பெண்களை மட்டம் தட்டும் பொன்னூஞ்சல்...
பெண் குழந்தைகளை மகா மட்டமாக நினைக்கும் பெற்றோர்கள். வரதட்சணை கொடுமை இவற்றை பற்றி சினிமா வந்து ரொம்ப நாளாகிவிட்டது.
அந்த குறையை தீர்க்க இப்போது சன் டிவியில் புதிய சீரியல் ஒன்று ஒளிபரப்பாகிறது.
பொன்னூஞ்சல் தொடரின் பெயர். இதுவரை 4 எபிசோடுகள் முடிந்துள்ளன. ஆரம்பம் முதலே பெண்களை மட்டம் தட்டும் வகையிலான வசனங்களும், காட்சியமைப்புகளும்தான் இந்த தொடரில் இடம் பெற்றுள்ளன.

ராஜ்காந்த் வில்லத்தனம்
சீரியலின் வில்லன் ராஜ்காந்த். மனைவிக்கு பெண் குழந்தை பிறந்த உடன் அதை அப்படியே மருத்துவமனையில் விட்டு விட்டு மனைவியை வீட்டிற்கு இழுத்துக் கொண்டு போய்விடுகிறான். இந்த செயலுக்கு மாமியாராக வரும் ஜெயலட்சுமியும் உடந்தை.

இரண்டாவது திருமணம்
மருமகளை அடித்து கொலை செய்து விட்டு அதை மறைத்து இரண்டாவது திருமணம் செய்து வைக்க வனஜாவை பெண் பார்க்க வருகின்றனர். அழகை பார்த்து அசந்து போன ராஜ் காந்த் விட்டுக் கொடுக்காமல் பெண் தன்னை விட சுமார்தான் என்பதுபோல பார்க்கிறான்.

விலை பேசும் மாமியார்
வனஜாவிற்கு திருமணமாகி ஒரே நாளில் கணவன் இறந்து விடவே இது இரண்டாம் திருமணம்தானே எனவே வரதட்சணையாக சில பல சவரன் நகையை போடுங்களேன் என்று கேட்கின்றனர். அதை விட கொடுமை, அக்காவை பெண் பார்க்க வந்துவிட்டு தங்கையை பிடித்திருக்கிறது திருமணம் செய்து கொடுங்கள் என்று கேட்பதுதான்.

கடன் வாங்கும் அப்பா
3 பெண் குழந்தைகளை பெற்ற அப்பா, கஷ்டப்பட்டு கடன் வாங்கி பெண்ணுக்கு திருமணம் முடிக்க நினைக்கிறார். என்னதான் உருட்டல் மிரட்டல் என்றாலும், மாப்பிள்ளையின் காலில் விழுந்தாவது மகளை தள்ளிவிட்டு விட வேண்டும் என்று நினைக்கிறார்.

திருமண நாளில்
மாப்பிள்ளைக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி இறந்து போன விசயம் திருமண நாளில்தான் பெண்ணின் சகோதரி அபிதாவிற்கு தெரியவருகிறது. ஆனாலும் தடுக்கும் முன்பு தாலி கட்டிவிடுகிறான் மாப்பிள்ளை. அக்காவின் இரண்டாவது திருமண வாழ்க்கையும் கேள்விக்குறியாகிவிட்டதை நினைத்து கலங்குகிறாள் அபிதா.

எந்த காலத்தில இருக்கீங்க?
எந்த மாதிரியான மாப்பிள்ளையாக இருந்தாலும் லட்சக்கணக்கில் வரதட்சணை கொடுத்து பெண்ணை திருமணம் செய்து கொடுப்பது 10 ஆண்டுகளுக்கு முன்புதான். இப்போது காலம் மாறிவிட்டது என்பதை இயக்குநரும், தொடர் தயாரிப்பாளர்களும் உணரவில்லை போலிருக்கிறது. தமிழ்நாட்டில் கிராமங்களில் கூட பெண்கள் நன்றாக படித்து கைநிறைய சம்பாதிக்கின்றனர். ஆண்பிள்ளைகளுக்கு பெண் கிடைப்பதுதான் சிரமமான காரியமாக இருக்கிறது. கொஞ்சம் நிகழ்காலத்தை கவனத்தில் வைத்து சீரியல் எடுக்கலாமே?


Click it and Unblock the Notifications











