சீரியல் "ராணி" ... "வாணி".. டிவிக்கு வந்து 17 வருஷமாச்சு!
சினிமாவில் இருந்து சீரியலுக்கு வந்து 17 வருடம் ஆகிவிட்டது என்று நடிகை ராதிகா உற்சாகமாக தெரிவித்துள்ளார். சினிமாவில் ஹீரோயினாக நடித்து அம்மா நடிகை ஆன பின்னர் 90 களில் டிவி சீரியலுக்கு வந்தார் ராதிகா.
குட்டி பத்மினி இயக்கிய சீரியல் மூலம் சன் டிவியில் நடிக்க வந்த ராதிகா, சொந்தமாக சித்தி சீரியலை முதன் முதலாக தயாரித்தார். சி.ஜே.பாஸ்கர் இயக்கிய இந்த தொடர் சன் டிவியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பானது.
மாலை நேரங்களில் வீடுகளில் கதை பேசிவிட்டு இரவுகளில் வீடுகளில் உறங்கப்போய்விடும் இல்லத்தரசிகளின் தூக்கத்தினை கெடுத்த சீரியல் என்றால் சித்திதான். அனைவரின் வீடுகளிலும் இரவு 9.30 மணியானால் போதும் சித்தீ என்ற குரல் ஒலிக்கும்.

சித்தி
சித்தி தொடரில் இரட்டை வேடத்தில் நடித்தார் ராதிகா. அவருக்கு ஜோடியாக சிவகுமார் நடித்தார். சித்தி தொடரின் இறுதி எபிசோடு ஒளிபரப்பாகும் போது, திருப்பதியில் லட்டு தயாரிக்கும் பணியைக் கூட நிறுத்திவைத்து விட்டு சீரியலைப் பார்க்க பணியாளர்கள் போனார்களாம் இதை ராதிகாவே ஒருமுறை டிவி நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அண்ணாமலை
சித்தி தொடருக்குப் பின்னர் அண்ணாமலை தொடரில் நடித்தார் ராதிகா. திருவண்ணாமலை கோவிலை மையப்படுத்தி இந்த தொடர் எடுக்கப்பட்டிருந்தது. இதுவும் ஒரு வெற்றித் தொடராகவே அமைந்தது.

செல்வி
இலங்கையில் இந்து தமிழகம் வந்து வாழ்க்கையைத் தொடங்கும் பெண்ணின் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட சீரியல் செல்வி. இந்த தொடர் ஏனோ அவசரம் அவசரமாக முடிக்கப்பட்டது. அப்போது வந்த சுனாமியும் சீரியலில் முக்கிய கதாபாத்திரமாக அமைந்தது.

அரசி
செல்வி சீரியலின் தொடர்ச்சியாக வந்த தொடர்தான் அரசி. இந்த தொடரிலும் இரண்டு வேடத்தில் நடித்தார் ராதிகா. இதுவும் வெற்றித் தொடராக அமைந்தது.

செல்லமே
கூட்டு குடும்பத்தின் மேன்மையை சொல்லும் வகையில் எடுக்கப்பட்ட சீரியல் செல்லமே. இதில் ராதிகாவின் அண்ணனாக ராதாரவி நடித்திருந்தார்.

வாணி ராணி
செல்லமே தொடரும் சற்றே குழப்பத்தில்தான் முடிந்தது. இதைத் தொடர்ந்து வாணி ராணி தொடரினை தயாரித்து நடித்து வருகிறார் ராதிகா. இந்த தொடரில் அசத்தலாக இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார் ராதிகா.

17 ஆண்டுகளாக ஹீரோயின்
டிவி சீரியலில் தொடர்ந்து 17 ஆண்டுகளாக ஹீரோயினாகவே நடித்து வருகிறார் ராதிகா. சன் டிவியின் 9.30 மணியை கெட்டியாக பிடித்துக்கொண்டுவிட்டார் ராதிகா.

ராடான் டிவி
ராதிகாவின் ராடான் டிவி நிறுவனம் பிற்பகல் 1.30 மணிக்கும் சன்டிவியில் சீரியலை தயாரித்து ஒளிபரப்புகிறது. சனிக்கிழமை இரவு 10 மணிக்கும், 10.30 மணிக்கும் ராடான் டிவி தயாரிக்கும் சீரியல்கள்தான் ஒளிபரப்பாகின்றன. ஆனால் இவற்றில் ராதிகா நடிப்பதில்லை தயாரிப்பு மட்டுமே.

வெற்றிகரமான தயாரிப்பாளர்
ராதிகா வெற்றிகரமான நடிகை மட்டுமல்ல... சிறந்த சீரியல் தயாரிப்பாளரும் கூட. எனவேதான் சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் சில ஆண்டுகளாக நீடித்து வருகிறார் ராதிகா.


Click it and Unblock the Notifications











