மனைவியிடம் சரணடையுங்கள்... சீரியல்கள் சொல்லும் கதை!
சென்னை: விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி தொடரில் இருவரையும் ஒருவழியாக ஜோடி சேர்த்துவிட்டார்கள்.
காதல், மோதல், திருமணம், ஊடல் என்று பயணித்த தொடர் விவாகரத்துவரை போனது. இருவரும் பிரிந்து விடுவார்களோ? இவர்களின் வாழ்க்கையில் முடிவா? தொடக்கமா? என்று பேசி பேசி கடைசியில் மீனாட்சியிடம் சரணடைந்துவிட்டார் சரவணன்.
இருவரும் சேர்ந்து கனடாவிற்குப் போனார்கள். 520 எபிசோடுகள் வரை நிச்சயதார்த்தம், திருமணம், என்று ஓட்டியவர்கள் கடைசியில் வளைகாப்பு விழாவையும் நடத்திவிட்டுதான் எபிசோடுகளை முடிப்பார்கள் என்று நினைத்த நிலையில் திடீரென்று 20 ஆண்டுகாலத்தை ஓட்டிவிட்டார்கள். இதேபோல் பல சீரியல்களில் கணவன் மனைவி இடையேயான ஊடல்... கடைசியில் கூடல் என தொடர்கள் போய்கொண்டிருக்கின்றன.

சரவணன் மீனாட்சி
சரவணனும் மீனாட்சியும் ஆரம்பம் முதலே ஊடல், கூடல் என ஒரே கலவரம்தான். விவாகரத்து என்று முடிவான நேரத்தில் மீனாட்சி கர்ப்பமடையவே கனடா போகும் நேரத்தில் மீனாட்சியிடம் சரணடைகிறான் சரவணன். இருவரும் சேர்ந்து கனடாவிற்கு போய்விட்டனர்.

புது சரவணன்
சரவணன் மீனாட்சிக்கு ஆண் குழந்தை பிறந்து இப்போது 20 வயது இளைஞனராக இந்தியாவிற்கு திரும்பியுள்ளான். அவனுக்கு ஏற்ற பெண்ணைத் தேடி இப்போது இந்தியாவிற்கு வந்துள்ளனர். அம்மா மீனாட்சியைப் போல தனக்கு பெண் வேண்டும் என்று தேடுகிறான் புது சரவணன் கிடைப்பாளா? என்பதுதான் இனி அடுத்த எபிசோடுகளின் கதை.

பாரதியின் கதை
சன் டிவியின் பொம்மலாட்டம் தொடரில் இதே கணவன் மனைவி பிரச்சினைதான். சித்தப்பாவின் சதியினால் சந்தோஷ் - பாரதி வாழ்க்கையின் சந்தோசம் பறிபோகிறது. இருவரும் பிரிந்து வாழ்க்கின்றனர்.

இங்கேயும் குழந்தைதான்
பாரதி கர்ப்பமாக இருக்கிறாள். பிரிவிற்குப் பிறகுதான் சந்தோசுக்கு தெரியவருகிறது. ஆனாலும் மனைவிடம் பேசமுடியாமல் தவிக்கும் சந்தோஷ் ஒரு கட்டத்தில் பாரதியின் காலில் விழுந்து உண்மையை கூறி அழுகிறான். அவனை பாரதி ஏற்றுக் கொள்வாளா? அல்லது பெற்றோர்களின் பேச்சைக் கேட்டு குழந்தையை கலைத்துவிடுவாளா என்பதை இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

தென்றல் ஜோடி
தென்றல் சீரியலில் அடிக்கடி முட்டிக்கொள்ளும் ஜோடி தமிழ் - துளசி இப்போது ஒருவழியாக இருவரும் சமாதானமாகிவிட்டனர். காரணம் துளசியிடம் தன்னுடைய தவறை உணர்ந்து சரணடைந்த காரணம்தான் என்கின்றனர் இல்லத்தரசிகள்.

வாணி – ராணி
வாணி - ராணி சகோதரிகளை பிரித்த பூமிநாதன் இருவரின் நிலையை உணர்ந்து கடைசியில் வாணியிடம் சரணடைகிறான். ஆனால் அவன் மீண்டும் நடிப்பதாக வாணியும், பிள்ளைகளும் நினைக்கின்றனர். எப்போது இந்த பிரச்சினை முடிவுக்கு வரும்? என்பது தெரியவில்லை. மொத்தத்தில் எல்லா சீரியல்களும் மனைவியிடம் சரணடைந்தால் சந்தோசம் கூடி வரும் என்றே சொல்கின்றன.


Click it and Unblock the Notifications











