'அத்தை மகன், மாமன் மகள்'.. அணையாத காதல்: 'நீயா நானா'வில் நினைவுகள்
தகவல் தொழில்நுட்பத்தில் அபரிதமான வளர்ச்சியினால் முகங்களுடன் உரையாடுவதை விடுத்து முகநூலில் விடிய விடிய உரையாடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர் இன்றைய இளம் தலைமுறையினர்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை அதாவது 1970, 80 களின் கால கட்டத்தில் இளைஞர்களாக இருந்தவர்கள் இன்றைய கால கட்டத்திய இளைஞர்களைப் பார்த்து அந்த காலத்தில நாங்க எப்படி இருந்தோம் தெரியுமா என்று ஆரம்பித்து கதை சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள்.
அப்படி எழுபது, எண்பதுகளில் வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டாடியவர்களும், அந்த காலத்தில் பஞ்சம், பட்டினியில் அடிபட்டவர்களும் தங்களின் அனுபவங்களை இந்தவார நீயா நானா நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டனர்.

கண்ணாமூச்சி விளையாட்டு
80களில் கொண்டாட்டமே தெருவிளையாட்டுதான், இளம்பெண்கள், கிளித்தட்டு, கண்ணாமூச்சி, ஐஸ்பார், கோ கோ, நொண்டி என ஓடி விளையாயாடுவார்கள் அதை பலரும் நினைவுபடுத்தினர்.

வாழ்த்து அட்டைகள்
கடிதம் எழுதுவதும் திருவிழா, பண்டிகைக்கு வாழ்த்து அட்டைகள் அனுப்புவதும் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு சுகமான அனுபவம். அதேபோல நடந்து சென்று சினிமா பார்த்தது. மாட்டுவண்டி பூட்டி கொடைத் திருவிழாவிற்குப் போனது என நினைவுகளை திரும்பிப் பார்த்தார் ஒரு பெண்.

அத்தை மகள் நினைவில்…
காதல் என்பது அனைத்து காலகட்டத்திலும் இருக்கக் கூடியதுதான். அதுவும் எண்பதுகளில் காதல் மென்மையானது. அதிகம் நாணம் கொண்டது என்றார் ஒரு பெண். இன்றைக்கு போல அல்லாமல் அன்றைக்கு வீட்டிற்கு வரும் அத்தை மகளுடன் யாருக்கும் தெரியாமல் பேசுவது கூட சுக அனுபவம் என்றனர்.

களத்துமேடும் கம்மா கரையும்…
அதைவிட அற்புதமாய் மரங்கள் சூழ்ந்த வீடு, கம்மாக்கரையும், களத்துமேடும், ஒணான் அடித்து புதைத்து வைத்த சம்பவத்தையும் நினைவு கூர்ந்தார் ஒருவர்.

அரிசியை பார்க்கலையே..
அதே எழுபது எண்பதுகளில்தான் அரிசியைக் கூட கண்களில் காணமுடியாத அளவிற்கு பஞ்சம் ஏற்பட்டது என்றனர். சரியான மருத்துவ வசதியின்றி பிரசவத்தில் இறந்த தாய்மார்கள் அதிகம் என்று கூறினர் மற்றொரு தரப்பினர்.

ஆண்களுக்கு அதிக வசதிq
பெண்களை படிக்க வைக்க யோசிப்பார்கள். ஆண் பிள்ளைக்கு சமமாக அவர்களுக்கு சரியான உணவும், சத்தான காய்கறியும் கிடைக்காது என்றார் ஒரு பெண். அதை அனைவருமே ஒத்துக் கொண்டனர்.

கூலி கிடைக்காது…
உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்காது... ஆண்டான் அடிமை பிரச்சினை அதிகம், அதேபோல் சாதீய ரீதியான அடக்குமுறைகளும் அதிகம் என்று கூறினர்.

வெறுமையில் வாழ்கின்றனர்.
80களில் வாழ்ந்தவர்கள் இறந்த காலத்தைப் பற்றியோ, அல்லது எதிர்காலத்தைப் பற்றியோ கவலைப்படுகின்றனர். இதற்குக் காரணம் அவர்களின் மனதில் தோன்றும் வெறுமைதான் என்றார் சிறப்பு விருந்தினர் இளங்கோ கல்லாணை. இதற்குக் காரணம் மனஅழுத்தம்தான் என்றார்.

பின்னோக்கிப் போகும் நினைவுகள்…
இதுபோன்று பின்னோக்கிப் போவது முதலில் நோய் என்று அறியப்பட்டது. இப்போது மிகவும் நல்லது என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது. வயதாகிவிட்டது என்ற கவலைதான் அவர்களை பின்னோக்கிச் செல்ல நினைக்கிறது. எனவே வயதாகிவிட்டது என்று கவலைப் படாமல் மனதளவில் இளமையாக வாழலாம் என்றார் எழுத்தாளர் அபிலாஷ். நிகழ்காலத்தில் நிகழும் நிஜங்களை ஏற்றுக் கொள்ளாமல் கண்மூடித்தனமாக வாழக்கூடாது என்றும் கூறினார் அபிலாஷ். இன்றைக்கு நேர்மையே நகைச்சுவையாக இருக்கிறது.

நிகழ்காலத்தில் வாழுங்கள்
எண்பதுகளைப் பொற்காலம் என்று கூறியவர்கள் பலரும் இன்றைக்கு அச்சத்தோடுதான் இருக்கின்றனர். பழைய நினைவுகள் அசைபோட இனிமையானதுதான். இன்றைய இளைய தலைமுறையினரை புரிந்து கொண்டு, நிகழ்காலத்தில் நிஜமாக வாழுங்கள். ஒரேடியாக இறந்தகாலத்தில் மூழ்கிவிடாமல், எதிர்காலத்தைப் பற்றி பயப்படாமல் இருப்பதுதான் நல்லது. வறுமையில் இருந்து மீண்டால் நல்லது என்று நினைத்தவர்கள் இன்றைக்கு நோயாளிகளாக இருக்கின்றனர். எனவே எந்த கால கட்டத்தில் வாழ்ந்தாலும் எளிமையாக வாழ்வது நல்லது என்று நிகழ்ச்சியை முடித்தார் நிகழ்ச்சி நடத்துனர் கோபிநாத்.

நினைவுகளை கிளறிய நீயா நானா
நேற்றைய நிகழ்ச்சியில் பழைய நினைவுகளை அசைபோட்டு ஆசையோடு பேசும் போது பெரும்பாலோனோரும் ஆசையோடு, ரசித்து, கிலாகித்துச் சொன்னார்கள். அதை கேட்டவர்களும் தங்களை மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தனர். பார்வையாளர்கள் பலருக்கும், குறிப்பாக எண்பதுகளின் இனிமையை அனுபவித்தவர்கள் பலருடைய நினைவுகளை கிளறிவிட்டது இந்த நிகழ்ச்சி என்றே கூறலாம்.


Click it and Unblock the Notifications











