கை தட்டுங்க… சிரிங்க…. காசு வாங்கிட்டுப் போங்க…. ரியாலிட்டி ஷோக்களின் பார்வையாளர்கள்
சென்னை: டிவி ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்பாளர்களை விட பார்வையாளர்கள் அதிக மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். காரணம் காசு... பணம்.... துட்டு... மணிதான்.
டிவி சீரியல்களில் நடிப்பதற்கு சம்பளம் கொடுப்பதைப் போல இப்போது ரியாலிட்டி ஷோக்களில் பார்வையாளர்களாக இருப்பவர்களுக்கும் பணம் கொடுக்கப்படுகின்றதாம்.
இப்படி பார்வையாளர்களை அழைத்து வர தனி ஏஜென்ட் வேறு இருக்கிறாராம்.

டிவி ரியாலிட்டி ஷோ
தனியார் தொலைக்காட்சி சேனல்கள் பெருகிவிட்டன. போட்டியும் அதிகரித்துவிட்டது. அதை விட இது பெஸ்ட்.... இதை விட அது பெஸ்ட் என்று பெயரெடுக்கும் அளவிற்கு டிவிகளில் ரியாலிட்டி ஷோக்களில் பெருகிவிட்டன.

நடனம், பாட்டு
நடன நிகழ்ச்சிகளும், இசை நிகழ்ச்சிகளும் எல்லா டிவி சேனல்களிலும் ஒளிபரப்பாகிறது. படப்பதிவின் போது பார்வையாளர்கள் ஒருபுறம் அமர்ந்து கை தட்டிக்கொண்டும், சிரித்துக் கொண்டும் இருப்பார்கள்.

கை மேல காசு
இந்த பார்வையாளர்கள் காசு கொடுத்து அழைத்து வரப்படுகின்றனராம். வேறு பணிகளில் இருந்தாலும் ஒரு நிகழ்ச்சிக்கு 8 மணிநேரம், 12 மணிநேரம் என்பதைப் பொறுத்து பணம் கொடுப்பதா அன்றைய தினம் டிவி நிகழ்ச்சிகளில் போய் அமர்ந்து கொள்கின்றனர் சிலர்.

தனி சம்பாத்தியம்
ஒரு பார்வையாளருக்கு ரூ.1500 வரை சம்பளமாக கொடுக்கப்படுகிறதாம். அதோடு உணவும், பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பும் கிடைப்பதால் சந்தோசமாக பார்வையாளர்களாக வருகின்றனர்.

மாடல்கள், ஜூனியர் நடிகர்கள்
அதேபோல டிவி விளம்பர மாடல்கள், ஜூனியர் நடிகர்களும் இதற்காகவே தேடி பிடிக்கப்படுகின்றனராம்.

மாதம் ரூ.8000 வரை
சலீம் ரசாக் என்பவர், இதுபோன்று நிகழ்ச்சியில் பார்வையாளராக கலந்து கொண்டு கை தட்டுவதன் மூலம் மட்டுமே ரூ 8000 வரை சம்பாதிக்கிறாராம். ஏசி ரூமில் உட்கார்ந்து கை தட்டி, சிரித்து விட்டு வருவதற்கு இது நல்ல சம்பளம் என்கிறார் அவர். பெரும்பாலும் மாலை நேரங்களில் சூட்டிங் வைப்பதால் வேலைக்கும் இடைஞ்சல் கிடையாது என்கிறார் அவர்.

தமிழ் சேனல்களில்
காசுக்கு கைதட்ட வரும் பார்வையாளர்கள் எல்லாம் வட இந்திய சேனல்களில்தான். தமிழ் சேனல்களில் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்பவர்களின் உறவினர்கள்தான் அதிகம் கலந்து கொண்டு கை தட்டுகின்றனர்.

இலவச அனுமதி
பட்டிமன்றம், இசை நிகழ்ச்சிகளில் இலவச அனுமதி டிக்கெட்டுக்கள் தமிழ் டிவி சேனல்களில் கொடுக்கப்படுகின்றது. அதன் மூலம் டிவி நிகழ்ச்சியின் படப்பிடிப்பை நேரடியாக பார்ப்பதோடு திரையிலும் வரலாமே என்ற சந்தோசத்தில் இங்கு பலரும் பங்கேற்கின்றனர்.

தண்ணி கூட கிடைக்காது
தமிழ் சேனல்களில் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்பாளர்களுக்கு கூட எந்த வித பணமும் கொடுப்பதில்லை. குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் போது ஏதேனும் அசம்பாவிதம் நேரிட்டால் அதற்கு தொலைக்காட்சி நிர்வாகம் பொறுப்பேற்காது என்று எழுதி கையெழுத்து போட்டு வாங்கிக்கொள்வதுதான் கொடுமை. பிரபல டிவி சேனலில் டாக் ஷோவில் பங்கேற்கப் போகும் சிறப்பு அழைப்பாளர்களுக்கு அந்த அனுபவம் அதிகம் உண்டு.

விடிய விடிய
காலையில் 10 மணிக்கு சூட்டிங் என்று கூறி அழைத்துவிட்டு.... மாலை வரை காத்திருக்க வைக்கப்பட்ட சம்பவங்களும் உண்டு. அதிலிருந்து டிவி சேனலில் இருந்து அழைப்பு வந்தாலே தவிர்த்து விடுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

கோடி கோடியாய் வருமானம்
ஒரு எபிசோடுக்கு கோடி கோடியாய் விளம்பர வருமானம் பார்க்கும் தமிழ் டிவி சேனல்களில் பைசாவை செலவழிக்க மாட்டார்கள். அழைத்து விட்டு அலைக்கழிப்பதும் இங்குதான் அதிகம் நடக்கிறது.

அட போங்கப்பா…
சின்னத்திரை நட்சத்திரங்களை வைத்து நிகழ்ச்சி நடத்திய சேனல்களில் பங்கேற்பாளர்களுக்கே பைசா கொடுக்காமல் போன சம்பவமும் இங்குதான் நடந்துள்ளது. இதில் பார்வையாளர்களுக்கு காசு எங்கே கொடுக்கப் போகிறார்கள் என்று ஆதங்கப்படுகிறார் சின்னத்திரை நட்சத்திரம் ஒருவர்.


Click it and Unblock the Notifications











