சீரியலைக் கலக்கும் 'கர்ப்பிணி' சென்ட்டிமென்ட்: எப்போ 'டெலிவரி' ஆகும்?
தாலி சென்டிமென்ட், அம்மா சென்ட்டிமென்ட் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் கர்ப்பிணி சென்ட்மென்ட் வைப்பதில் சீரியல் இயக்குநர்களை அடித்துக்கொள்வதில் ஆளே கிடையாது. மெட்டிஒலியில் தொடங்கி இன்றைக்கு தென்றல் வரை இந்த கர்ப்பிணி சென்டிமென்ட் தொலைக்காட்சி சீரியல்களை பிடித்தாட்டுகிறது.

சீரியல் மோகத்தில் சிக்கிய பெண்கள்
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகவே சீரியல் மோகம் பெண்களை பிடித்தாட்டி வருகிறது. காலையில் தொடங்கி இரவு உறங்கப்போகும் வரை அசராமல் நெடுந்தொடர்களை பார்த்து அழுது வடிவதில் பெண்களை மிஞ்ச யாருமே முடியாது. அழுகை மட்டுமல்லாது கதாநாயகிகளை கர்ப்பிணிகளாக்கி கலக்கிவிடுவார்கள் சீரியல் இயக்குநர்கள்.

மெட்டி ஒலியில் எல்லாருமே கர்ப்பிணிகள்
திருமுருகன் இயக்கிய மெட்டி ஒலி சீரியலில் 5 பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இதில் 5ல் நான்குபேரை கர்ப்பிணிகளாக்கி அழகு பார்த்திருப்பார் இயக்குநர். அதிலும் நிறைமாத கர்ப்பிணியை மழையில் நனையவிட்டும், மாமியார் கொடுமையை அனுபவிக்க விட்டும் பெண்களை அழ வைத்திருப்பார் திருமுருகன்.

சித்தியில் தொடங்கி செல்லமே வரை
ராதிகாவின் ராடான் நிறுவனம் தயாரிக்கும் சீரியல்களில் கர்ப்பிணி கதாபாத்திரத்திற்கு பஞ்சமே இருக்காது. இப்போது தொடராக ஓடிக்கொண்டிருக்கும் செல்லமே சீரியலில் நீண்ட நாட்களுக்குப் பிறகு இரட்டை குழந்தைகளுக்குத் தாயான ராதிகா அந்த குழந்தையை பெற்றெடுக்கும் வரை இல்லத்தரசிகளுக்கு பிரசவ வேதனையை உண்டாக்கியிருப்பார். இப்போது குழந்தைகளை வைத்து கதையை நகர்த்தி வருகிறார்.

இளவரசியின் இம்சை
சன் டிவியில் மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகும் இளவரசி தொடரில் கதாநாயகி கர்ப்பிணியாக இருந்த போது ஏகப்பட்ட இம்சைகளை கொடுத்து அழவைத்தனர். இப்போது குழந்தை பெற்ற பின்னரும் அழவைத்து இல்லத்தரசிகளை கதற அடிக்கின்றனர்.

திருமதி செல்வம்
எல்லா சீரியல்களையும் விட இந்த சீரியல்தான் கொடுமையிலும் மகா கொடுமை. இதுவரை இந்த கதாநாயகியை மூன்று முறை கர்ப்பமாக்கிவிட்டார்கள். ஒருமுறை அபார்சன். மற்றொருமுறை குழந்தை இறந்துவிட்டது என்று கதையை முடித்துவிட்டார்கள். இப்பொழுது ஒருவருடமாக மீண்டும் கதாநாயகி கர்ப்பம் என்று கதையை நகர்த்தி வருகின்றனர். கதையின் நாயகி அபிதா சீரியலில் நடிக்கும் போது நிஜமாகவே கர்ப்பமாகி குழந்தை பெற்றது வேறு கதை. இதில் கதாநாயகியின் தங்கைகளை வேறு கர்ப்பமாக்கி அவர்களுக்கும் குழந்தை பிறக்கவைத்துவிட்டார் இயக்குநர்.

அத்திப்பூக்கள் அநியாயம்
நான்கு வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கும் அத்திப்பூக்கள் தொடரின் மையக்கருவே வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றெடுப்பதுதான். இதற்காக கர்ப்பிணியாக இருந்த நாத்தனாருக்கு விஷம் கொடுத்து குழந்தை உருவாக விடாமல் தடுக்கிறாள் அண்ணி. கடைசியில் கர்ப்பிணி வேஷம் போட்டு வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றெடுக்கிறாள் கதாநாயகி தேவதர்ஷினி. இப்போது மீண்டும் தான் கர்ப்பமாக இருப்பதாக பொய்யாக கூறி நடிக்கத் தொடங்கியிருக்கிறாள் கதாநாயகி. இது எப்போ முடியுமோ தெரியலையே?

தங்கத்தில் தாங்க முடியலை
தினசரி இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் தங்கம் தொடரில் கர்ப்பிணிகளை அழ வைப்பது தாங்க முடியலையே. இதில் சப் கலெக்ட்ராக இருந்த கங்கா நீண்ட நாட்களாக கர்ப்பிணியாக இருந்து எப்படியோ குழந்தை பெற்றுவிட்டார். ஆனால் அவரின் தங்கைகள் இப்போது கர்ப்பமாக இருக்கின்றனர். அதுவும் இரண்டாவது தங்கை ரமா கர்ப்பமாக இருக்கும் போது ஐ.ஏ.எஸ் பரிட்சைக்கு எழுத ஓடிய வேகமும், மாமனார் கொடுமையில் சிக்கி அழுவதும் தாங்க முடியலையே!

நாதஸ்வரத்தில் தங்கைகள்
சன் டிவியில் வாரநாட்களில் 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நாதஸ்வரம் தொடரில் தங்கைகள் மூன்று பேரையும் கர்ப்பிணி கதாபாத்திரங்களாக மாற்றிவிட்டார் இயக்குநரும் ஹீரோவுமான திருமுருகன். இதில் ஒரு தங்கைக்கு குழந்தை இப்பொழுதுதான் குழந்தை பிறந்திருக்கிறது. மற்ற தங்கைகளுக்கு எப்போ டெலிவரியோ தெரியவில்லை.

முந்தானை முடிச்சில் பரிதாபம்
மாலை நேரத்தில் ஒளிபரப்பாகும் முந்தானை முடிச்சு தொடரில் அக்காவிற்கு குழந்தை பிறப்பதில் சிக்கல். தங்கை கர்ப்பமான உடன் அதை வைத்து கொஞ்ச நாட்கள் கதையை ஓட்டினார்கள். இப்போது கடைசி தங்கையும் கர்ப்பமாக இருக்கிறாள். ஆனால் அக்கா கர்ப்பமாக முடியாது என்பதற்காக தன்னுடைய கர்ப்பத்தை கலைக்கவும் முடிவு செய்துவிட்டாள் தங்கை. இதை விட கொடுமை கல்யாணம் ஆகி கணவனுடன் அறியாமல் உறவில் ஈடுபட்டு கர்ப்பமான கொடுமையும் இந்த சீரியலில் இருக்கிறது.

தென்றல் கொடுமை இருக்கே?
இரவு ஒன்பது மணியாகிவிட்டால் சன் டிவியில் தென்றல் தொடரைப் பார்ப்பதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கிறது. இதில் தங்கை கதாபாத்திரத்தை கர்ப்பமாக்கிய இயக்குநர் இப்பொழுதுதான் கதாநாயகி கர்ப்பமாக இருப்பதாக கதையை கொண்டு செல்கிறார். அதுவும் இப்போது இருக்கிற மருத்துவ வளர்ச்சியில் கர்ப்பத்தை கன்பார்ம் செய்ய ஒரு மணி நேரம் போதும். ஆனால் இந்த தொடரிலோ இரண்டு வாரமாக இதனை இழுத்தடித்து கதாநாயகியை ஓவராக அலற விடுகிறார் இயக்குநர் குமரன். இதெல்லாம் ஓவராக இல்லையா?.


Click it and Unblock the Notifications











