டப்பிங் சீரியல்களை ஒளிபரப்புவதா?... ஹைதராபாத் மா டிவி அலுவலகம் சூறை
ஹைதராபாத்: தமிழ், இந்தி மொழி சீரியல்களை தெலுங்கில் டப்பிங் செய்து ஒளிபரப்புவதைக் கண்டித்து சின்னத்திரைக் கலைஞர்கள் ஹைதராபாத்தில் உள்ள மா டிவி அலுவலகம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பிரபல தெலுங்கு சேனலான 'மா டிவி' நேரடியாக தயாரிக்கப்பட்ட தெலுங்குத் தொடர்களை மட்டுமே ஒளிபரப்ப வேண்டும் என்பது சின்னத்திரைக் கலைஞர்களின் கோரிக்கையாகும்.

டப்பிங் செய்யப்பட்ட தொடர்களை ஒளிபரப்புவதன் மீது தங்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்பது அவர்களின் குற்றச்சாட்டு. பல தொலைக்காட்சி நடிகர்கள் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் போன்ற போராட்டங்கள் மூலம் அவர்களது எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் தமிழ், இந்தி தொடர்களை அதிக அளவில் தெலுங்கில் டப்பிங் செய்து ஒளிபரப்பும் மா டிவி அலுவலகம் மீது சில தினங்களுக்கு முன்பு சின்னத்திரை கலைஞர்கள் சிலர் தாக்குதல் நடத்தினர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களும், அலுவலகத்தி இதனால் சேதம் ஏற்பட்டது.
தங்கள் அலுவலகம் மீது தாக்குதல் நடந்ததையடுத்து மா டிவி நிர்வாகம் காவல் துறையில் புகார் அளித்துள்ளது.
இந்நிலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த மா டிவி நிர்வாகிகள் தங்கள் தொலைக்காட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தனர். இனி டப்பிங் சீரியல்களை குறைத்துக் கொண்டு நேரடி தெலுங்கு தொடர்களை அதிக அளவில் ஒளிரப்ப முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.
தமிழ்நாட்டிலும் சன் டிவி தவிர பெரும்பாலான சேனல்களில் அதிக அளவில் இந்தி டப்பிங் சீரியல்கள்தான் ஒளிபரப்பாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











