புதுயுகத்தில் மல்லி... சீரியலுக்கு வந்த சோனியா அகர்வால்!
பிரபல சினிமா நடிகை சோனியா அகர்வாலும் சின்னத் திரைக்குள் நுழைந்தார். புதுயுகம் தொலைக்காட்சியில் மல்லி என்ற மெகா தொடரில் நடிக்கிறார்.
இந்தத் தொடரில் வினோதினி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சோனியா அகர்வால். கணவனிடம் இருந்து நெருக்கடிக்கு மேல் நெருக்கடியைச் சந்திக்கும் ஒரு பெண் எடுக்கும் முடிவுதான் கதை.

மல்லி கதை
காதலுக்காக குடும்பத்தினரை எதிர்த்துத் திருமணம் செய்தவர்கள் பிரசாத் - வினோதினி தம்பதி. இவர்களுக்குப் பிறந்த ஒரே குழந்தையான ஷிவானி அழகும் அறிவும் நிரம்பியவள். கட்டிடத் துறையில் பிரசாத்தும், கார்மெண்ட்ஸ் துறையில் வினோதினியும் கொடிகட்டிப் பறப்பதால், ஷிவானியை கவனிக்க நேரமின்றி தவிக்கிறார்கள். இந்த நேரத்தில் வினோதினியின் தந்தை இறந்துவிடவே, தாய் யமுனாவை தன்னுடைய வீட்டிற்கு கூட்டி வருகிறாள். யமுனாவின் வருகை பிரசாத்துக்கும் ஷிவானிக்கும் பல வகைகளில் இடைஞ்சலாக இருக்கிறது. அதனால் கணவன் மனைவிக்கு இடையே இடைவெளி உண்டாகிறது. இதனை எப்படித் தவிர்ப்பது என்று புரியாமல் தவிக்கிறாள் வினோதினி.

குழப்பம்
பிரசாத்தின் அண்ணன் சிவகுருவின் குடும்பத்திலும் குழப்பம் உண்டாகிறது. பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் சிவகுருவின் மனைவி லட்சுமி, குடும்பத்தைக் கவனிக்காமல் பிசினஸ் செய்வதாக வெளியே சுற்றுகிறாள். தனியே சுதந்திரமாக வாழும் பிரமிளா என்ற பெண்ணின் ஆலோசனையைக் கேட்டு, சொத்துக்களை தன்னுடைய பெயரில் எழுதிவைக்குமாறு கணவனிடம் சண்டை போடுகிறாள்.

ஷிவானி
இந்த நேரத்தில் ஷிவானிக்கு விளையாட்டுத் தோழனாக அறிமுகமாகிறான் சிறுவன் பாலா. அவனது இறந்துபோன தங்கை மல்லியைப் போல் ஷிவானி இருப்பதால், அவளுடன் அன்பாக பழகுகிறான். தன்னுடைய வீட்டுக்கும் அழைத்துச் செல்கிறான். மல்லியைப் போல் இருக்கும் ஷிவானி மீது பாலா குடும்பத்தினர் பாசத்தைப் பொழிகிறார்கள். எப்போதும் பாலா மீது பாசத்தைப் பொழியும் அவனது குடும்பத்தையும், தன்னை கண்டுகொள்ளாத அப்பா, அம்மாவையும் நினைத்துப் பார்க்கிறாள் ஷிவானி. அந்த ஏக்கத்தில் தன்னை மல்லியாக நினைத்துக்கொண்டு, தனக்குள் பேசத் தொடங்குகிறாள்.

விறுவிறு திருப்பங்கள்
பிரசாத்தின் கோபத்தைத் தாங்கமுடியாத வினோதினி, மனைவியை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் சிவகுரு, பாசம் கிடைக்காமல் மல்லியாக மாறும் ஷிவானி என 'மல்லி' மெகா தொடர் பல்வேறு திருப்பங்களுடன் விறுவிறுவென நகர இருக்கிறது.

ஏ ஆர் ரமேஷ்
இந்தத் தொடரில் சோனியா அகர்வால், சேது டார்வின், தேனி முருகன், முரளி, சுசித்ரா ஆனந்தன், கிருஷ்ணகுமாரி, பேபி ஹரிணி மற்றும் பலர் நடிக்கிறார்கள். கவிஞர் யுகபாரதி பாடல் எழுத, ரமேஷ் விநாயகம் பாடலுக்கு இசையமைக்க, அரவிந்த் சித்தார்த் பின்னணி இசை அமைக்கிறார். திரைக்கதை வசனத்தை தாமிரா எழுத, ஏ.ரமேஷ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். கிராங்க் மீடியா ஒர்க்ஸ் சார்பில் ரமேஷ் கிருஷ்ணன் தயாரிக்க, ஏ.ஆர்.ரமேஷ் இயக்குகிறார். திங்கள் முதல் வெள்ளி வரையிலும் ‘மல்லி' தொடரை புதுயுகம் தொலைக்காட்சியில் மாலை 6.30 மணிக்கு இந்த தொடர் ஒளிபரப்பாகிறது.


Click it and Unblock the Notifications











