காதலிப்பது குற்றமா? வெளிச்சத்துக்கு வரும் 'கெளரவ கொலைகள்'!

காதல் என்ற மூன்றெழுத்துச் சொல் அத்தனை சக்தி வாய்ந்தது. அதற்கு மதம் தெரியாது, ஜாதி கிடையாது, நிற பேதம் பார்க்காது. ஆனால் காதலிப்பதை குற்றமாக பார்க்கும் சுற்றத்தினர் இன்றைக்கு இருக்கத்தான் செய்கின்றனர். வட நாட்டில் காதலிப்பவர்களை கவுரவக் கொலை செய்யும் பெற்றோர்களைப் பற்றியும் காதலுக்காக உயிரை மகனையோ, மகளையோ இழந்த பெற்றோர்களைப் பற்றியும் அமீர்கான் வெளிச்சம் போட்டு காட்டினார்.
தமிழ்நாட்டிலும் இன்றைக்கு பெரும்பாலான ஊர்களில் காதலிப்பது தவறு என்ற கண்ணோட்டத்துடனே பார்க்கப்படுகிறது. ஆங்காங்கே கவுரக் கொலைகளும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. 2003ம் ஆண்டு தலித் சமுதாயத்தைச் சேர்ந்த முருகேசன், உயர்குடி சமூகத்தைச் சேர்ந்த கண்ணகியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பதற்காக ஊரார் முன்னிலையில் நடுத்தெருவில் விஷம் ஊற்றி கொலை செய்யப்பட்டனர்.
அதேபோல் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பரமக்குடியைச் சேர்ந்த திருச்செல்வி தலித் இளைஞரான டேனியல்ராஜ் என்பவரை காதலித்த காரணத்திற்காக தன் பெற்றோர்களாலேயே கொல்லப்பட்டார்.
சென்னையை சேர்ந்த பார்த்தசாரதி, சரண்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதற்காக சரண்யாவின் பெற்றோரே கூலிப்படையை வைத்து பார்த்த சாரதியை கொலை செய்துள்ளனர். இவைகள் தெரிந்த சில சம்பவங்கள்தான்.
ஆனால் எத்தனையோ சம்பவங்கள் இன்றைக்கும் மூடி மறைக்கப்பட்டு யாருக்கும் தெரியாமல் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதற்கு என்னதான் தீர்வு? வெறும் சட்டங்களால் மட்டுமே இதை கட்டுப்படுத்திவிட முடியுமா என்றால் முடியாது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். சாதி, மதம் குறித்த சமூகத்தின் பார்வை மாறவேண்டும். மக்களின் மனதில் மாற்றம் வந்தால் மட்டுமே இதனை முற்றிலும் ஒழிக்க முடியும் என்று கூறுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.
சிறுவயது முதலே சாதியை விமர்சிக்கும் கல்வி முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்று கூறும் சமூக ஆர்வலர்கள், இன்றைக்கு எல்.கே.ஜி படிக்க பள்ளியில் சேர்க்கும் போதே சாதிச் சான்றிதழ் இருந்தால்தான் அனுமதி கிடைக்கிறது. முதலில் இந்த முறைக்கு அரசாங்கம் தடை விதிக்க வேண்டும் என்பதும் அவர்களின் கோரிக்கையாகும்.


Click it and Unblock the Notifications











