எங்க ரெண்டு பேரையும் ஒரே நேரத்துல ஒருத்தன் லவ் பண்ணி ஏமாத்திட்டான் - உர்ஃபி ஜாவேத் வேதனை!
மும்பை: தனது வெளிப்படையான பாணி மற்றும் துணிச்சலான கருத்துக்களால் அறியப்பட்ட உர்ஃபி ஜாவேத், தனது கம்பீரமான மறுபிரவேசத்தின் மூலம் மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்துள்ளார். இந்த முறை, அவர் 'ஸ்ப்ளிட்ஸ்வில்லா எக்ஸ்6’ நிகழ்ச்சியில் நடிகை நியா சர்மாவுடன் இணைந்து Mischeif Maker ஆக (குறும்புக்காரர்) களமிறங்குவதே அதற்குக் காரணம். காதல் மற்றும் பணத்திற்கு இடையிலான போட்டியை மையமாகக் கொண்ட இந்த நிகழ்ச்சியில், உர்ஃபியும் நியாவும் போட்டியாளர்களுக்குப் புதிய திருப்பங்களையும் எதிர்பாராத நிகழ்வுகளையும் கொண்டு வர உள்ளனர்.
சமீபத்தில் தைனிக் பாஸ்கர் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், உர்ஃபி ஜாவேத், நியாவுடனான தனது பிணைப்பு மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் வெளிப்படையாகப் பேசினார். இந்த சீசனில் குறும்புக்காரர்களாகத் தங்கள் பங்கு குறித்துப் பேசிய அவர், "நானும் நியா சர்மாவும் இந்த சீசனின் குறும்புக்காரர்கள். யாருக்கும் சாதகமாக முடிவெடுப்பது எங்கள் வேலையல்ல, மாறாக விளையாட்டை மேலும் சுவாரஸ்யமாக்குவதே எங்கள் பணி" என்று குறிப்பிட்டார்.

மேலும், "போட்டியாளர்கள் தாங்கள் முழு விளையாட்டையும் புரிந்து கொண்டுவிட்டதாகவும், எல்லாம் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் உணரும்போதுதான் நாங்கள் களமிறங்குவோம். அவர்களின் முழுத் திட்டத்தையும் உலுக்கும் வகையில் திருப்பங்களை ஏற்படுத்துவோம். அதாவது, எல்லாம் எளிதாகத் தோன்றும் நேரத்தில், நாங்கள் வந்து விளையாட்டு இனிதான் ஆரம்பம் என்று அவர்களுக்கு உணர்த்துவோம்" என்றார் உர்ஃபி.
நியா சர்மாவுடனான தனது ஜோடி குறித்துப் பேசும்போது, ஆரம்பத்தில் மற்றொரு பெண் தன்னுடன் இணைகிறார் என்றதும் நிகழ்ச்சி எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுந்ததாகவும், “அது நியா சர்மா என்று அறிந்தவுடன், எல்லா சந்தேகங்களும் மறைந்துவிட்டன. யாராவது என்னுடன் வர வேண்டும் என்றால், நியாவைப் போன்ற ஒரு வலுவான மற்றும் அனுபவமிக்க ஆளுமையாக இருக்க வேண்டும் என்று உணர்ந்தேன்” என்றார்.
நிகழ்ச்சிக்கு முன்னரே இருவரும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் என்றாலும், அது சாதாரண வாழ்த்துக்களாக மட்டுமே இருந்தது. ஆனால், படப்பிடிப்பின் போது இவர்களது பிணைப்பு மிகவும் வலுப்பெற்று, படப்பிடிப்பு முடிந்த பின்னரும் நல்ல நண்பர்களாக மாறியதாக உர்ஃபி பகிர்ந்து கொண்டார்.
இந்த சீசனின் மையக் கருவான 'பணம் மற்றும் காதல்' குறித்து நிஜ வாழ்க்கையில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க நேர்ந்தால், "நான் எந்த தயக்கமும் இல்லாமல் காதலைத் தேர்ந்தெடுப்பேன். பணம் முக்கியம், ஆனால் இந்த தருணத்தில், காதல் என் வாழ்க்கையில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனென்றால் நான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்" என்று உர்ஃபி மனம் திறந்தார். மேலும், தற்போது தான் தனிமையில் இருப்பதாகவும், சரியான துணையைத் தேடி வருவதாகவும் குறிப்பிட்டார்.
தனது வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு, “நேர்மையாகச் சொல்லப்போனால், என் தேவை மிகவும் எளிமையானது: அவர் உயிருள்ள மனிதராக இருக்க வேண்டும், அவ்வளவுதான்! அதுதான் என் கனவு. எனக்கு முழுமையோ அல்லது அளவுகோல்களோ தேவையில்லை. என் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க எனக்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது, ஆனால் பிரச்சனை என்னவென்றால், எனக்கு ஒரு பையன் கிடைக்கவில்லை” என நகைச்சுவையுடன் பதிலளித்தார் உர்ஃபி.
ஸ்ப்ளிட்ஸ்வில்லாவில் போட்டியாளர்கள் தனிமையில் இருப்பதாகப் பொய் சொல்லி, பின்னர் வேறு ஒருவருடன் டேட்டிங் இருப்பது தெரியவருவது குறித்து, "இது கேட்பதற்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஒரு டேட்டிங் நிகழ்ச்சி, இதில் தனிமையில் உள்ளவர்கள் மட்டுமே வர வேண்டும். புகழ் அல்லது திரையில் தோன்றுவதற்காக ஒருவர் பொய் சொல்லி நிகழ்ச்சிக்கு வந்தால், அது முற்றிலும் தவறு" என்று அவர் வருத்தம் தெரிவித்தார்.
மேலும், "உங்களுக்கு வெளியில் காதலி இருக்கும்போது, நிகழ்ச்சியில் வேறு ஒருவருடன் உறவை ஏற்படுத்துவது முற்றிலும் நியாயமற்றது. இத்தகைய விஷயங்களை நான் ஒருபோதும் ஆதரிப்பதில்லை" என தனது கருத்தை உறுதியாகப் பதிவு செய்தார் உர்ஃபி. தான் சிறு வயதில் டிவியில் பார்த்த ஒரு நிகழ்ச்சியில் இன்று ஒரு பகுதியாக இருப்பது விசித்திரமாகவும் நல்லதாகவும் உணர்வதாகவும் அவர் கூறினார்.
“ஒரு நாள் நான் இந்த மேடைக்கு வந்து மக்களை மகிழ்விப்பேன் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. இந்த உணர்வு மிகவும் சிறப்பானது” என்று தனது கடந்த கால கனவுகளைப் பகிர்ந்து கொண்டார். ஸ்ப்ளிட்ஸ்வில்லா போட்டியாளர் நிஹாரிகா திவாரியுடனான தனது கடந்தகால உறவு குறித்து சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளுக்குப் பதிலளித்த உர்ஃபி, “எங்கள் கதை என்னவென்றால், நிஹாரிகா திவாரி எனக்கு முன்பே தெரியும்” என்று விளக்கினார்.
“எங்கள் இருவருடனும் ஒருத்தன் ஒரே நேரத்தில் டேட்டிங் செய்து ஏமாற்றினார். அப்படித்தான் நாங்கள் ஒருவரையொருவர் அறிந்துகொண்டோம். இதைத் தவிர, எங்களுக்கிடையில் வேறு எந்தச் சண்டையோ அல்லது பஞ்சாயத்தோ இல்லை” என்று தெளிவுபடுத்தினார்.
இந்த சீசனில் நிஹாரிகா திவாரி ஸ்ப்ளிட்ஸ்வில்லா நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உர்ஃபி ஜாவேத்தையும் நிஹாரிகாவையும் இளைஞர் ஒருவர் ஒரே நேரத்தில் காதலித்து ஏமாற்றியுள்ளார்.


Click it and Unblock the Notifications











