நாங்களும் மனிதர்கள்தானே? எங்களை ஏன் ஒதுக்குறீங்க?..
குப்பைகளை சுத்தம் செய்யும் துப்புறவு பணியாளர்களையும், கழிவுகளை சுத்தம் செய்பவர்களையும் மனிதர்களாகக்கூட இந்த சமூகம் மதிப்பதில்லை. அவர்களுக்கு வீடு வாடகைக்கு கிடைப்பதில்லை. அவர்களின் குழந்தைகளுக்கு பள்ளிகளில் சரியான மதிப்பு கிடைப்பதில்லை.
உயிரை பணயம் வைத்து கழிவுநீர் கால்வாய்க்குள் இறங்கி வேலை பார்க்கும் தொழிலாளிகளுக்கு சரியான பாதுகாப்புக் கவசங்கள் அளிக்கப்படுவதில்லை இதனாலேயே அவர்களில் பலர் விஷவாயு தாக்கி மரணமடைகின்றனர்.
உயிருக்கு நிச்சயமற்ற பணி என்று தெரிந்தும் கழிவுநீர் கால்வாய்க்குள் இறங்க தொழிலாளி தயங்குவதில்லை. ஆனால் இந்த சமூகம் அவனை சக மனிதனாக பார்க்கத் தயங்குகிறது என்பதை சொன்னது புதிய தலைமுறையின் ரௌத்திரம் பழகு நிகழ்ச்சி.

எங்களுக்கு வீடு கிடைக்கலை
நகரங்களிலும், கிராமங்களிலும் குவியும் குப்பைகளை அகற்றுவதுதான் துப்புறவு தொழிலாளர்களின் பணி. ஆனால் அவர்களுக்கு வாடகைக்கு வீடு தருவதற்குக் கூட சிலர் தயங்குகின்றனர் என்ற குற்றச்சாட்டு உள்ளது. நாங்கள் யார்? என்ன? என்று தெரியாமல் வீடு தர சம்மதம் தெரிவித்தவர்கள், எங்களின் பணி, சாதி பற்றி கேட்ட உடன், அட்வான்ஸ் வாங்க கூட மறுத்துவிட்டனர் என்கின்றனர் இவர்கள்.

எங்களை ஒதுக்குகின்றனர்
தெருக்களை சுத்தம் செய்யும் போது தாகம் எடுத்தால் தண்ணீர் கொடுக்கக்கூட இந்த சமுதாயம் தயங்குகிறது. தெருக்குழாய்களில் தண்ணீர் பிடித்து குடித்தால் கூட நாங்கள் நின்றிருந்த இடத்தை நன்றாக கழுவி விட்டு பின்னர் அவர்களின் குடத்தில் தண்ணீர் பிடிக்கின்றனர் என்றார் ஒரு பெண் தொழிலாளி.

பள்ளிகளில் மதிப்பதில்லை
பெற்றோர்கள் துப்புறவு தொழிலாளர்கள் என்பதால் அவர்களின் பிள்ளைகளை தீண்டத்தகாதவர்களாகத்தான் பள்ளிகளில் நடத்துகின்றனர் ஆசிரியர்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது. பள்ளிகளில் கழிவறைகளைக் கூட எங்கள் பிள்ளைகளைத்தான் கழுவச் சொல்கின்றனர் என்று ஆதங்கப்பட்டனர் இந்த தொழிலாளர்கள்.

சட்டத்தில் ஓட்டைகள்
மனிதக் கழிவுகளை மனிதர்கள் அள்ளக்கூடாது என்று சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இவ்வாறு செய்யச்சொல்பவர்களுக்கு ஓர் ஆண்டு தண்டனையும், அபராதமும் விதிக்கலாம் என்று சட்டம் சொல்லுகிறது. ஆனால் அதிலும் சில ஓட்டைகள் உள்ளன என்று ஆதங்கப்படுகின்றனர் சமூக ஆர்வலர்கள். மாநில அரசுகள் விருப்பப்பட்டால் இந்த சட்டத்தை பிரயோகித்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளதே ஆள்பவர்களுக்கு வசதியாகிவிட்டது.

உயிருக்கு என்ன உத்தரவாதம்?
கழிவுநீர் குழாய்க்குள் இறங்கும் முன் முகமூடி, கவசம், கால், கை உறைகள், பாதுகாப்பான ஷூ போன்றவை அணிந்துகொண்டுதான் தொழிலாளி உள்ளே இறங்கி அடைப்பை எடுக்கின்றனர் என்று கூறப்படுகிறது. ஆனால் ஒரு தொழிலாளியாவது இதுபோன்ற உடைகளை அணிந்து கழிவுநீர் கால்வாய்க்குள் இறங்குவதை நாம் கண்டிருக்கிறோமா? என்று கேள்வி எழுப்பினார் எவிடென்ஸ் கதிர்.

போராட்டமே வாழ்க்கை
நகரத்தின் குப்பைகளை சுத்தம் செய்யும் துப்புறவு தொழிலாளர்களின் வாழ்க்கை என்னவோ கழிவு நீர் கால்வாய்களின் ஓரத்தில் குப்பைகளின் நடுவில்தான் நகர்ந்து கொண்டிருக்கிறது. பன்றிகள், நாய்களின் நடுவேதான் அவர்களின் வாழ்வாதாரம் இருக்கிறது. கழிவறைகளை சுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு என்று சுகாதாரமான கழிவறை வசதிகளை செய்து கொடுப்பதில்லை இந்த அரசாங்கம் என்ற ஆதங்கத்துடன் முடிந்தது ரௌத்திரம் பழகு நிகழ்ச்சி.


Click it and Unblock the Notifications











