ஒரு மாசமா அரைச்ச மாவையே அரைக்கிறீங்களேப்பா.. தர்ஷினி கடத்தலில் புது மர்மம்.. எதிர்நீச்சல் தொடர்கிறது
சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தர்ஷினி காணாமல் போன சம்பவத்தை மையமாக வைத்தே கதை நகர்ந்து வருகிறது. ஆனால், இதுவரை முன்னேற்றம் எதுவும் இல்லாததால், ஒரே விஷயத்தை திரும்பத் திரும்ப அரைத்த மாவையே அரைத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்ற அதிருப்தி ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இன்றைய எபிசோடில் வீட்டிற்கு வந்த குணசேகரன், கதிர் மற்றும் ஞானத்திடம் புதிய தொழில் தொடங்கும் திட்டம் குறித்து பேசுகிறார். அதற்கு கதிர், தர்ஷினி காணாமல் போயிருக்கும் நேரத்தில் இது தேவையா? என்று கேட்கிறார். ஆனால் குணசேகரன், தர்ஷினி காணாமல் போனதற்காக வாழ்க்கை முழுவதும் நின்றுவிட முடியாது என்றும், தொழில் தொடர்பான வேலைகளை தொடர்ந்து பார்க்குமாறும் கூறுகிறார். இந்த பேச்சைக் கேட்ட கதிர் மற்றும் ஞானம் இருவரும், குணசேகரனின் இந்த திடீர் மனமாற்றத்திற்கு பின்னால் ராணாவின் திட்டம் ஏதாவது இருக்கும் என்று சந்தேகப்படுகின்றனர்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: இதற்கிடையில் ராணா, விக்கி என்ற புதிய ரவுடிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தர்ஷினி மட்டும் உயிருடன் திரும்ப வேண்டும். ஆனால் ஜனனி மற்றும் சக்தி உயிருடன் வரக்கூடாது என்று கூறுகிறார். அதற்கு மாஸ்க் அணிந்திருந்த விக்கி, தனக்கும் ஜனனிக்கும் ஏற்கனவே பகை இருப்பதாகவும், அவளுடைய விஷயத்தை தான் பார்த்துக்கொள்வதாகவும் தெரிவிக்கிறார். மறுபுறம், திருமலை கிராமத்திற்கு செல்ல சக்தி லிப்ட் கேட்டு காத்திருக்கிறார். அப்போது அவர் அறியாமலேயே அந்த புதிய வில்லன் விக்கியின் காரிலேயே ஏறிச் செல்கிறார். இதன் மூலம் அடுத்த கட்டத்தில் சக்திக்கு ஆபத்து இருப்பது நன்றாக தெரிகிறது.
ஜனனி தான் காரணம்: பின்னர் மீண்டும் குணசேகரன் வீட்டிற்கு வரும் ராணா, இந்த பிரச்சனைக்கு காரணம் ஜனனிதான் என்று கூறுகிறார். தர்ஷினியை நேரடியாக அழைத்தால் வரமாட்டாள் என்பதால், சுவாமிநாதன் என்ற நபரின் பெயரை பயன்படுத்தி அழைத்து வரவைத்து கடத்தியது ஜனனி தான் என்கிறார். ஜனனியின் இந்த வேலையால் எந்தவிதமான பாவமும் செய்யாத சுவாமிநாதன் தற்போது உயிருடன் இல்லை என்ற அதிர்ச்சி தகவலையும் கூறுகிறார். இந்த தகவலைக் கேட்டு குணசேகரன் குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போகின்றனர். தர்ஷினி கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் இன்னும் பல மர்மங்கள் இருப்பது தெளிவாகியுள்ள நிலையில், அடுத்த எபிசோடுகளில் என்னென்ன உண்மைகள் வெளிவரப்போகின்றன என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications