வாணி ராணி கதை ஏன் நகரமாட்டேங்குது?
சன் டிவியின் வாணி ராணி சீரியல் கடந்த 10 எபிசோடுகளாக கதை ஒரே இழுவையாக இருக்கிறது நேயர்கள் தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர்.
பூமிநாதன் சாமிநாதன் சண்டையால் வாணி ராணி சகோதரிகள் பிரிவு நேரிடுகிறது.
ராணியின் குடும்பத்தை வீட்டை விட்டு வெளியேறச் சொல்கிறாள் வாணி. அடுத்த வேளை சோற்றுக்கு வழியில்லை என்று தெரிந்தும் தைரியமாக குடும்பத்தைக் கூட்டிக்கொண்டு வெளியேறுகிறான் சாமிநாதன்.

வாணியின் நிலை
சகோதரியின் பிரிவு வாணியின் உடல்நிலையை பாதிக்கிறது. படுத்த படுக்கையாக கடந்த 10 எபிசோடுகளாக இருக்கிறாள் வாணி.

ராணியின் குழப்பம்
வீட்டை விட்டு வெளியேறி கோவிலுக்குள் குடியேறுகின்றனர் ராணி குடும்பத்தினர். ஆனாலும் அதை வீடாகவே நினைத்து அனைத்து வேலைகளையும் செய்கிறாள் ராணி.

நடுவுல கொஞ்சம் மறதி
அக்கா வாணியுடன் பேசியதும்... வீட்டை விட்டு வெளியே போகச்சொன்னதும் வாணிக்கு மறந்து போய்விடுகிறது. ஆனால் குழந்தைகள், கணவன் பெயர் மட்டும் நினைவிருக்கிறது.

செல்வியின் கோபம்
பெரியம்மா வாணியை பார்க்க போவதற்கு மாமனார் அனுமதி மறுக்கிறார். இதுநாள் வரை அமைதியாக இருந்த செல்வி சீறிக்கொண்டு சண்டை போட்டுவிட்டு வெளியே கிளம்புகிறாள்.

விவாகரத்து செய்துவிடு
காணாமல் போன அம்மாவை தேடி கண்டுபிடிக்க முடியாத செல்வி, மாமனாரிடம் உதவி கேட்கவே அதற்கு மகனை விவாகரத்து செய்தால் பெற்றோர்களை கண்டுபிடித்து தருவதாக கூறுகிறார். அதற்கு மறுத்துவிடுகிறாள் செல்வி.

வாணிக்கு எப்போ சரியாகும்
காணமல் போன ராணியும், அவளது குடும்பமும் திரும்ப வந்தால் மட்டுமே வாணி பிழைக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 10 எபிசோடுகளாக அதே நிலைதான். ராணியை தேடி அனைவரும் அலைகின்றனர்.

ராணியின் புத்தி தெளிவாகுமா?
ராணிக்கு சித்தம் கலங்கிவிட்டதாக நினைத்து கணவன் சாமிநாதனும், குழந்தைகளும் அழுகின்றனர். வீட்டுக்கு போனால் மட்டும்தான் பழைய நிலை வருமா?.

175 எபிசோடுகள்
வாணி ராணி இதுவரை 175 எபிசோடுகள் நிறைவடைந்துள்ளது. சகோதரிகளின் பாசம், அண்ணனின் குரூரம், குழந்தைகளின் ஒற்றுமை, காதல் என விறுவிறுப்பாக போய்க்கொண்டிருந்த கதை சற்றே நொண்டியடிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 10 எபிசோடுகளாக கதை நகரவே இல்லை என்றும் ரசிகர்கள் முணுமுணுக்கத் தொடங்கியுள்ளனர்.

இனி என்னவாகும்?
வாணியும் ராணியும் மீண்டும் இணைவார்களா? மாமனாரிடம் போட்ட சபதத்தை செல்வி நிறைவேற்றுவாளா? பூமிநாதன் திருந்தி விடுவானா? வாணியின் மாமியார் நாத்தனார் வில்லத்தனம் என்னவாகும், பூங்கொடியின் காதல் நிறைவேறுமா? என பல கேள்விகளுக்கு இனி வரும் எபிசோடுகளின் விடை தெரியும். சன் டிவியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் வாணி ராணி தொடரில் இரட்டை வேடத்தில் ராதிகா நடிக்க பப்லு, வேணு அரவிந்த், வீணா வெங்கடேஷ், அருண், விக்கிசுதீப், நிகிலா ராவ், ராஜ்குமார், பேபி நேஹா மற்றும் பலர் நடித்துள்ளனர். ராடான் டிவி நிறுவனத்திற்காக ஓ.என். ரத்னம் இயக்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications











