Actress revathi: நம்ம 'அழகம்மை'க்கு பிறந்த நாள்... நல்லதா நாலு வார்த்தை...!
சென்னை: நடிகை ரேவதிக்கு நேற்றைய தினம் 53 வது பிறந்த நாள். சன் டிவியின் அழகு சீரியலில் மிக அருமையாக நடித்து வருகிறார். நமக்கும் தினமும் நல்ல நடிகை அழகான நடிகை ரேவதியைப் பார்த்த திருப்தி.
கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட ரேவதியின் நிஜப்பெயர் ஆஷா. நம்ம இயக்குநர் இமயம் ராசி பார்த்து ஆங்கில எழுத்து ஆர் வரிசைப்படி பெயர் வைப்பது போல ஆஷாவுக்கும் ரேவதி என்று பெயர் சூட்டினார்.
நடிகை ரேவதியின் தந்தை ராணுவ துறையில் அதிகாரியாகப் பணியாற்றியவர் என்பதால், ராமாவரம் ராணுவ குடியிருப்பில் ரேவதி பெற்றோருடன் வசித்து வந்தவர். பி.ஏ ஆங்கில இலக்கியம் படித்து முடித்து சினிமாவுக்கு வந்தவர்தான் அழகு ரேவதி.

பேட் மிட்டன்
பேட் மிட்டன் விளையாட்டில் ஆர்வம் மிக்க ரேவதி, தினமும் காலையில் ரமாவரம் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் விளையாடுவதைப் பார்க்கவே பசங்க ஜொள்ளு விட்டு காத்திருப்பாங்களாம். இப்படித்தான் பாரதிராஜாவுக்கு ரேவதி பற்றிய தகவல் போயிருக்கு. மண்வாசனை படத்துக்கு கடைசியாகத் தேர்வு செய்யப்பட்டவர் ரேவதி. சின்ன உருவம், மெல்லிய உடல்வாகு, மிக அழகிய முகம் என்று அசத்தும் அழகில் இருந்தார் ரேவதி.

பொள்ளாச்சி ஷூட்டிங்
நகரத்தில் வளர்ந்து எல்லா வசதிகளையும் அனுபவித்து வளர்ந்த ரேவதியை உடனடியாக ஷூட்டிங் அழைத்து சென்றது பொள்ளாச்சிக்கு. ஆணாலும் முகம் சுளிக்காத ரேவதி, சிரித்த முகத்துடன் மிகவும் விளையாட்டுத் தனமாக ஜாலியாக ஷூட்டிங்கை என்ஜாய் பண்ணியதாக சொல்கிறார்கள். இதை எல்லாத்தையும் விட பாரதிராஜா எக்ஸ்பிரஷன் சொல்லித் தரும் அழகை மிகவும் ரசிப்பாராம். இயக்குநரை விட்டு, அங்கும் இங்கும் நகராமல் பாரதிராஜாவை வெகுவாக ரசிப்பாராம். அதோடு, அவருக்கும் படத்தை இயக்கும் திறனை கற்றுக்கொள்ள ஆசை இருந்ததாம்.

மல்லிகை மொட்டு
பொத்தி வச்ச மல்லிகை மொட்டு பாடலில் பார்த்தால் தெரியும். இவர் வயல் வரப்புகளில் வெயிலில் நடிச்சு, இவரின் நிறம் கூட மங்கி இருந்தது. ஜாக்கெட் கை இடம் நிறம் மங்கி இருக்க, அதற்கு மேல் தோள்கள் வெள்ளையாக இருக்கும். அப்படி உழைத்துத்தான் பாவம் மண் வாசனை படத்தில் புகழடைந்தார்.
புதுமைப் பெண் படத்தின் கதாபாத்திரத்தை கற்பனை செய்தால், அதில் ரேவதியை நடிக்க வைப்பதா... புரட்சிப்பெண் கதாபாத்திரத்துக்கு இந்த குட்டியான உருவம் ஒத்து வருமா என்றுதான் நாம் யோசிப்போம். ஆனால், நடந்தது நிஜமான புரட்சிப் பெண்ணாகவே ரேவதி நடித்து அசத்தி இருப்பார்.

புன்னகை மன்னன்
இவருக்கு கார்த்திக் மிகவும் பிடித்த நடிகர். கமல்ஹாசன், பிரபு, கார்த்திக், விஜயகாந்த் என்று இவர் நடித்த எல்லா நடிகர்களுடனும் நெருக்கமாக நடித்து இருந்தாலும் இவருக்கு பெரிய பிளஸ் நடிப்பிலோ, உருவத்திலோ எந்த ஆபாசமும், கவர்ச்சியும் தெரியாது .ஆனால்,அழகு மிளிரும். மவுன ராகம் படத்தில் ரேவதி மழையில் நனைந்து ஆடும் பாடலைப் பார்த்து இம்ப்ரஸ் ஆன இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் சார், புன்னகை மன்னனில் நடிக்க வைத்து வான் மேகம் பூப்பூவாய்த் தூவும்னு மழையில் நனைய வைத்து ரசித்து பாடலைப் படமாக்கினார். இப்படி இவர் பல படங்களில் நடித்துக்கொண்டு இருக்கும்போது ஒளிப்பதிவாளர் சுரேஷ் மேனன் மீது காதல் வந்தது.

என்ன கோபமோ
திடீரென்று திரையுலகத்தின் மீது ரேவதிக்கு என்ன கோவம் வந்ததோ கல்யாணத்தை கேரளாவில் வைத்துக்கொண்டார். ரேவதி என்ற பெயரில் இல்லாமல் ஆஷா கேளுன்னி என்று கல்யாணப் பத்திரிகையில் பெயரை அடித்தார். தனது குருநாதர் உட்பட எந்த ஒரு திரை பிரபலத்துக்கும் அழைப்பு விடுக்காமல் திருமணம் செய்துகொண்டார். சிறிது காலம் படங்களில் நடிக்காமல் இருந்தார்.

அடுத்தடுத்து படங்கள்
பின்னர் நடிக்க வந்த ரேவதி மேலும் அழகில் மெருகு கூடி இருந்தார். திருமணத்துக்குப் பின்னர் நடிக்க வந்த நடிகைகளில் இவருக்கு கிடைத்த வரவேற்பு, கதாநாயகி வாய்ப்பு மற்ற நடிகைகளுக்கு திருமணத்துக்குப் பின்னர் கிடைத்ததா என்பதில் சந்தேகம்தான்.தேவர் மகன் படம் கூட இவரது திருமணத்துக்குப் பின்னர் நடித்ததுதான். மகளிர் மட்டும் இப்படி இவர் முத்திரைப் பதித்த படங்கள் பல.

இருவரும் பிரிந்தனர்
ஏனோ தம்பதியருக்கு குழந்தை எதுவும் பிறக்கவில்லை. ஆனாலும் இருவரும் விவகாரத்தும் பெற்றுக் கொண்டார்கள், இப்போது படங்கள், சீரியல் என்று நடித்து கொண்டு இருக்கும் ரேவதிக்கு பெண் குழந்தை ஒன்று மூன்று வயதிலுள்ளது. எனது அப்பா அம்மா கொடுத்த பரிசு என்று மட்டும் சொல்லும் ரேவதி வேறு எதையும் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளவில்லை.
நல்ல அழகான திறமை வாய்ந்த நடிகை.. அழகிலும், நடிப்பிலும் மெருகு கூடி மேலும் சிறந்து நடிக்கட்டும் என்று வாழ்த்துவோம்!


Click it and Unblock the Notifications