"சீன்" சரியாக வருவதற்காக அணைச் சுவரை உடைத்த டிவி ஊழியர்கள்!
புனே: சீரியல் ஒன்றின் படப்பிடிப்புக்காக புனேயில் உள்ள அணைக்கு ஷூட்டிங் வந்த டிவி குழு ஒன்று, காட்சி சரியாக அமைய வேண்டும் என்பதற்காக அணையின் சுற்றுச் சுவரை இடித்த செயல் அனைவரையும் அதிர வைத்துள்ளது.
இந்த முட்டாள்தனமான செயலைப் பார்த்து கொதித்துப் போன உள்ளூர்வாசிகள் உடனடியாக படப்பிடிப்பை தடுத்து நிறுத்தினர். போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
எப்படி இந்த டிவி குழுவுக்கு மாநில நீர்ப்பாசனத்துறை ஷூட்டிங் நடத்த அனுமதி கொடுத்தது என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

பவானா அணை
புனே அருகே மவல் தாலுகாவில் உள்ளது பவானா அணை. மும்பையைச் சேர்ந்த சன்ஷைன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் டிவி தொடர் ஒன்றின் படப்பிடிப்பை இங்கு ஜூன் 8ம் தேதி நடத்தியுள்ளது.

அணைக்குள் பஸ் விழுவதைப் போல
அணைக்குள் பஸ் ஒன்று விழும் காட்சியைப் படமாக்கியுள்ளனர். இதைக் காண உள்ளூர் மக்களும் பெரும் திரளாக கூடியிருந்தனர்.

சுவரை உடைத்தனர்
அப்போது காட்சியின் தத்ரூபத்திற்காக அணையின் கைப்பிடிச் சுற்றுச் சுவரின் ஒருபகுதியை படக்குழுவினர் இடித்தனர்.

கொந்தளித்த மக்கள்
இதைப் பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து கோபம் கொண்ட அவர்கள் படக்குழுவினரை முற்றுகையிட்டு தகராறு செய்து படப்பிடிப்பை நிறுத்தி விட்டனர்.

விரைந்து வந்த போலீஸ்
மேலும் போலீஸாருக்கும், நீர்ப்பாசனத்துறையினருக்கும் தகவல் பறந்தது. சிவசேனா கட்சியினரும் விரைந்து வந்தனர்.

தயாரிப்பாளரின் விளக்கம்
நாங்கள் முறைப்படி அனுமதி வாங்கித்தான் படப்பிடிப்பை நடத்தினோம். சுவரை நாங்கள் இடிக்கவில்லை. ஏற்கனவே இடிந்திருந்தது என்று விளக்கம் கொடுத்துள்ளர் தயாரிப்பாளர் பரேஷ் ஓஜா.

நோட்டீஸ்
இதற்கிடையே, நீர்ப்பாசனத்துறை துணை பொறியாளர் ஜெகதாப் கூறுகையில், அணைக்கு அருகில் படப்பிடிப்பு நடத்தத்தான் அனுமதி அளித்தோம். மேலும் சுவருக்கு அருகில் போகக் கூடாது என்றும் எச்சரித்திருந்தோம். ஆனால் அவர்கள் சுவரை உடைத்துள்ளனர். இதுகுறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம் என்றார்.


Click it and Unblock the Notifications











