‘ரெங்க விலாஸ்’ வீட்டினை மீட்குமா? அன்பான குடும்பம்?
ஜெயா தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் ரெங்கவிலாஸ் தொடர், தொடக்கம் முதலே மன உணர்வுகளை படம் பிடிக்கும் தொடராக எதிர்பார்ப்புகளை அள்ளிக்கொண்டிருக்கிறது.
ரெங்கவிலாஸ் குடும்பத்தில் உள்ள அனைவருமே அன்பிற்கும், பாசத்திற்கும் கட்டுப்பட்டவர்கள். அதனாலேயே அவர்களுக்குள் ஏற்படும் எந்த பிரச்சினையிலும் முடிவாக அன்பு உட்புகுந்து பிரச்சினையை சரி செய்து விடும்.
ஒரு சூழ்நிலையில் அவர்களுக்கு சொந்தமான திருச்சியிலுள்ள அந்த பெரிய வீடு அவர்களின் கையை விட்டுப்போக நேரிடுகிறது. அதை எப்படி மீட்டு எடுக்கிறார்கள் என்பதுதான் இந்த தொடரின் முக்கிய அம்சம்.

வேதபிரான்-பூங்கோதை
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பட்டாச்சாரியராக பெருமாளுக்கு பணிவிடை செய்து வருபவர் வேதபிரான். அவரது மனைவி பூங்கோதை. அவர்களுக்கு கண்ணன், நாராயணன், வெங்கட்ராமன் என்ற மூன்று மகன்களும், சகுந்தலா என்ற ஒரு மகளும் உண்டு. அனைவரும் திருமணமாகி சென்னையில் வசித்து வருகின்றனர்.

கண்ணன் - சகுந்தலா
இதில் மூத்த மகன் கண்ணனுக்கும், மகள் சகுந்தலாவிற்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு பேச்சு வார்த்தை இல்லாமல் போகிறது. அதற்கு காரணம், அவர் தனது மகன் சந்தோஷின் பூணூல் கல்யாணத்திற்கு தங்கை சகுந்தலாவை அழைக்காமல் விட்டது தான். சகுந்தலாவின் கணவர் பார்த்தசாரதி செய்த ஒரு தவறே அதற்கு காரணம். பார்த்தசாரதியை காட்டிக் கொடுக்காமல் இருக்க, கண்ணன் தன் மேல் பழியை போட்டுக் கொள்கிறான்.

சந்தோஷ் - விசாகா
இப்போது உண்மை நிலவரம் புரிந்து கண்ணனும், சகுந்தலாவும் இணைந்து விடுகிறார்கள். இனி உறவுக்குள் பகை ஏற்பட்டு விடாமலிருப்பதாக கண்ணனின் மகன் சந்தோஷிற்கும், விசாகாவிற்கும் திருமண ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

காதல் நிறைவேறுமா?
ஆனால் சந்தோஷோ, திருச்சியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் வீரமுத்து மகள் பூஜாவை காதலித்து வருகிறான். வீரமுத்துவுக்கோ காதல் என்ற வார்த்தையே பிடிக்காது. எனவே சந்தோஷும், பூஜாவும் இணைந்தார்களா? அல்லது சந்தோஷும் விசாகாவும் இணைந்தார்களா என்பது அடுத்து வரும் வாரங்களில் தெரியும்.

நந்தினியின் தனிமை
மூன்றாவது மகன் வெங்கட்ராமன் மட்டும் இப்போது உயிருடன் இல்லாததால், அவனது மனைவி நந்தினி, வேதபிரான் கோதையுடன் திருச்சியிலேயே வசித்து வருகிறாள்.
அதுபோல் கணவனை இழந்து நிற்கும் நந்தினிக்கு அவளது அத்தை பூங்கோதையே வேறொரு திருமணம் செய்து வைக்க விரும்புகிறாள். ஆனால் வெங்கட்ராமனின் நினைவால் வாடும் நந்தினி, அதற்கு சம்மதிக்க மறுக்கிறாள்.

புதிய நட்பு
இந்த சூழ்நிலையில் அவள் ஆனந்த் என்கிற ஒரு வழக்கறிஞரின் மகளுக்கு நடனம் சொல்லிக் கொடுக்க செல்கிறாள். ஆனந்த்தும் மனைவியை இழந்தவன். அவர்களுக்குள் நட்பு ஏற்படுகிறது. ஆனந்த், நந்தினியை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறான். அவனது விருப்பம் நிறைவேறுமா?

ஜெயசித்ரா - ராதாரவி
தொடரில், ஜெயசித்ரா, ராதாரவி, டெல்லி குமார், வடிவுக்கரசி, பூவிலங்கு மோகன், சதீஷ், சாய்லதா, அனுராதா கிருஷ்ணமூர்த்தி, ராணி, ஸ்ரீவித்யா, குமரேசன், உதய், மகாலட்சுமி, தேசிகா, ரேகா சுரேஷ், விஜய், கிரீஸ் ஆகியோருடன் மேலும் பல முன்னணி நடிகர் நடிகைகளும் நடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











