும் உங்ககிட்ட அசிங்கப்படுறோம்” என்று செந்தில் சொல்கிறார். அரசு வேலை வாங்குவதற்கு வீட்டு பணத்தை திருடியது ஏன் என்று பாண்டியன் கேட்கிறார். அதற்கு செந்தில், பாண்டியனிடமிருந்து தப்பிக்கவே அரசு வேலைக்கு போக முடிவெடுத்தேன் என்கிறார். வேலை செய்தாலும் பாண்டியன் காசு இல்லை என்ற வார்த்தையை மட்டுமே கூறுவதால் வேறு வேலைக்கு போக முடிவெடுத்ததாக செந்தில் கூறுகிறார்.
பாண்டியன், “ஊர் உலகத்துல போய் பாரு மத்த அப்பாவெல்லாம் எப்படி இருக்காங்கன்னு உனக்கு நல்ல அப்பாவா இருக்கேன்” என்று சொல்ல, “நீங்க நல்ல அப்பான்னு யாரு சொன்னா?” என்று செந்தில் கேட்கிறார். அதற்குப் பாண்டியன், “நான் நல்ல அப்பா தான்” என்று சொல்ல, “நீங்க நல்ல அப்பாவே கிடையாது” என்று செந்தில் கத்துகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.


Click it and Unblock the Notifications











