15 வயதில் திருமணம்.. சிரிப்புக்கு பின்னால் இருக்கும் வலி.. பாக்யலட்சுமி செல்வியின் சோக கதை!
சென்னை: விஜய் டிவியில் கடந்த பல வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த பாக்கியலட்சுமி தற்போது முடிவடைந்துள்ளது. இனியா திருமண வாழ்க்கையில் நடந்த பிரச்சனைகளை தொடர்ந்து சீரியல் கதை தீவிரமாக சென்றது. கிளைமாக்ஸ் எப்படி இருக்கும் என ரசிகர்கள் அனைவரும் குழப்பத்தில் இருந்தனர். ஆனால், கதையை சுவாரஸ்யமாக்கி பாக்கியலட்சுமி வீட்டில் வேலை செய்யும் செல்வியின் மகனுக்கு இனியாவை திருமணம் செய்து வைத்து பாக்கியலட்சுமி சீரியலை சிறப்பாக முடித்து விட்டனர்.
இந்த சீரியலில்,செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் கம்பம் மீனா, தற்போது இவர், Galatta Pink யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், ஆறு வருடம் இந்த சீரியல் நாங்கள் ஒரு குடும்பமாகத்தான் ஒன்றாக இணைந்து நடித்தோம். இந்த சீரியல் முடிந்துவிட்டது என்று நினைக்கும் போது எங்களுக்கு வருத்தமாக உள்ளது. சீரியலில் செல்வி என்றால் கதாபாத்திரம் இவ்வளவு பெரிய பெயரை பெற்று தரும் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவே இல்லை. எந்த இடத்திற்கு சென்றாலும் செல்வி என அழைத்து மக்கள் பேசுவதை கேட்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.

நடிகை கம்பம் மீனா: தொடர்ந்து பேசிய மீனா, பாக்யலட்சுமி சீரியலில் எப்படி தனி ஆளாக இருந்து நான் என் மகனை வளர்த்தேனோ அதேபோல, தான் என்னுடைய நிஜ வாழ்க்கையில் தனி ஆளாக இருந்து என்னுடைய இரண்டு மகன்களை வளர்த்து வருகிறேன். 15 வயதிலேயே எனக்கு என்னுடைய தாய் மாமனுடன் திருமணம் நடந்து விட்டது. அதன் பிறகு எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நாங்கள் இருவரும் பிரிந்து விட்டோம். அவர் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.
கேன்சரால் இறந்த அம்மா: நான் நடிக்க வருவதற்கு முன்பாகவே என்னுடைய அம்மா 2004 ஆம் ஆண்டு கேன்சரால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார்கள். அவர்களுடைய பெரிய கவலையே நான் தான், அம்மாவிற்கும் 15 வயதில் திருமணம் நடந்தது 22 வயதாக இருக்கும் போது அப்பா இறந்துவிட்டார். அதன் பின், விதவையாக தன்னந்தனியாக வாழ்ந்து மிகவும் கஷ்டப்பட்டு என்னையும் என் அக்காவையும் வளர்த்தார்கள். எனக்கும் அதே மாதிரி ஒரு வாழ்க்கை அமைந்துவிட்டதே என நினைத்து அம்மா மன வேதனையில் இருந்தார். அந்த வேதனையோ அவரின் உயிரை பறித்துவிட்டது. அதன் பிறகு தான், நான் வேறு வழியே இல்லாமல் 2009 ஆம் ஆண்டு சீரியலில் நடிக்க வந்தேன். எனக்கும் சினிமாவிற்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை, ஆனால், அம்மாவிற்கு சினிமா என்றால் ரொம்ப பிடிக்கும் இப்போது அம்மா இருந்து இருந்தால், நிச்சயம் ரொம்ப சந்தோஷப்பட்டு இருப்பார்கள்.
மனதில் இருந்த வெறி: என்னுடைய ஒரே குறிக்கோளை இரண்டு மகன்களையும் எப்படியாவது ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்ற வெறி மட்டும் தான் இருந்தது. இதனால் என்னுடைய இரண்டு மகன்களும் ஹாஸ்டலில் தங்கித்தான் படித்தார்கள். அவர்களிடம் நான் எப்போதுமே சொல்லுவேன், என்னால், உங்கள் அருகில் இருந்து அன்பு காட்ட முடியாது, நான் உழைத்தால் தான் எல்லாமே நடக்கும் என்று என் மகன்களுக்கு சொல்லி சொல்லி வளர்ப்பேன், அதை அவர்கள் இருவருமே புரிந்து கொண்டு, இப்போது எனக்கு பக்க பலமாக இருக்கிறார்கள் என்று கம்பம் மீனா அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











