அய்யோ.. அவனைத் தூக்கிப்போடுற நிலைமை வந்துடுச்சே.. உயிரிழந்த உதவியாளரை நினைத்து கலங்கும் தேவி பிரியா!
சென்னை: செல்லமே, அண்ணாமலை, அத்திப்பூக்கள், சந்திரலேகா எனப் பல சூப்பர் ஹிட் மெகா தொடர்களில் வில்லியாகவும், குணச்சித்திர நடிகையாகவும் வலம் வந்து ரசிகர்களின் மனதை வென்ற சீனியர் நடிகை தேவிப்ரியா. இவர் சிறந்த நடிகை மட்டுமன்றி, வெள்ளித்திரையில் பல முன்னணி நாயகிகளுக்குக் குரல் கொடுத்த பிரபல டப்பிங் கலைஞரும் ஆவார்.
சினிமா, சின்னத்திரை என பிஸியாக வலம் வந்த தேவிப்ரியாவின் வாழ்க்கையில், கடந்த மார்ச் மாதம் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த ஒரு கோர விபத்து ஆறாத வடுவை ஏற்படுத்தியது. அந்த விபத்து நடந்து 6 மாதங்கள் கடந்த நிலையிலும், அதில் பலியான தனது ஓட்டுநரின் மரண வலியில் இருந்து மீள முடியாமல் அவர் போட்டி அளித்துள்ளார்.

பெருஞ்சோகம்: கடந்த மார்ச் மாதம் நடிகை தேவிப்ரியா சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான தேனிக்குக் காரில் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தார். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பாடலூர் ஆஞ்சநேயர் கோயில் அருகே கார் சென்று கொண்டிருந்தபோது திடீரென காரின் டயர் பஞ்சரானது. இதையடுத்து காரை ஓரங்கட்டி நிறுத்திய ஓட்டுநர் முத்துகணேஷ் மற்றும் தேவிப்ரியாவின் உதவியாளர் திவாகர் ஆகிய இருவரும் காரின் டயரை மாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது பின்னால் அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று, இவர்கள் மீது பயங்கரமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த கொடூர விபத்தில் ஓட்டுநர் முத்துகணேஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். நடிகை தேவிப்ரியா சிறு சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில், அவரது உதவியாளர் திவாகர் படுகாயமடைந்தார்.
அவன் தான் என் பலம்: முத்துகணேஷ் இறந்து ஆறு மாதங்களுக்கு மேலாகியும், அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாத தேவிப்ரியா, அவனுடைய மரணத்தை என்னால் இன்னும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. எங்கு திரும்பினாலும் அவனுடைய முகமாகத்தான் இருக்கிறது. படப்பிடிப்புத் தளத்தில் கூட என்னை விட அவனுக்குத்தான் அதிகமான நண்பர்கள் இருந்தார்கள். அவன் அனைவரிடமும் மிகவும் அன்பாகப் பழகக் கூடியவன். அவன் எனக்கு ஒரு உதவியாளர் மட்டுமில்லை. எனக்கு ஒரு பாதுகாவலனாக இருந்தான். என் வாழ்க்கையின் மிகப்பெரிய பக்கபலமே அவன் தான். என் வாழ்க்கையில் விழுந்த மிகப்பெரிய அடி அவனுடைய இழப்புதான். பணம் போனால் சம்பாதித்துக் கொள்ளலாம், எல்லாத்தையும் ஈடு கட்டிவிட முடியும். ஆனால் இவனுடைய இழப்பை என்னால் என் வாழ்நாளில் ஈடு செய்யவே முடியாது. பலமுறை நான் அவனிடம் சொல்லியிருக்கிறேன், நான் இறந்துவிட்டால் என்னை நீதான் பெருமையாகத் தூக்கிப் போட வேண்டும் என்று. ஆனால், விதி கடைசியில் நான் உயிரோடு இருக்கும்போதே அவனை நானே தூக்கிப் போடுவது போல ஆகிவிட்டது என்று தேவிப்ரியா கண்ணீர் மல்கக் கதறி அழுதுள்ளார்.


Click it and Unblock the Notifications