போலீஸை எதிர்த்து நின்ற சக்தி.. மயக்கத்திலேயே இருக்கும் தர்ஷினி.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய எபிசோடில் பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறது. சக்தி மற்றும் ஜனனிக்கு குணசேகரன் வீட்டில் யாரும் ஆதரவு தராமல் இரக்க, விசாலாட்சி மட்டுமே துணையாக இருக்கிறார். ராணா சொல்வதை குடும்பத்தினர் அனைவரும் நம்பி, தர்ஷினியை கடத்தியது ஜனனிதான் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். ஆனால் விசாலாட்சி மட்டும், ஜனனி இப்படிப்பட்ட செயலை ஒருபோதும் செய்திருக்க மாட்டாள் என்று உறுதியாக நம்புகிறார்.
இதற்கிடையில், ஜனனியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்கிறார்கள். ஸ்கேன் முடிவில், கருவில் இருக்கும் குழந்தை நலமாக இருப்பதாக மருத்துவர் சொல்கிறால்ர. அதே நேரத்தில், குழந்தையின் மனநல வளர்ச்சிக்காக வீட்டில் அமைதியான மற்றும் ஆரோக்கியமான குடும்பச் சூழல் அவசியம் என்றும் அறிவுறுத்துகிறார். இதைக்கேட்ட விசாலாட்சி, குழந்தை ஆரோக்கியமா இருந்த போது, என் மருமகளை நான் பார்த்துக் கொள்கிறேன். அவளுக்கு எந்த பிரச்சனையும் வர விடமாட்டேன் என்கிறார்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: மறுபுறம், குணசேகரன் வீட்டில் தர்ஷினி இன்னும் மயக்க நிலையிலேயே இருந்து யாரிடமும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். இதைப்பார்த்து ஆத்திரமடையும் கதிர், இந்த நிலைக்கு காரணம் ஜனனி தான். இன்னும் அவளை ஏன் இந்த வீட்டில் வைத்திருக்கிறீர்கள்? என்று ஆத்திரத்தில் கத்துகிறார். அப்போது ராணா, இன்னைக்கு ஜனனியை கைது செய்ய போலீசார் வீட்டுக்கு வருவார்கள் என்று சொல்கிறார். ராணா கூறியது போலவே, சிறிது நேரத்தில் போலீசார் வீட்டுக்கு வந்து ஜனனியை விசாரிக்கத் தொடங்குகிறார்கள். அப்போது ஜனனி வீட்டில் இல்லாததால், போலீஸ் வருவது தெரிந்து எங்காவது தப்பித்து ஓடியிருப்பாள் என்று கதிர் கூறுகிறார்.
வீட்டிற்கு வந்த போலீஸ்: அதே நேரத்தில், மருத்துவமனையில் இருந்த சக்திக்கு போலீசார் வீட்டுக்கு வந்திருப்பதாக தகவல் கிடைக்கிறது. உடனே சக்தி, ஜனனி மற்றும் விசாலாட்சி மூவரும் வீட்டுக்கு வருகிறார்கள். ஜனனியை பார்த்த இன்ஸ்பெக்டர், யாரை கேட்டு வெளியில் போனீங்க என கேட்கிறார். அதற்கு சக்தி, நாங்கள் ஊரை விட்டு ஓடிப்போகவில்லை. மருத்துவமனைக்குத் தான் சென்றிருந்தோம் அதற்கு கூட உங்களிடம் பர்மிஷன் வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறார்.
ஜனனியிடம் விசாரணை: உடனே இன்ஸ்பெக்டர் எதற்காக மருத்துவமனைக்கு போனீங்க என்று கேட்க, விசாலாட்சி கோபத்துடன், அதை உன்னிடம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்கிறார். அப்போது ஜனனி, நான் கர்ப்பமாக இருக்கிறேன். அதற்காக செக்கப்பிற்கு மருத்துவமனைக்கு சென்றிருந்தோம் என்கிறார்.இதைக் கேட்ட இன்ஸ்பெக்டர், கர்ப்பமாக இருக்கும் இந்த நேரத்திலா தர்ஷினியை கடத்தி வைத்து இப்படிப்பட்ட மோசமான வேலையை செய்தீங்க என்று ஜனனியை அவமானப்படுத்தும் விதமாக கேள்வி கேட்கிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications