இளையராஜா, பாரதிராஜா உடன் மீண்டும் நான்…. வைரமுத்து!
இளையராஜா உடன் நான் மீண்டும் இணைவேன் என்பதை காலம் தீர்மானிக்கும். காலத்தின் கட்டளையை ஏற்று செயல்படுவேன் என்று கவிப்பேரரசு வைரமுத்து கூறியுள்ளார்.
பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து மூவரும் மீண்டும் இணைவார்களா? என்பதுதான் திரை உலக ரசிகர்கள் பெரும்பாலோனோரின் கேள்வி.
மூவரும் இணைந்து 80களில் திரையுலகில் செய்த மாயங்கள் ஏராளம். இசைஞானியின் இசைக்கு ஏற்ற வரிகளா? வைரமுத்துவின் வைர வரிகளுக்கு ஏற்ற இசையா? என்று ஒன்றை ஒன்று போட்டு போடும்.
இப்பொழுது மூவரின் பயணமும் வெவ்வேறு திசைகளில் மூவரும் மீண்டும் இணையவேண்டும் என்றே ரசிகர்கள் பலரும் விரும்புகின்றனர். இது மீண்டும் நிகழுமா? என்ற கேள்வி விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கவிப்பேரரசு வைரமுத்துவிடம் முன்வைக்கப்பட்டது.

இளையராஜா - வைரமுத்து
இளையராஜா உடன் நான் இணைந்து பணியாற்றிய நாட்களை என்னால் மறக்க முடியாது. காலத்தில் சூழ்நிலையால் இருவரின் பாதையும் வேறாகிவிட்டது. இனி என்னை நம்பித்தான் இளையராஜா இருக்கவேண்டும் என்ற நிலை இல்லை. அவரை நம்பித்தான் நான் எழுத வேண்டும் என்ற நிலையும் இல்லை.

காலத்தின் கட்டளை
நாங்கள் மீண்டும் இணைவோமா என்பதை காலம் தீர்மானிக்கும் காலத்தின் கட்டளையை நான் மறுக்க மாட்டேன்.

பாரதிராஜா உடன்
என் மனம் வருத்தப்படும் போதெல்லாம் அலைகள் ஓய்வதில்லை படத்தில் வரும் ‘ஆயிரம் தாமரை மொட்டுக்களே... வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே'... என்ற பாடலைத்தான் கேட்பேன். அந்த பாடலை எழுதிய நிமிடங்களை மறக்க முடியாது.

பொன் மாலைப் பொழுது
நன்றாக பாடுவீர்களே... ஒரு பாடல் பாடுங்களேன் என்று தொகுப்பாளர் கோபிநாத் கேட்கவே... கவிதைக்குத்தான் பொய்யழகு என்பார்கள் கோபிநாத்துக்குமா? என்று கேட்டுவிட்டு முதல் பாடலான இது ஒரு பொன்மாலைப் பொழுது பாடலின் வெளியாகாத வரிகளை அழகாக பாடினார் கவிஞர்.

ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா?
தமிழ்சினிமா ரசிகர்களின் ரசனை இன்றைக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறுகிறது. இளையாராஜாவும், பாராதிராஜாவும், நானும், 80களில் எழுதியதைப் போல எழுதி, இசையமைத்து படமாக்கினால் அதை பழைய பாடல் என்று கூறிவிடுவார்கள். இப்போதை காலத்திற்கு ஏற்ப நவீன பாணியில் எழுதி இசையமைத்து படமெடுத்தால் எங்கே போயிற்று இவர்களின் பழைய ஜீவன் என்று கேட்பார்கள் என்றார் வைரமுத்து.

முதல் பிரசவம்
பொன்மாலைப் பொழுது பாடல் ரெகார்ட்டிங் முடிந்த நேரத்தில்தான் வைரமுத்துவின் மனைவிக்கு பிரசவம் நிகழ்ந்திருந்ததாம். அப்போது வைரமுத்து தன் மனைவியிடம் உனக்கும் எனக்கும் முதல் பிரசவம் என்று சொன்னதை நிகழ்ச்சியில் நினைவு கூர்ந்தார் கோபிநாத்.

பத்தாயிரம் பாடல்கள்
சினிமாவிற்கு வந்து இதுவரை பத்தாயிரம் பாடல்களை எழுதியுள்ள வைரமுத்துவை கவுரவிக்கும் விதமாக சூப்பர் சிங்கரில் வைரமுத்துவின் பாடல்களை போட்டியாளர்களை பாடினார்கள். போட்டியின் நடுவர்களாக மனோ, ஸ்ரீனிவாசன், சுஜாதா பங்கேற்றனர். நவம்பர் 20 முதல் 22 வரை மூன்று நாட்களுக்கு வைரமுத்துவின் பாடல்களை பாடுகின்றனர் போட்டியாளர்கள்.


Click it and Unblock the Notifications











