சின்னத்திரை நடிகர் சங்கத்தேர்தல்: தலைவர் பதவிக்கு நளினி போட்டி
சின்னத்திரை நடிகர் சங்கத்தேர்தல் வரும் 12ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் தலைவர் பதவிக்கு நடிகை நளினி போட்டியிடுகிறார். நளினி தவிர மேலும் மூவர் போட்டியிடுவதால் தேர்தல் பரபரப்பு சின்னத்திரை வட்டாரங்களில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
சின்னத்திரை நடிகர்கள் சங்கம் 2003ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சின்னத் திரை நடிகர்களின் நலன், அவர்களது ஆரோக்கியம், குழந்தைகள் கல்வி, கால்ஷீட் பிரச்சினை, தயாரிப்பாளர்களுடனான பிரச்சினை ஆகியவற்றை மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.இதற்கு 3 ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

2014-2017ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் வருகிற 12ந் தேதி நடக்கிறது. இதில் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், 2 துணை தலைவர்கள், 4 இணை செயலாளர்கள், 14 செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள்.
வசனகர்த்தாவும் நடிகருமான லியாகத்தலிகான் தேர்தல் அதிகாரியாக இருந்து தேர்தலை நடத்துகிறார்.
வரும் அக்டோபர் 12-ம் தேதி விருகம்பாக்கம் மார்க்கெட் அருகில் இருக்கும் கிரிஸி கல்யாண மண்டபத்தில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரையிலும் வாக்குப் பதிவு நடைபெறும்.
முக்கிய பதவிகளுக்கான ஓட்டுக்கள் அன்றைய தினமே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். செயற்குழு உறுப்பினர்களுக்கான ஓட்டுக்கள் மறுநாள் எண்ணப்படும்.
இதில் தலைவர் பதவிக்கு நடிகர்கள் ராஜேந்திரன், சிவன் சீனிவாசன், நடிகை நளினி ஆகியோர் போட்டியிடுகிறார்கள் இவர்கள் தனித்தனி அணியாக மற்ற பொறுப்புகளுக்கும் தங்கள் அணியினரை நிறுத்தி உள்ளார்கள்.
ராஜேந்திரன் அணியில்
நடிகர் ராஜேந்திரன் அணியில் தலைவர் பதவிக்கு ராஜேந்திரன் போட்டியிடுகிறார். செயலாளர் பதவிக்கு ரவிவர்மாவும், பொருளாளர் பதவிக்கு கே.எஸ்.ஜி.வெங்கடேஷும் போட்டியிடுகிறார்கள். துணைத் தலைவர் பதவிக்கு வின்சென்ட் ராய், ராஜசேகர் இருவரும் போட்டியிடுகிறார்கள். இணைச் செயலாளர் பதவிக்கு சதீஷ், தேவ் ஆனந்த், மீனா குமாரி, ஷியாம் சுந்தர் ஆகிய நான்கு பேர் போட்டியிடுகிறார்கள்.
சாந்தி வில்லியம்ஸ்
செயற்குழு உறுப்பினர் பதவிக்கு குமரேசன், சாந்தி வில்லியமஸ், ஜெயந்த், கே.லஷ்மி பிரசன்னா, பிர்லா, எஸ்.பி.செந்தில்வேலன், எம்.சுவாமிநாதன், டாக்டர் டி.கிரிதரன், டி.வி.வி.ராமானுஜம், எஸ்.காமேஷ்குமார், எஸ்.கனகப்பிரியா, எஸ்.ரமா, கே.பி.அண்ணாதுரை, டி.ஜெயந்த் மாதவ் ஆகிய 14 போட்டியிடுகின்றனர்.
நளினி - பூவிலங்கு மோகன்
நடிகை நளினியின் அணியில் நளினி தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார். ‘பூவிலங்கு மோகன்' செயலாளர் பதவிக்கும், வி.டி.தினகரன் பொருளாளர் பதவிக்கும், ராஜ்காந்த், மனோபாலா ஆகிய இருவரும் துணைத் தலைவர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர். பாபூஸ், பரத், கன்யா பாரதி, சாதனா ஆகிய நால்வரும் இணைச் செயலாளர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.
வினோதினி - சந்தோஷி
செயற்குழு உறுப்பினர் பதவிக்கு ஜி.நந்தகுமார், என்.எம்.விஜய் ஆனந்த், கெளதமி, அரவிந்த், ஆதித்யா, நித்திஷ், லஷ்மிராஜ், சத்யா, நவீந்தர், பிரேம், எஸ்.ரூபஸ்ரீ, வினோதினி, சந்தோஷி, ரேகா சுரேஷ் ஆகிய 14 பேர் போட்டியிடுகின்றனர்.
அணி மாறிய கோஷ்டி
சென்ற வருடம் போட்டியிட்டு தோற்றுப் போனாலும் மீண்டும் இந்த வருடமும் முழு முயற்சியாக களத்தில் குதித்திருக்கிறார் நடிகர் சிவன் சீனிவாசன். தற்போதைய தலைவர் ராஜேந்திரனின் தலைமையில் சென்ற வருடம் போட்டியிட்ட நிர்வாகிகளில் 10 பேர் தற்போது நளினியின் அணிக்குத் தாவி விட்டார்களாம்.. ஆக.. அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் தற்போது இது போன்ற கலைஞர்களின் சங்கங்களிலும் நடைமுறைக்கு வந்துவிட்டது..!
சுயேட்சை போட்டி
நடிகை ஜெயதேவி மட்டும் சுயேட்சையாக தலைவர் பதவிக்கு மட்டும் போட்டியிடுகிறார். தலைவர் பதவிக்கு கடும் போட்டியிருப்பதால் தேர்தலும் பரபரப்பாக நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











