சின்னத்திரையில் கோலோச்சும் வில்லிகள்... பாதிப்பிற்கு ஆளாகும் இல்லத்தரசிகள்?
அவளை விடக்கூடாது... குடும்பத்தோட அழிக்கணும்... காலம் பூராவும் அவளை அழவைக்கணும்... குடும்பத்தோட ஊரை விட்டு ஓட வைக்கணும்... இது ஏதோ பக்கத்து வீட்டில் சண்டையின் போது கேட்கும் வசனம் அல்ல...
டிவி சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் வில்லிகள் பேசும் வசனம்தான். எந்த சேனலைத் திருப்பினாலும் அடுத்தவரின் குடும்பத்தைக் கெடுப்பது எப்படி என்று ஏதாவது ஒரு வில்லி கண்களை உருட்டி, அடியாளுக்கு ஆலோசனை சொல்லிக்கொண்டிருக்கிறார்.
இப்படி தொலைக்காட்சி தொடர்களில் பெரும்பாலும் பெண்களை வில்லத்தனமாக சித்தரிப்பது குடும்ப பெண்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பெரும்பாலான பெண்கள் வில்லிகளுக்காகவே சீரியலைப் பார்க்கத் தொடங்கியுள்ளனர். வில்லிக்கு கிடைக்கும் வரவேற்பைப் பார்த்து கதாநாயகியாக நடிக்கும் நடிகைகள் கூட வில்லியாக நடிக்க ஆசைப்படுகின்றனர்.

அரைமணிக்கு ஒருமுறை
சன்டிவி, கலைஞர்டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், ஜெயா டிவி என அனைத்து சேனல்களிலும் அரை மணிநேரத்திற்கு ஒருமுறை நெடுந்தொடர்கள் ஒளிபரப்பாகின்றன.

பழிவாங்கும் கதை
பல தொடர்களில் நடிகைகள் தான் வேறு நபர்களாக இருக்கிறார்களே தவிர கதையெல்லாம் ஒரே மாதிரியாகத் தான் இருக்கிறது. அதையும் மக்கள் நேரம் தவறாமல் பார்ப்பது தான் மிகப்பெரிய வேடிக்கை.

ஹீரோயின் அழுகை
பெரும்பாலான தொடர்களில் கதாநாயகிகள், அவர்களின் அம்மாக்கள் அழுது வடிகின்றனர்.
ஒரு சில கேரக்டர்கள் தவிர ஒரு தொடரில் இரண்டு அல்லது மூவர் கூட வில்லியாக நடிக்கின்றனர். இதில் பெரும்பாலும் கூட இருந்தே குடும்பத்தைக் கெடுப்பது, குழி தோண்டுவது போன்ற கதாபாத்திரங்கள்தான். இது ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடாக இருக்குமோ? என்று எண்ணத் தோன்றினாலும், சீரியல்களின் ஹெட்கள் பெரும்பாலும் பெண்கள் என்பதால் அப்படியும் கூற முடியாது.

சினிமாவில் வில்லன் சீரியல்களில் வில்லி
பெரிய திரையில் வில்லன்களின் ஆதிக்கம் என்றால், சீரியல்களில் வில்லிகளின் ஆதிக்கமாக இருக்கிறது. அதுவும் அழகான வில்லிகள் என்பதுதான் குறிப்பிடத்தகுந்த அம்சம்.

வக்கிர எண்ணங்கள்
பல தொடர்களில் லாஜிக் என்பதே சுத்தமாக இருப்பதில்லை. வில்லியாக சித்தரிக்கப்படும் நட்சத்திரங்களை கொலைகாரி உள்ளிட்ட கிரிமினல்களாக காட்டுவதால், அந்த தொடர்களில் மூழ்கிப்போகும் குடும்ப பெண்களிடையே மன அழுத்தமும் வக்கிர எண்ணங்களும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று எச்சரிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

வரம்மீறிய வசனங்கள்
தொலைக்காட்சித் தொடர்களை பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை பார்த்து ரசிக்கின்றனர். இதில் பேசப்படும் வசனங்கள் அப்படியே குழந்தைகளுக்கு மனப்பாடம் ஆகி பாதிப்பை ஏற்படுத்துகிறது.

கலாச்சார சீரழிவு
இந்த தொடர்களில் சமூகத்திற்கு தேவையான நல்ல விஷயங்களை கூறுவதாக இருக்கவேண்டுமே தவிர, கதைக்களத்திற்கு தேவை என்பதற்காக வக்கிரமான, வன்முறைக் காட்சிகளை வரம்பு மீறி பதிவு செய்வது கலாச்சார சீரழிவுக்கு வழிவகுக்கும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

மூழ்கும் குடும்பப் பெண்கள்
வீட்டில் கணவரை வேலைக்கு அனுப்பிவிட்டு, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு தொலைக்காட்சியே கதி என்று கிடக்கும் பெண்கள் இதுபோன்ற வில்லத்தனங்களைப் பார்த்து தங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சியை தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள். நம்முடைய மாமியார், நாத்தனார் இப்படித்தான் வில்லிகளாக இருப்பார்களோ என்று சிலர் சந்தேகப் பிராணிகளாக மாறிவருகின்றனர் என்பதுதான் உண்மை.


Click it and Unblock the Notifications











