தள்ளாத வயதில் தடுமாறும் முதியவர்கள்… தலைக்கு ஊற்றி கொலை…

By Mayura Akilan

Puthiya thalaimurai
நடமாட்டம் இல்லைன்னா என்னா செய்யிறது? நல்லெண்ணை, விளக்கெண்ணை, தேங்கா எண்ணெய் சேர்த்து தலையில வச்சு தேச்சு குளிப்பாட்டி விடுவோம். அப்புறம் எளனி கொடுப்போம். அது பாட்டுக்கு கம்முன்னு படுத்தமானக்கி போயிடும்... சனிக்கிழமை செய்வோம்... அப்பத்தான சொந்தக்காரங்க எல்லோரும் வருவாங்க...

இது வீட்டில் உள்ள வயதானவர்களை கொலை செய்யும் நூதன முறை.... அதைத்தான் பிரபல தொலைக்காட்சியில் பகிரங்கமாக தெரிவித்தார் அந்த வைத்தியர். கேட்கும் போதே பதை பதைக்கும் இது போன்ற சம்பவங்கள் சத்தமில்லாமல் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இன்றைய முதியவர்களின் நிலை பற்றி கடந்த சனியன்று ரௌத்திரம் பழகு நிகழ்ச்சியில் ஒளிபரப்பானது. அதில்தான் மூத்த குடிமக்கள் வீதிகளில் விடப்படுவது பற்றியும், வீட்டில் நடமாட்டம் இன்றி இருக்கும் முதியவர்கள் கொலை செய்யப்படுவது பற்றியும் ஒளிபரப்பினார்கள்.

தலைக்கு ஊத்திருப்பா...

சிசுக்கொலைகள் கேள்விப்பட்டிருப்போம். அது பரபரப்பாக பேசப்படுகிறது. ஊடகங்களில் செய்தியாக வெளியாகி தண்டனை பெற காரணமாகிறது. ஆனால் முதியவர்கள் கொல்லப்படுவது பற்றி வெளியே தெரிவதில்லை. அவர்களுடனேயே போட்டு அடக்கம் செய்யப்படுகிறது. முடியாமல் படுத்திருக்கும் முதியவர்களை தலைக்கு ஊற்றி அவர்களுக்கு சமாதி கட்டிவிடுகின்றனர் அவர்களின் பிள்ளைகள்.

விருதுநகர் மாவட்டத்தில் அதிகம்

இதுபோன்ற சம்பவங்கள் விருதுநகர் மாவட்டத்தில் அதிகம் நடைபெறுவதாக ஒரு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது என்கிறார் பத்திரிக்கையாளர் பிரமீளா கிருஷ்ணன். அது பற்றி மாவட்ட ஆட்சியாளரிடம் கேட்டால் மழுப்பலான பதில்தான் கிடைக்கிறது.

புறக்கணிப்பும் அலட்சியமும்

ஓடி ஆடி திரிந்த போது ஒத்தாசையாய் இருந்த பெற்றோர்கள்... தள்ளாமையினால் தடுமாறும் போது ஒதுக்கப்படுகின்றனர். இளைய தலைமுறையினரின் புறக்கணிப்பு ஒருபுறம்.. தள்ளாமை மறுபுறம் என தடுமாறித்தான் போகின்றனர்.

முதியோர் இல்லங்களில் அவலம்

கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு இடம் பெயரும் போது பெற்றோர்களை விட்டுவிட்டு வரவேண்டிய நிலை ஏற்படுகிறது. இதன் காரணமாகவும் பெற்றோர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். நகரங்களில் கவனிக்க முடியாதவர்கள் முதியோர் இல்லங்களில் கொண்டுபோய் விட்டுவிடுகின்றனர்.

இரண்டு பிள்ளைகள் இருந்தால் தாயை ஒருவரும், தந்தையை ஒருவரும் பிரித்து வைத்து பந்தாடுகின்றனர். தள்ளாத வயதில் இருவரும் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக இருக்கவேண்டும் என்ற நிலை இங்கே அடித்து நொறுக்கப்படுகிறது.

செத்துப் போவதே மேல்

தனியாக கிடந்து தவிப்பதை விட செத்துப்போவதே மேல் என்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றனர் முதியவர்கள். தவிர பாரம் என்று கருதும் பிள்ளைகள் சில தலைக்கு ஊற்றியோ, ஊசி போட்டோ, சமயத்தில் பிராந்தியை(!) வாயில் ஊற்றியோ கொலை செய்துவிடுகின்றனர்.

மூத்த குடிமக்களின் உரிமை

கடந்த ஆண்டு மட்டும் 300 வயதானவர்கள் சென்னை நகரின் தெருக்களில் விடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டை விட இது அதிகமாகும். இதை விடக் கொடுமை பெற்ற தாயை உயிரோடு சுடுகாட்டில் கொண்டு போய் போட்ட சம்பவமும் நடந்துள்ளது என்பதுதான்.

வசதியற்றவர்களின் நிலை

பராமரிக்க முடியாத அல்லது பராமரிக்க விரும்பாத சொந்தங்கள் முதியவர் இல்லங்களுக்கு கொண்டுபோய் விடுகின்றனர். இத்தனை ஆண்டுகளாக அவர்களின் உழைப்பை உறிஞ்சிவிட்டு இப்போது சக்கையாய் துப்பிவிட்டோமோ என்ற குற்ற உணர்வு கூட இன்றைய இளைய தலைமுறையினருக்கு இல்லை என்பதுதான் வேதனை.

சம்பளமில்லாத வேலைக்காரர்கள்

இதை விட கொடுமை கவனிக்கிறேன் பேர்வழி என்று சம்பளமில்லாத வேலைக்காரர்களாக பெற்றவர்களை நடத்துவதுதான். வயதானவர்களுக்கு பேருந்துகளில் கூட இடம் கொடுக்காத நிலைதான் உள்ளது. வயதானவர்களின் உரிமைகள் பல இடங்களில் மறுக்கப்படுகின்றன.

யாருக்கும் தெரியவில்லை

5 கோடி வயதானவர்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வசிக்கின்றனர் என்று புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாயைக் கூட அடித்துப் பிடிங்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்கின்றனர். பெற்றோர்களை பராமரிப்பது, அவர்களுக்கு உணவு அளிப்பது பிள்ளைகளின் கடமை.

குழந்தைகளாக மாறும் முதியோர்

வயதானவர்களும் குழந்தைகள்தான். நம்மைப் பேணிக்காத்த பெற்றோர்களை பராமரிக்க வேண்டியது பிள்ளைகளின் கடமை. ஆனால் நமக்கு பிள்ளைகள் இருக்கிறது என்பதற்காக நம்மை பெற்றவர்களை நாம் தவிக்க விடுவது எந்த விதத்தில் நியாயம் என்ற கேள்வியோடு முடிந்தது ரௌத்திரம் பழகு நிகழ்ச்சி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X