2009 -2013 விருதுகள் பெற்ற சீரியல்கள் ஒருபார்வை.. எந்தெந்த சீரியல்கள் டாப் தெரியுமா?
சென்னை : கடந்த 2009ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரையிலான தமிழ்நாடு திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதே காலகட்டத்தில் அதிகமாக ரசிகர்களை கவர்ந்த சின்னத்திரையின் நெடுந்தொடர்களுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த விருது வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் வரும் 4ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு திரைப்பட விருதுகள்
தமிழ்நாடு திரைப்பட விருதுகள் வழங்கும் விழா சென்னையில் வரும் 4ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரையிலான படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களுக்கு இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நெடுந்தொடர்களுக்கு விருதுகள்
சின்னத்திரையில் அதிகமான ரசிகர்களை கவர்ந்த நெடுந்தொடர்கள் பல இருந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக செயல்பட்ட தொடர்கள், நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த 2009ம் ஆண்டில் சிறந்த நெடுந்தொடராக திருமதி செல்வம் தேர்வாகியுள்ளது. இரண்டாவது இடத்தை வசந்தம் தொடர் கைப்பற்றியுள்ளது.

2009 -திருமதி செல்வம் தொடர்
கடந்த 2007ம் ஆண்டு முதல் 2013 வரையில் சன் டிவியில் தினந்தோறும் இரவு 8 மணிக்கு திருமதி செல்வம் தொடர் ஒளிபரப்பானது. சிறப்பான எபிசோட்களுடன் ரசிகர்களின் நாடித்துடிப்பை சரியாக கணித்து இந்தத் தொடர் ஒளிபரப்பானது. எஸ் குமரன் இயக்கத்தில் சஞ்சீவ், அபிதா உள்ளிட்டவர்கள் இந்த தொடரின் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

2010 -உறவுக்கு கைக்கொடுப்போம் தொடர்
அடுத்ததாக கடந்த 2010ம் ஆண்டில் உறவுக்கு கைக்கொடுப்போம் என்ற தொடர் முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை தென்றல் தொடர் கைப்பற்றியுள்ளது. ஆனால் சிறந்த நடிகர் நடிகைகளுக்கான விருதுகளை தென்றல் தொடரின் தீபக் மற்றும் ஸ்ருதி பெற்றுள்ளனர். உறவுக்கு கைக்கொடுப்போம் தொடர் அதிகமான ரசிகர்களை ஈர்த்தது.

2011 -சாந்தி நிலையம் தொடர்
தொடர்ந்து கடந்த 2011ம் ஆண்டிற்கான விருதுகளை சாந்தி நிலையம் மற்றும் நாதஸ்வரம் தொடர்கள் கைப்பற்றியுள்ளன. இதில் நாதஸ்வரம் சீரியல் ரசிகர்களின் அதிகமான வரவேற்பை பெற்றது. குறிப்பாக கோபி, மலர் கேரக்டர்கள் ரசிகர்களை கட்டிப் போட்டன. இந்த தொடர் வெளியான காலகட்டத்தில் அதிகமான டிஆர்பியை அள்ளியது.

2012 -இரு மலர்கள் தொடர்
இதையடுத்து கடந்த 2012ம் ஆண்டிற்கான சிறந்த நெடுந்தொடர்கள் விருதுகளை இரு மலர்கள் மற்றும் உதிரிப்பூக்கள் சீரியல்கள் பெற்றுள்ளன. இதில் உதிரிப்பூக்கள் தொடர் மிகவும் சிறப்பான வரவேற்பை பெற்றது. தன்னுடைய குடும்பத்தை அழித்த தட்சிணாமூர்த்தியின் மூன்று மகன்களை கடத்தும் சிவநேசன் அவர்களை பாசத்தை கொட்டி வளர்ப்பதாக செல்லும் இதன் கதை அனைவரையும் கவர்ந்தது.

2013 -வாணி ராணி தொடர்
தொடர்ந்து 2013ம் ஆண்டிற்கான முதல் இடங்களை ராதிகாவின் வாணி ராணி மற்றும் தெய்வமகள் சீரியல்கள் பிடித்துள்ளன. இதில் வாணி ராணி தொடரில் ராதிகா இரட்டை வேடங்களில் மிரட்டியிருப்பார். தெய்வமகள் தொடரில் சத்யா கேரக்டரில் வாணி போஜன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

மனதிற்கு நெருக்கமான தொடர்கள்
இந்தத் தொடர்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு சிறப்பான என்டர்டெயின்மெண்டை கொடுத்தவை. ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமாக அமைந்தவை. தற்போது இவற்றில் சில சீரியல்கள் மறுஒளிபரப்பு செய்யப்பட்டு மீண்டும் டிஆர்பியில் சிறப்பான இடங்களை பிடித்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











