Bigg Boss 9: டைட்டிலே வேண்டாம்.. நிம்மதியா வாழ விடுங்க போதும்.. பதறிய பிக்பாஸ் பிரபலம்.. என்ன ஆச்சு?
ஹைதராபாத்: பிக் பாஸ் தெலுங்கு 9 நிகழ்ச்சியில் இரண்டாம் இடம் பிடித்த கன்னட நடிகை தனுஜா புட்டசாமி, ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார். ஆரம்பம் முதலே சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தனுஜா வெற்றியடைவார் எனப் பலரும் நம்பினர். எனினும், கல்யாண் படாலா திடீரென முன்னுக்கு வந்ததால், இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
இறுதிவரை நீடித்த இப்போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இறுதியாக, பிக் பாஸ் தெலுங்கு 9 இன் வெற்றியாளராக கல்யாண் படாலா தேர்வானார். பிக் பாஸ் அளித்த எந்தவொரு சிறப்பு சலுகையிலும் சமரசம் செய்துகொள்ளாமல், தனுஜா இறுதிவரை தனது போராட்டத்தைத் தொடர்ந்தார். அவர் வெற்றி பெறுவார் எனப் பலரும் எதிர்பார்த்தனர்.
எந்தக் குழுவிலும் இணையாமல், யாரையும் தொந்தரவு செய்யாமல் நேர்மையாக விளையாடிய தனுஜாவுக்கு தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் அதிக ஆதரவு கிடைத்தது. ஒரு "பக்கத்து வீட்டுப் பெண்ணைப்" போன்ற அவருக்கு ஆதரவாகப் பல ரசிகர் குழுக்களும் சமூக வலைத்தளப் பக்கங்களும் வலுவான குரலெழுப்பின. நாமினேஷன் பட்டியலில் தனுஜா இடம்பெறும்போதெல்லாம் அவர் முதல் இடத்தைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், தனுஜாவுக்கு ஆதரவளித்த சில ரசிகர்கள் மற்ற போட்டியாளர்களை சமூக வலைத்தளங்களில் கேலி செய்ததும், அநாகரீகமான பதிவுகளைப் பகிர்ந்ததும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்களான ஸ்ரீசத்யா, யஷ்மி கௌடா ஆகியோர் நேரலையாக வந்து, தனுஜா தனது மக்கள் தொடர்பு (PR) குழுவுக்குப் பணம் கொடுத்து இதைச் செய்வதாகக் குற்றஞ்சாட்டினர்.

ட்ரோல்கள்: பிக் பாஸ் தெலுங்கு 9 சீசன் முடிந்து பல நாட்கள் ஆகியும், இந்த சர்ச்சை இன்னும் தொடர்கிறது. சமீபத்தில், தனக்கு எதிராக நடந்து வரும் ட்ரோலிங் குறித்து நடிகை தனுஜா புட்டசாமி ஓர் உணர்வுபூர்வமான பதிவில் குறிப்பிட்டதாவது: "முதலில் என்னைத் தூற்றுவதையும், பழிசொல்வதையும் நிறுத்துங்கள். உங்களைப் போலவே எனக்கும் வாழ்க்கை உண்டு.
எனக்கு பொறுப்புகள் இருக்கு: நான் என் வேலையைச் செய்கிறேன், எனக்குள்ள பொறுப்புகளைப் பூர்த்தி செய்கிறேன். எனக்குப் பிரத்தியேக மக்கள் தொடர்பு (PR) குழு என்று எதுவும் இல்லை; என்னுடைய சமூக ஊடக கணக்குகளை ஒருவர் நிர்வகித்து வருகிறார். இப்போதும் என் மீது தீவிரமான வெறுப்பு வெளிப்படுகிறது. தினமும் அநாகரீகமான வார்த்தைகளால் திட்டி கருத்துகள் பதிவிடுகிறார்கள். நான் யாரையாவது குறிவைத்து, அவர்களுக்கு எதிராகத் தவறான பிரச்சாரங்களைச் செய்வதாகத் தவறாகப் புரிந்துகொண்டுள்ளீர்கள். மற்றவர்கள் மீது உங்களுக்கு விருப்பம் இருக்கலாம், ஆனால் என் நிலையையும் நீங்கள் புரிந்துகொள்ளுங்கள். நான் தினமும் நரக வேதனையைச் சந்திக்கிறேன். மோசமான வார்த்தைகளால் திட்டி, என்னையும் எனது குணநலன்களையும் தவறாகச் சித்தரிக்கிறார்கள்.
தாங்கிக் கொள்ள முடியவில்லை: இந்த வார்த்தைப் பிரயோகம் உங்களுக்கு எளிதாகத் தோன்றலாம், ஆனால் ஒரு பெண்ணாக என்னால் அதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. என் குடும்பத்தைப் பற்றியும் இழிவாகப் பேசுகிறார்கள், அவர்கள் பெரிதும் வேதனைப்படுகிறார்கள். இந்த வலியை யாரிடம் சொல்வதென்று தெரியாது, மௌனமாகத் தாங்கிக் கொண்டிருக்கிறேன். நான் மட்டுமல்ல; எனக்குத் துணை நின்றவர்களையும் சித்திரவதை செய்கிறார்கள். ''இப்படி மனரீதியாக வெறுத்தால் நிம்மதியாக இருக்க முடியுமா? நான் எந்த நாடகத்தையும் உருவாக்க விரும்பவில்லை. நான் வாழ விடுங்கள்," என்று தனுஜா புட்டசாமி உணர்ச்சி பொங்கக் கூறினார். அவரது இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தனுஜாவின் ரசிகர்களும், இணையவாசிகளும் அவருக்கு ஆதரவாகப் பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications