AR Rahman: அல்லா வைத்த பொக்கிஷம்தான் ஏ.ஆர். ரகுமான்.. இசைப்புயல் குறித்து உருகி உருகி பேசும் டிடி!
சென்னை: இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானை யாருக்குத்தான் பிடிக்காது! தனது இசையால் அனைவரையும் கவர்ந்திழுக்கும் வல்லமை கொண்ட ஆஸ்கார் நாயகன். என்றைக்கும் குழந்தை முகம், எப்போதும் அரசியல் தெளிவு, பொய்யான புகழாரங்களை விரும்பாத கலைஞன் என ஏ.ஆர். ரகுமானை பலருக்கும் பல விதங்களில் பிடிக்கும். ஆனாலும், அவரது இசைக்குத்தான் அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர். இந்தியா மட்டும் இல்லாமல், வெளிநாடுகளிலும் அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இப்படியான ஏ.ஆர். ரகுமான் குறித்து, சின்னத்திரை பிரபலமான டிடி எனப்படும் திவ்யதர்ஷினி உருகி உருகி பேசியது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
இசைஞானி இளையராஜாவிடம் உதவியாளராக இருந்து, மணி ரத்னத்தால் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தப்பட்டவர் ஏ.ஆர். ரகுமான். மோதிரக் கைகளால் குட்டு வாங்கியவரின் வளர்ச்சி குறித்து சொல்லவா வேண்டும். முதல் படத்திலேயே தேசிய விருது, இவரது இசையைப் பார்த்து வாரிக்கொண்டது பாலிவுட். பாலிவுட் உலகினை தனது இசையால் கட்டிப்போட்டு, ஆட்சி செய்து வந்தார். எங்கு சென்றாலும் எந்த மேடைக்குச் சென்றாலும் தான் பேசும் முதல் வார்த்தை, " எல்லா புகழும் இறைவனுக்கே" என்பதுதான். தனது தாய் மொழி தமிழை ஆஸ்கார் வென்றபோது, அந்த ஆஸ்கார் மேடையிலும் தமிழை அலங்கரித்தவர் ஏ.ஆர்.

இவரது இசை இன்றைய தலைமுறையினருக்கும் பிடித்த வகையில், அதேநேரத்தில் இணையம் வளர வளர ரசிகர்கள் வெளிநாட்டு இசைகளையும் ரசிக்கின்றார்கள் என்பதை உணர்ந்து, வெளிநாட்டு இசைகளைப்போலவே, நமது ரசிகர்களுக்கு இசையைக் கொடுக்க மெனக்கெடுபவர் ஏ.ஆர். இவருடன் ஒரு படத்தில் பணியாற்றிவிடக் கூடாதா? என ஏங்கும் நடிகர்கள் இன்றைக்கும் உள்ளார்கள்.
அரசியல்: இந்தி சினிமாதான் இந்திய சினிமா என்ற மிதப்பு பாலிவுட் உலகத்தினரிடம் உள்ளது என வெளிப்படையாக பேசி இந்தி சினிமாவை விளாசியவர். அரசியல் பேச வேண்டிய இடத்தில் அரசியல் பேசி தனது ரசிகர்களை அலர்ட் செய்யக்கூடியவராகவும் ஏ.ஆர். கடந்த காலங்களில் இருந்துள்ளார். இசையில் இவர் ஜாம்பவான் என்றால், இவரது குரல் பலருக்கும் இன்றைக்கு மருந்தாக உள்ளது.
அல்லா: சில நேரங்களில் இவர் பாடும்போது, ரசிகர்கள் உடைந்து அழுகின்றார்கள், சில நேரங்களில் சோகத்தில் இருந்து வெளியேறி துள்ளிக் குதிக்கின்றார்கள். அந்த அளவுக்கு, தனது குரலின் மூலம் ரசிகர்களை ஆட்டுவிக்கின்றார். இவர் குறித்து சின்னத்திரை நடிகை திவ்யதர்ஷினி பேசியுள்ள வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. அதாவது, ” யாரோ ஒருவரிடம் பேசும்போது 'அல்லா ரெக்ஹா ரகுமான்’ எனச் சொன்னார்கள். ரெக்ஹா என்றால் இந்தியில், வெச்சது எனச் சொல்லுவார்கள். அப்படி, தமிழ் மக்களுக்கு என்ன தேவை எனத் தெரிந்து அல்லா வைத்த பொக்கிஷம் தான் ரகுமான் சார். அவர் நம்மை அந்த அளவுக்கு ஒன்றில் இருந்து சரிசெய்கின்றார்.
கடவுள்: அதற்கு நாம் அவருக்கு திருப்பி எதுவுமே கொடுப்பதில்லை. அதனை பணம் கொடுத்தும் சரிகட்ட முடியாது. நாம் அவரை நேரில் பார்க்கமுடியவில்லை என்றாலும், அவரது இசையில் ஒரு ஹீலிங் பவர் உள்ளது. மனசு உடஞ்சு கஷ்டமான நேரத்தில், தனிமையாக இருப்பதாக உணரும்போது, அவரது இசையைக் கேட்கும்போது, நமது அருகில் அம்மாவோ அப்பாவோ அருகில் அமர்ந்து பேசுவதைப்போல் இருக்கும் எனக்கு ரகுமான் சார் கடவுளைப் போன்றவர். அவருக்கு எப்போதும் சந்தோசம் கிடைக்க நான் எப்போதும் வேண்டுவேன்” என பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.


Click it and Unblock the Notifications











