போயிட்டீங்களே அப்பா.. வெங்கட் சுபாவின் மரணம்.. கதறி அழுத ரச்சிதா மகாலட்சுமி
சென்னை: நடிகரும், திரைப்பட விமர்சகருமான வெங்கட் சுபாவின் மரணம் திரையுலகில் பலரையும் புரட்டிப் போட்டுள்ளது.
நிறைய நண்பர்களைப் பெற்றிருந்தவர் வெங்கட் சுபா. பல படங்களில் நடித்திருந்தாலும், டிவிதான் அவரை வெகுஜன மக்களிடம் மிக நெருக்கமாக கொண்டு போய்ச் சேர்த்தது.
பிரியமானவள் சீரியலில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. பலரையும் கவர்ந்திழுத்தது. நிறைய பேருக்கு யார் இவர் என்ற விவரத்தையும் கொண்டு போய் சேர்த்தது.

நடிகர் வெங்கட் சுபா
வெங்கட் சுபா கொரோனா தாக்கி மீண்டு வர முடியாமல் மரணத்தைத் தழுவியுள்ளார். அவரது மறைவுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் முதல் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். டிவி உலகைச் சேர்ந்த பலரும் கூட அதிர்ச்சியில் உள்ளனர். சின்னத்திரை உலகில் அடுத்தடுத்து பல கொரோனா மரணங்கள் சம்பவித்து வருவது அவர்களை வேதனை அடையச் செய்துள்ளது.

சோகத்தில் ரச்சிதா
வெங்கட் சுபா கடைசியாக நடித்து வந்த ஒரு சீரியல் நாம் இருவர் நமக்கு இருவர் பார்ட் டூ தொடரில். இந்தத் தொடரில் ரச்சிதா மகாலட்சுமியின் தந்தையாக நடித்திருப்பார் வெங்கட். இதனால் ரச்சிதா ரொம்பவே உடைந்து போயுள்ளார். சீரியலைப் போலவே நிஜத்திலும் வெங்கட்டை அப்பா என்றுதான் அழைப்பார் அவர். உண்மையான தந்தையைப் பறி கொடுத்ததைப் போல உடைந்து போய் அழுது கொண்டிருக்கிறார் ரச்சிதா.

நடிகர் நடிகையர் சோகம்
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வெங்கட் சீரியலில் மரணமடையும் காட்சியைப் போட்டு தனது சோகத்தை வெளிப்படுத்தியுள்ளார் ரச்சிதா. இருவரும் இணைந்து பணியாற்றிய இந்த காட்சியைப் போட்டு எனது சோகத்தைப் பகிர வேண்டி வரும் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. மிகவும் உடைந்து போயிருக்கிறேன் என்று வேதனை தெரிவித்துள்ளார் ரச்சிதா.
தொடரும் இழப்புகள்
வெங்கட் ஒரு நடிகர் மட்டுமல்ல, திரைப்பட விமர்சகர் மட்டுமல்ல. தயாரிப்பாளரும் கூட. பிரமிட் சாய் மீரா நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியாகவும் இருந்துள்ளார். பல நடிகர் நடிகைகளுக்கு நல்ல வழிகாட்டியாக திகழ்ந்தவர். ஏராளமான படங்களில் பல்வேறு பாத்திரங்களில் நடித்துள்ளார். திரையுலகிலும், சின்னத் திரையுலகிலும் கடந்த 2 வருடமாக கொரோனாவால் ஏற்பட்ட இழப்புகள் அதிகமே.


Click it and Unblock the Notifications











