அர்ச்சனாவின் அழுகை முடிவுக்கு வரப்போகுதாமே?
1300 எபிசோடுகளுக்கு மேல் சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் திருமதி செல்வம் தொடர் முடிவுக்கு வரப்போவதாக விகடன் டெலிவிஸ்டாஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. தொடர் தொடங்கியதில் இருந்து கடைசி வரைக்கும் அழுது அழுதே இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்த அர்ச்சனாவின் அழுகைக்கு முடிவு கிடைக்கப்போகிறது என்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.
சீரியல் என்றாலே பணக்கார தோரணையோடு இருக்கவேண்டும் என்ற எண்ணத்தை மாற்றி சாதாரணமான மக்களுக்கு ஏற்ற வகையில் தொடங்கப்பட்ட தொடர் மெட்டி ஒலி, திருமதி செல்வம். இதில் மெட்டி ஒலி தொடர் முடிவுக்கு வந்த பின்னர் சன் டிவியில் கடந்த 2007ம் ஆண்டு இறுதியில் மதிய நேரத்தில் ஒளிபரப்பானது திருமதி செல்வம்.
சீரியல்களில் வில்லனாகவே அறியப்பட்ட சஞ்சீவ் இதில் ஹீரோவானார். சேது படத்திற்குப் பின்னர் சினிமாவில் சரியான வாய்ப்பு கிடைக்காமல் இருந்த அபிதா இதில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். வழக்கமான குடும்பத்தொடர்தான் என்றாலும் திருமதி செல்வத்தின் கதை அமைப்பு எல்லாருக்கும் பிடித்துப் போகவே பிரைம் டைமான இரவு 8 மணிக்கு மாறியது. இதுவரை 1340 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகிவரும் திருமதி செல்வம் முடிவுக்கு வரப்போவதாக இயக்குநர் குமரன் தெரிவித்துள்ளார்.

அழுகை அர்ச்சனா
கார் மெக்கானிக் செல்வத்தின் மனைவி அர்ச்சனா படிப்பறிவு இல்லாத அப்பாவி. வடிவுக்கரசிதான் அர்ச்சனாவின் அம்மா. அர்ச்சனாவிற்கு இரண்டு தங்கைகள் ஒரு அண்ணன் என குடும்பப் பாங்கான தொடராக தொடங்கியது. ஆனால் தொடர் ஆரம்பம் முதலே அர்ச்சனாவிற்கு ஒரே அழுகைதான்.

ஜெயித்த வாழ்க்கை
இவர்களை வாழவே விடக்கூடாது என்று வில்லத்தனம் செய்யும் அண்ணி. புகுந்த வீட்டில் மாமியார் பாக்கியத்தின் வில்லத்தனம். ஏழ்மையாக தொடங்கிய வாழ்க்கை சவால் விட்டபடி ஒரே பாட்டில் வசதியான வாழ்க்கைக்கு உயர்கின்றனர் அர்ச்சனா செல்வம் தம்பதியினர்.

வில்லியான தோழி
செல்வம் வசதியான வாழ்க்கைக்கு உயரும் வரை தோழியாக இருந்த நந்தினி ஒரு கட்டத்தில் செல்வத்தை சொந்தமாக்கிக் கொள்ள நினைக்கவே அர்ச்சனாவின் வாழ்க்கையில் மற்றொரு புயல். இதில் அண்ணிக்கு துரோகம் செய்யும் கொழுந்தன் வேறு. இந்த சதியில் நிறைமாத கர்ப்பிணியான அர்ச்சனா வீட்டை விட்டு வெளியேறுகிறாள்.

சகிக்க முடியாத வில்லத்தனம்.
தெருவோரத்தில் குழந்தை பெற்று எப்படியோ அம்மா, அப்பாவிடம் சேரும் அர்ச்சனாவிற்கு அங்கும் சோதனைதான். மாப்பிள்ளை செல்வம் அடித்த துயரத்தில் அர்ச்சனாவின் அப்பா மாரடைப்பில் இறந்து போக, அம்மா வடிவுக்கரசி வெடிகுண்டு விபத்தில் உயிரிழக்கிறார். இதில் குழந்தை காணாமல் போக அர்சனாவிற்கு மனநிலை தடுமாறுகிறது.

கடைசி வரை அழுகைதான்
எப்படியோ குழந்தை மீண்டும் கிடைக்க மறுபடியும் பழைய நிலைக்கு திரும்புகிறாள் அர்ச்சனா. ஆனாலும் நந்தினியின் வில்லத்தனத்தினால் அவளிடம் இருந்து குழந்தையை பிரிக்க நினைக்கிறான் செல்வம். அழுது ஆர்பாட்டம் செய்து போலீசின் பின்னால் ஓடுகிறாள் அர்ச்சனா. முதல் எபிசோடில் இருந்து 1340 எபிசோடு வரை அர்ச்சனா சிரித்தது சரியாக 100 எபிசோடு மட்டுமே.

போர் அடிக்குதுப்பா
இது மாதிரி ஒரு தம்பதி இருப்பாங்களா என்று ஏங்கவைத்த தொடர் இது. கடைசியில் செல்வம் மாறிப்போகவே போர் அடிக்குதுப்பா சீக்கிரம் சீரியலை முடிங்க என்று கூறத் தொடங்கிவிட்டனர் ரசிகர்கள். இதனால் தொடருக்கு சுபம் போட முடிவு செய்து விட்டனராம்.

5 ஆண்டுகளுக்கும் மேலாக
2007ம் ஆண்டு நவம்பரில் தொடங்கி 2013 பிப்ரவரி வரை 5 ஆண்டுகளுக்கும் மேலாக பிரைம் டைமில் ஒளிபரப்பாகிவருகிறது திருமதி செல்வம். நந்தினி, பாக்கியத்தின் வஞ்சகத்தை உணர்ந்து கடைசியில் மனைவியிடமே சரண் அடைகிறான் செல்வம். இல்லத்தரசிகள் எதிர்பார்த்தது போல சுபம்தான்.

அடுத்தது தெய்வத் திருமகள்
இந்த தொடரின் இயக்குநர் குமரன் சன் டிவியில் தென்றல் தொடரையும் இயக்கி வருகிறார். திருமதி செல்வம் முடிந்த பின்னர் அவரே தெய்வத் திருமகள் என்ற புதிய தொடரை இயக்குகிறாராம். இதுவும் திருமதி செல்வம் ஒளிபரப்பான நேரத்திலேயே ஒளிபரப்பாகிறது.


Click it and Unblock the Notifications











