தாயானார் சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லா.. என்ன குழந்தை தெரியுமா?
சென்னை: சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சுந்தரி' சீரியல் மூலம் இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை கேப்ரியல்லா. இவர், சீரியல் முடிந்த கையோடு, கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான தகவலை கூறியிருந்தார். தற்போது, கேப்ரியல்லா தனக்கு குழந்தை பிறந்து இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை போட்டோவுடன் ஷேர் செய்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
விஜய் டிவியில் 2016ம் ஆண்டு ஒளிப்பரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் தனி ஆளாக கலந்து கொண்டார் நடிகை கேப்ரியல்லா செல்லஸ். அதில், கலந்து கொண்டவர்கள் அனைவரும் குழுவாக இருந்த போதும், தனது திறமையின் மீது நம்பிக்கை வைத்து, ஸ்டாண்ட் ஆப் காமெடி செய்து அசத்தினார். ஆரம்பத்தில் சொதப்பினாலும், அந்த நிகழ்ச்சியில் கடைசி வரை தாக்கு பிடித்து வந்த கேப்ரியல்லா, தொகுப்பாளினி திவ்யதர்ஷினி (டிடி) போல நடித்து காட்டியது, மட்டுமில்லாமல் அவர் போலவே பேசி காட்டி, அரங்கையே அதிரவைத்தார். அந்த, நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர், தன்னுடைய திறமையால், டிக் டாக்கில் அழகான கருத்துள்ள கவிதையை வீடியோவாக பதிவிட்டு பெயர் எடுத்தார். சின்னத்திரை, சோசியல் மீடியாவில் மட்டும் தலைகாட்டி வந்த கேப்ரியல்லா, நயன்தாரா நடித்த ஐரா படத்தில் நடித்திருந்தார். அதன் பின் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்த கபாலி படத்திலும், காஞ்சனா 3 படத்திலும் சின்ன ரோலில் நடித்துள்ளார்.

சுந்தரி சீரியல்: இதையடுத்து, சன் தொலைக்காட்சியில் சுந்தரி சீரியலில் லீட் ரோலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிராமத்தில் பிறந்து வளரும் சுந்தரி, குடும்பத்தின் அழுத்தம் காரணாக, ஐஏஎஸ் அதிகாரியாக மாற வேண்டும் என்ற கனவை மறந்து திருமணம் செய்து கொள்கிறாள். ஆனால், கருப்பாக இருப்பதால், சுந்தரியை கைவிட்டு விட்டு, வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு சுந்தரியின் வாழ்க்கையை வீணாக்குகிறான் அவளது கணவன். ஒருகட்டத்தில், கணவனின் இரண்டாவது மனைவியின் குழந்தையை வளர்க்கும் பொறுப்பு சுந்தரிக்கு வர அந்த குழந்தையை வளர்க்கிறாள். இந்த கதாபாத்திரத்திற்கு கேப்ரியல்லா மிகவும் பொறுத்தமானவராக இருந்ததால், இந்த சீரியல் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அந்த சீரியல் 2023ம் ஆண்டு முடிவடைந்தது.
இரண்டாம் பாகம்: முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து சுந்தரி சீரியல் இரண்டாவது பாகம் ஒளிபரப்பானது. இதில், சுந்தரி தனது கனவை கடுமையாக போராடி அடைகிறாள். பின் கார்த்திக் தன் தவறுகளை உணர்ந்து, சுந்தரியிடம் மன்னிப்பு கேட்டு, இரண்டாவது மனைவியுடன் மீண்டும் சேர்கிறார். சுந்தரியும் வெற்றியும் திருமணம் செய்துகொண்டதாக சுந்தரி சீரியல் இரண்டாம் பாகம் கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து, கேப்ரியல்லா தனது இன்ஸ்டாகிராமில் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை அறிவித்து இருந்தார். இதைத் தொடர்ந்து, கேப்ரியல்லாவிற்கு ஏழாம் மாத வளைகாப்பு தடபுடலாக நடந்துள்ளது.
இந்நிலையில், தற்போது கேப்ரியல்லாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் கையை பிடித்தபடி இருக்கும் போட்டோவை பகிர்ந்து, மகளே.. உனது அழுகை எனது வலிக்கும் நிம்மதிக்கும் மருந்தாக்கியவளே... இவ்வுலகம் உனக்கானது மகளே.. என்னுடைய அடி மனது நன்றி என பதிவிட்டுள்ளார். பலரும் நடிகை கேப்ரியல்லாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











