வீணாகும் மனித உழைப்பு: 100 நாள் வேலைத்திட்டத்தில் அதிர வைக்கும் ஊழல்!

By Mayura Akilan

Rural Scheme
சென்னை: விவசாயிகளுக்கு நன்மை செய்யவேண்டும் என்று தொடங்கப்பட்ட நூறு நாள் வேலை உறுதித் திட்டம் இன்றைக்கு விவசாயத்தையே அழித்து வருகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. விவசாயத்திற்கான கூலி ஆட்கள் கிடைக்காமல் ஒருபக்கம் திண்டாடி வரும் நிலையில் நூறு நாள் வேலை உறுதித்திட்டத்தில் நடைபெறும் பல்வேறு முறைகேடுகளை அம்பலப்படுத்தியது புதியதலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'ரௌத்திரம் பழகு' நிகழ்ச்சி.

எந்த ஒரு அரசாங்கத்திட்டமும் ஊழல் இன்றி செயல்படுவதில்லை. அதற்கு நூறு நாள் வேலை உறுதித் திட்டமும் தப்பவில்லை. கிராமப்புற பாமர மக்கள் எல்லாம்வேலை வாய்ப்பின்றி நகர்புறங்களை நோக்கி படையெடுக்க ஆரம்பித்த காரணத்தால் அவர்களின் வாழ்வாதாரத்திற்காக 2005-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் நாள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழகத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டமாக 2008-ஆம் ஆண்டு இந்த திட்டம் அடியெடுத்து வைத்தது.

இத்திட்டத்தின் அடிப்படையில் நூறு நாட்கள் வேலை செய்ய வேண்டும். இதில் ஆண், பெண் என இருபாலரும் அடங்குவர். அவர்களது கிராமத்தின் சுற்றுசூழலை செம்மைப் படுத்துவதே இந்த நூறு நாள் வேலை திட்டத்தின் சிறப்பம்சமாகும். இதன் அடிப்படையில் காட்டு வளங்களைப் பாதுகாத்தல், குளம், குட்டை, ஏரிகளை செப்பனிடுதல், சாலை பணிகளை சீர்திருத்துதல் மற்றும் சாலை இணைப்பு வசதியினை மேம்படுத்துதல், மரம் நடுதல், பழுதுபட்டுள்ள கால்வாய்களை சீர் செய்தல், களைகளை களைதல் போன்ற பணிகளை செய்து வருகின்றனர்.

18 வயது முதல் 60 வயதினர் வரை இந்த திட்டத்தின் கீழ் பணியாற்றலாம். தனி நபருக்கென மட்டுமல்லாமல், மொத்த குடும்ப உறுப்பினர் அனைவரும் இத்திட்டத்தின் கீழ் பணியாற்றலாம். அவர்களுக்கென தனித்தனியாக "வேலை அட்டை" வழங்கப்படுகிறது. தினசரி இவர்களது பணி நேரம் காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே. வாரம் ஒருமுறை பணியாளர்கள் வேலை செய்த நாட்களின் எண்ணிக்கை அடிப்படையில் அவர்களுக்கு சம்பளம் வழங்கப் பட்டு வந்தது. ஆனால், இத்திட்டத்தில், பணிகள் நடக்காமலே பணிகள் நடந்ததாகவும், தொழிலாளர்களின் பெயர்களை போலியாக தயார் செய்து, திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகையை உள்ளாட்சி பிரதிநிதிகளும், பணியாளர்களும் சுருட்டிக் கொள்ளும் செயல்கள், பல பகுதிகளில் நடந்து கொண்டிருக்கின்றன.

தற்போது ஒரு நபருக்கு 119 ரூபாய் கூலி வழங்கப்பட வேண்டும். ஆனால் வெறும் 80 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது என்று புகார் கூறியுள்ளனர் பாதிக்கப்பட்ட கூலித் தொழிலாளிகள். கிராம பஞ்சாயத்து தலைவர் தொடங்கி கடைக்கோடி ஊழியர் வரை இந்த ஊழல் பணத்தில் பங்கெடுத்துக் கொள்கின்றனர் என்று தனது ஆதங்கத்தை வெளியிட்டார் ஏங்கல்ஸ் ராஜா.

காங்கிரஸ் அரசு விவசாயத்தை கார்ப்பரேட் ஆக்க முயற்சிக்கிறது. அதன் ஒருபகுதியாகத்தான் விவசாயத்தில் அளவிற்கு அதிகமாக இவ்வளவு பேர் ஈடுபடாதீர்கள் என்று பிரதமர் மன்மோகன் சிங்கும், நிதி அமைச்சர் சிதம்பரமும் கூறி வருவதாக ஏங்கல்ஸ் ராஜா குற்றம் சாட்டினார். விவசாயிகளை வாழ வைக்கிறோம் என்று தொடங்கப்படும் திட்டங்கள் எல்லாம் சரியான கண்காணிப்பு இல்லாத காரணத்தினால் அவரின் வாழ்க்கையை முடிக்கும் திட்டங்களாக மாறுகின்றன. இந்த திட்டம் விவசாயத்தை முற்றிலும் ஒழிக்கும் திட்டம் என்றும் அவர் தெரிவித்தார்.

ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் விவசாயத்தை முன்னிலைப்படுத்தி வேலைகள் வழங்கப்பட வேண்டும். ஆனால் இதில் மனித உழைப்பு வீணாக்கப்படுகிறது என்ற புகார் எழுந்துள்ளது. மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் விவசாயத்தை முன்னிறுத்தி பணிகள் வழங்கப்பட வேண்டும் என்று மாற்றுத் திட்டத்தை முன்வைத்துள்ளார். அது எந்த அளவிற்கு வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் என்று தெரியவில்லை.

நூறு நாட்கள் வேலை வழங்கப்படவேண்டும் என்பது அரசின் உத்தரவு ஆனால் 2010-2011ம் ஆண்டு 44 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டிருக்கிறது. 2011-2012 பிப்ரவரி வரை 38 நாட்கள் மட்டுமே வேலை நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கிறது புள்ளிவிபரம் ஒன்று. மக்களுக்கு கொடுப்பதற்கான பணிகள் இல்லை.

அரசின் திட்டங்கள் எல்லாம் விழலுக்கு இறைத்த நீராக மாறிவரும் நிலையில் விவசாயத்திற்கு மேலும் அச்சுறுத்தல்கள் காத்திருக்கின்றன என்று எச்சரிக்கையோடு முடிந்தது அந்த நிகழ்ச்சி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X